காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, May 26, 2009

இடம்பெயர்ந்த மனிதர்கள்- அரபு நாவலாசிரியர் எலியாஸ் கவுர் - அறிமுக குறிப்புகள் மற்றும் நேர்காணல்










" அவன் ஒரு மனிதனாகவும், அந்நியனாகவும் இருக்கிறான், அவனின் கதைகளை அவன் யாரிடத்திலும் சொல்லவில்லை. அவனின் கதை சொல்லப்படுவதற்கானது என்பது கூட அவனுக்கு தெரியாது. அவன் சிந்திப்பது, அவன் சிந்தித்து வருவது எல்லாமே தானும் மற்றவர்களை போல் என்பது தான். அவன் யாரிடத்திலும் தன்னை பற்றி சொல்லவில்லை.ஏனென்றால் அவை மற்றவர்களிடத்தில் சொல்லப்பட முடிவதற்கான ஒன்றாக அவனுக்கு தெரியவில்லை. அவன் ஒரு மனிதனாகவும், அந்நியனாகவும் இருக்கிறான். அவனின் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு நினைவில்லை. அவனின் கதை மத்திய பகுதியில் இருக்கிறது என்பதை பார்க்கிறான். ஆனால் எப்படி ஆரம்பித்தது என்பதை பற்றி கேட்கவில்லை. அதன் இறுதி பகுதியில் அவன் இருக்கிறான்."
(எலியாஸ் கவுரியின் City Gates என்ற நாவலின் துவக்க வரிகள்)

நாடுகடத்தல், இடப்பெயர்வு சக மனிதனுக்குள் ஏற்படுத்தும் வலிகள், விகசனங்கள் முக்கியமானவை. கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டவை. அரபு இலக்கியங்கள் பெரும்பாலும் இந்த வெளிப்பாடுகளுக்கான முன் முடிவை தருபவை. வாழ்க்கை சார்ந்த நெருக்கடியான அனுபவங்கள், தனித்துவத்தின் வித்தியாசங்கள் இவற்றின் கூடலிலிருந்து தப்பிக்க இயல்வதன் தெறிப்புகளாக அரபு எழுத்துலகம் அமைந்திருக்கிறது. முன் தீர்மானிக்கப்பட்ட மரபான முடிவுகளாக இல்லாமல் மேற்சொன்ன தனித்துவத்தை படைப்புகளில் முன்வைப்பவை அவை.நகுப் மஹ்பூஸ் மற்றும் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஆகியோரின் வரிசையில் எலியாஸ் கவுர் முக்கிய இடத்தில் வருகிறார். எட்வர்த் செய்த்தின் நெருங்கிய நண்பரான எலியாஸ் கவுர் நாடகத்திலும் குறிப்பிட்டதக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். தன் நாவல்கள் மூலம் புலம்பெயர் மனிதனின் உளவியல் நெருக்கடிகள் குறித்த வாசக நுண்ணுணர்வை ஏற்படுத்தினார். ஒரு நெருக்கடியான தருணத்தில் 1948 ல் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பிறந்த எலியாஸ் கவுர் இஸ்ரேல்- பாலஸ்தீன் ஒடுக்குமுறை விவகாரத்தின் தாக்கத்துக்கு உட்பட வேண்டியதிருந்தது. அவரின் அறிவுத்துவ வாழ்க்கையின் துவக்கமே அரபு தேசிய வாதம் மற்றும் பாலஸ்தீன் ஆதரவு நிலை என்ற துருவத்திற்கு உட்பட்டதாக இருந்தது. 1967 ல் நடந்த அரபு-இஸ்ரேல் போருக்கு பிறகு எலியாஸ் ஜோர்டானுக்கு பயணம் செய்தார். அங்குள்ள பாலஸ்தீன் அகதிகள் முகாமிற்கு சென்ற எலியாஸ் அந்த விவகாரம் பற்றிய படிப்பிற்கு வந்தார். பின்னர் தன்னை பாலஸ்தீன் விடுதலை அமைப்புகளுடன் இணைத்து கொண்டார். பாலஸ்தீன் கொரில்லா படைகளின் தாக்குதல் காரணமாக 1970 ல் அவர் ஜோர்டானை விட்டு பிரான்சுக்கு இடம்பெயர்ந்தார். பாரிஸ் பல்கலைகழகத்தில் உயர்கல்வியை முடித்த அவர் அங்கு 1860 இல் நடந்த லெபனான் உள்நாட்டு போரை குறித்து விரிவாக
எழுதினார். அது அவரை ஐரோப்பிய அறிவுலகில் முன்னோக்க வைத்தது. அந்த தருணத்தில் தான் மிஷல் பூக்கோவுடனான சந்திப்பு நிகழ்கிறது. பூக்கோவுடனான சந்திப்பு இவருக்கு அறிவுலகம் குறித்த ஒளியூட்டத்தை ஏற்படுத்தியது. பிந்தைய கட்டத்தில் லெபனானுக்கு மீண்டும் திரும்பி வந்தார். லெபனானில் பாலஸ்தீன் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக இணைந்தார். அப்போது லெபனானில் மீண்டும் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அந்த பாதிப்பினால் தன் கண்களில் ஒன்றை இழக்க வேண்டியதாயிற்று. பெய்ரூட் ஆய்வு மையத்தில் ஏற்பட்ட தாக்குதலின் பின் விளைவாக அது இருந்தது. பின்னர் அரபு கவிஞரான அதோனிஸ், ஹிசாம் சரபி ஆகியோர் இணைந்து மவாஹிப் என்ற இலக்கிய இதழை பெய்ரூட்டில் ஆரம்பித்தனர். அதன் ஆசிரியர் குழுவில் எலியாஸ் கவுர் இணைந்தார். இவரின் படைப்புலக வாழ்க்கை இதனிலிருந்து துவங்குகிறது எனலாம். பின்னர் இக்குழுவில் பாலஸ்தீன் கவிஞரான மஹ்மூத் தர்வீஷ் இணைந்தார். அங்கிருந்து தான் தன் முதல் நாவலான On the relations of the circle " என்பதை எழுதினார். அது 1975 ல் வெளிவந்தது. அரபுலகில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்திய அந்த நாவலானது தொடர்ந்த இரு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் வெளியானது. அதன் பின்னர் Little mountain வெளியானது. அதன் தொடர்ச்சியில் இரு நாடகங்களையும் , இலக்கிய விமர்சனம் என்ற புத்தகத்தையும் எழுதினார். இந்த புத்தகம் அவரின் படைப்பு பற்றிய நுண்ணுணர்வை வெளிக்கொணர்ந்தது. மேலும் அரபு சூழலில் ஒரு விமர்சகராக அறியப்படுவதற்கு காரணமான ஒன்றாக மாறியது.இது படைப்பின் சமூக பிரக்ஞை மற்றும் படைப்பின் தர நிர்ணய அளவு கோல் என்பதான கேள்விகளுக்கு பதிலளித்தது. இலக்கிய கோட்பாட்டை பற்றிய புரிதலை ஏற்படுத்திய ஐரோப்பிய மார்க்சிய விமர்சகரான டெரி ஈகிள்டன் நாவல் என்பதை மொழி உருவாக்கும் சமூக பிரக்ஞை என்கிறார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதி வரை ஐரோப்பிய உலகில் நாவல் என்பது புனைவாக்கம் குறைந்த வெறும் செய்திகளை உட்கொண்டதாக தான் இருந்தது. உருவவாதிகளின் வருகைக்கு பின்பு நாவலானது வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது. ரஷ்ய உருவவாதியான விக்டர் ஸ்லோவ்ஸ்கி கலை படைப்பை ஒரு கருவியாக கருதினார். உள்ளடக்கம் என்பதை விட படைப்பின் வெளிப்படையான உருவமே முக்கியம் என்றார். இது ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்திற்கு முந்தைய கட்டம் வரை நீடித்தது. எலியாஸ் படைப்பின் விமர்சனம் என்பதை கோட்பாட்டு ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பார்த்தார். படைப்புகள் வெளி சார்ந்து ஒத்த தன்மையாக இருப்பதில்லை. வித்தியாச வாழ்க்கை சூழலின் நெகிழ்விலிருந்தும், நெருக்கடியிலிருந்தும் எழுத்து உருவாகிறது என்றார். தமிழ்ச்சூழலில் ஒரு காலகட்டத்திலும், தற்போதும் தொடர்கிற விவாதமான "படைப்பாளியே விமர்சகராக இருக்க முடியுமா? " என்ற கருதுகோளிலிருந்து எலியாஸ் கவுரும் தப்பவில்லை. இவரின் விமர்சன பார்வை மற்றும் அளவு கோல் சரியான ஒன்றல்ல என்ற விமர்சனம் அரபு படைப்பாளிகள் சிலரால் வைக்கப்பட்டது.இதன் பிறகு எலியாஸ் "palestine affaris" என்ற பாலஸ்தீன் பற்றிய ஆய்விதழின் ஆசிரியரானார். இதில் சில முக்கியவத்துவம் வாய்ந்த வரலாற்று ஆய்வுகள் வெளிவந்தன, அந்த தருணத்தில் அரபு சூழலில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய "Gates of the Sun " என்ற நாவல் எலியாஸிடமிருந்து வெளிவந்தது. லெபனான் உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்த ஒரு கூட்டத்தின் மன நெகிழ்வின் தடய தூரமாக அது இருந்தது. நான் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படித்த அரபு நாவல்களில் இதுவும் ஒன்று. அதன் பிறகு சில நாவல்களின் கடப்பாட்டுக்கு பின்னால் 2002 ல் yalo வெளியானது. லெபனான் உள்நாட்டு போரின் போது குற்றவாளிகளாக்கப்பட்டு நீதித்துறையின் அதிகார சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பற்றிய கதை வெளியாக yalo பரிணமிக்கிறது. City gates மற்றும் Gates of the Sun ஆகிய நாவல்களை தொடர்ந்து இதுவும் அரபுலகில் முக்கியத்துவம் பெற்றது. City gates புறக்கணிக்கப்பட்ட, தூரமாக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வு கொதிநிலையோடு சம்பந்தப்பட்டது. நான் யார் என்ற பிரக்ஞையும், தன் கதை எதுவாக இருக்கும் என்ற அறிவும் அவனுக்கு கிடைக்க தாமதமாகிறது. அந்நியப்பட்டு போன தவிப்புகளிலிருந்து, முகிர்ந்த கதைவெளியாக City gates துவக்கம் பெறுகிறது. யதார்த்த சொல்முறையிலிருந்து நகர்ந்து இன்னொரு புள்ளியை நோக்கி செல்கிறது. இது இவருடைய நாவலின் பலம் கூட. இது எவ்விதத்திலும் பலவீனமான அம்சங்களோடு பயணம் செய்யவில்லை. இதை பற்றி எலியாஸ் கவுர் இஸ்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "நான் தொண்ணூறுகளுக்கு பிந்தைய நாவல்களை எழுதும் போது 'நான்' என்ற பிம்பத்திற்கு எதிர்நிலையில் மற்ற என்ற பிம்பத்தை கண்டேன். நான் என்பது பாலஸ்தீன் அனுபவமாகவும், மற்ற என்பது இஸ்ரேல் பற்றிய காட்சிப்படுத்தலாகவும் இருக்கும். இஸ்ரேல் என்பது ஒரு போலீஸ் அல்லது ஆக்கிரமிப்பாளர் என்பதை மீறி அதன் மனித அனுபவங்களை பார்க்க வேண்டும். இது தான் நான் என்ற பிம்பத்திற்குள் பிரதிபலிக்கும் மாறு பிம்பமாக இருக்கிறது.எலியாஸ் கவுரின் மொத்த நாவல்களை மதிப்பிடும் போது அரசியல் எடுகோள்கள் மற்றும் மனித நடத்தையை பற்றி அடிப்படை கேள்விகள் எழுப்பும் சிக்கலான அணுகுமுறையாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த Yalo நாவலும் அதைத்தான் வெளிப்படுத்துகிறது. நாவல்களுக்காக இவர் அரபு மற்றும் மேற்குலகின் இலக்கிய விருதுகளை வாங்கியிருக்கிறார். மற்ற அரபு படைப்பாளிகளை போல் அல்லாமல் இவரின் நாவல்கள் மற்றும் பிற படைப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் மேற்குலகிற்கு அரபு மொழி படைப்பின் தூரத்தை விட மிக சமீபமாக இவரின் படைப்புகள் வந்தடைகின்றன. எட்வர்ட் செய்த் இவரை இரு நூற்றாண்டு அரபு புலம் பெயர் இலக்கியத்தின் அடையாளம் என்றார். இவரின் மொழியானது படைப்பின் எல்லைகளை கலைத்து , புதிய அடையாளங்களை தோற்றுவிக்கிறது. ஒரு கட்டத்தில் நகுப் மஹ்பூஸை விட என்னை அதிகம் தொடுபவர் எலியாஸ் தான் என்றார் செய்த்"மஹ்மூத் தர்வீஸ், யூசுப் இத்ரிஸ், அதோனிஸ் போன்ற அரபுலகின் முன்னணியுடன் இணைந்து ஜனநாயக சோசலிச அமைப்பை எலியாஸ் தோற்றுவித்தார். இவரின் எழுத்து மொழி செவ்வியல் அரபியிலிருந்து நவீனம் நோக்கி நகர்கிற ஒன்றாகும். தற்போது லெபனானின் தினசரியான அல் முஹ்லாக்கின் வாராந்திர இலக்கிய இணைப்பான அந்நஹாரின் ஆசிரியராக இருக்கும் எலியாஸ் கவுர், கொலம்பியா பல்கலை கழகம், பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகம் ஆகியவற்றில் மத்திய கிழக்கு குறித்து பாடம் நடத்தியிருக்கிறார். மேலும் நியூயார்க் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு குறித்த ஆய்வு பிரிவின் கவுரவ விரிவுரையாளராகவும் எலியாஸ் கவுர் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பெய்ரூட் ரிவியூ என்ற பத்திரிகை இவருடன் நேர்முகம் ஒன்றை நடத்தியது. அதில் எலியாஸ் தன்னுடைய எழுத்து முறையின் தொடக்கம், விரிவாக்கம், மற்றும் லெபனான் உள்நாட்டு போர் குறித்து சொல்லியிருந்தார். அதன் உரையாடல்கள் முக்கியமானவை.







பெய்ரூட் ரிவியூ:-உங்கள் எழுத்துக்கள் எப்படி தொடக்கம் பெற்றன.

எலியாஸ் கவுர்:- நான் பாலஸ்தீன் சமூக அரசியல் இதழில் வேலைக்கு சேரும் முன்பு பிரான்ஸ் பல்கலைகழகத்தில் சமூகவியலை கற்றேன். பல்கலைகழக காலங்களில் நான் விடுதலை இயக்க செயற்பாடுகளில் தீவிரமாக இருந்த காரணத்தால் இலக்கிய வகைப்பாட்டிற்குள் என்னால் வர இயலவில்லை. பின்னர் பாலஸ்தீன் சமூக அரசியல் ஆய்விதழில் வேலைக்கு சேர்ந்த பிறகு இலக்கிய விமர்சனம் குறித்த எழுத்துக்கள் எனக்குள் வர தொடங்கின. அதன் பிறகு நாவல் எழுத தீர்மானித்தேன். அது 1971 ல் On the relations of the circle ( ala ilaqaat al Daira ) என்ற பெயரில் அது வெளிவந்தது. அது பேசப்பட்டது அல்லது தாக்குதலுக்குள்ளானது இரண்டுமே சம அளவில் நடந்தது. அதன் பிறகு Little Mountain வெளிவந்தது. அப்போது தான் நான் எழுதக் கூடியவனாக இருக்கிறேன் என்பதை சுயமாக தீர்மானித்து கொண்டேன்.

பெய்ரூட் ரிவியூ:- நீங்கள் ஒரு எழுத்தாளராக, முன்னாள் போராளியாக லெபனிய சமூகத்தில் கலாசாரத்திற்கும் , அரசியலுக்கும் இடையே பிரிவினை கோடு இருப்பதாக நம்புகிறீர்களா? குறிப்பாக உள்நாட்டு போருக்கு பிந்தைய லெபனிய சமூகத்தில்..

எலியாஸ் கவுர்:- சூழ்நிலைகள் எல்லாம் மிகுந்த அரசியல் மயப்பட்டிருக்கும் இங்கு இந்த பிரிவினை சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். கோட்பாட்டின் அடிப்படையில் நாம் அரசியலையும், கலாசாரத்தையும் பிரிக்க முடியும்.ஆனால் லெபனான் மற்றும் பாலஸ்தீனில் இது சாத்தியமல்ல. காரணம் ஒவ்வொன்றுமே அரசியல் செயற்பாட்டை நோக்கியும், மறு சிந்தனையை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது. இங்கு யாருமே எனக்குள் அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது. இங்கு ஐரோப்பிய அறிவு ஜீவிகள் சொன்னது போன்று மார்க்சிசத்திற்கு எதிரான படைப்புகள் எல்லாம் இலக்கியம் எனவும், அதற்கு ஆதரவானதெல்லாம் அரசியல் என்றும் சொல்ல முடியாது. உண்மையில் அவை இரண்டுமே அரசியல் படைப்புகள் தான். சமூகங்கள் தன் நிலையில் மாற்றமடையும் போது இவற்றை தெளிவாக பிரிக்க முடியாது.

பெய்ரூட் ரிவியூ:- ஆக உங்கள் நோக்கம் அரசியல் எழுத்துக்களை கலையாக மாற்றம் செய்வது....

கவுர்:- இல்லை. ஒரு போதும் இல்லை. நான் உள்நாட்டு போர் பற்றிய விஷயத்திற்குள் சென்றேன். எனக்கு அது தவிர்க்க முடியாதது. ஆனால் இலக்கிய படைப்பென்பது ஒவ்வொன்றை பற்றியும் மறு சிந்தனை செய்வது, அதனை வெளிக்கொள்வது. அது வெறுமனே அரசியல் பற்றியதல்ல.

ரிவியூ:- நீங்கள் சொன்னது போன்று இலக்கிய படைப்பு என்பது ஒவ்வொன்றையும் மறு சிந்தனை செய்வது என்பதாக இருந்தால் அது நிலவும் சமூகங்களில் மட்டுமே சாத்தியமாகும். இதன் நீட்சியில் லெபனிய சமூகத்தில் ஓர் எழுத்தாளராக இருப்பதன் அர்த்தம் என்ன?

எலியாஸ் கவுர்:- லெபனிய சமூகம் பிரிவினையையும் , ஒருமைப்பாட்டையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. இதற்கு இஸ்லாமிய நாகரிகமே உதாரணம். இஸ்லாமிய நாகரீகம் இங்கு இதற்கு முன் வந்த நாகரீகத்தையோ அல்லது கலாசாரத்தையோ அழித்து கொண்டு வரவில்லை. மாறாக அதை ஒருங்கிணைத்தும், வேறுபடுத்தியும் இஸ்லாமிய எல்லைக்குள் வாழ்வதாக உருவானது. நீங்கள் இதை இன்றைய நவீன எகிப்து, சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்ற இடங்களில் காண முடியும். லெபனானில் இதற்குள் ஓர் ஒருமைப்பாடு இருக்கிறது. சமூக மேலாண்மை சார்ந்த ஒருமைப்பாடல்ல இது. ஒத்த கூறுகளை கொண்ட ஒன்றானதாக இருக்கிறது. லெபனிய நாவல் இதனை பிரதிபலிப்பதன் செயல்பாட்டை கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

பெய்ரூட் ரிவியூ:- நீங்கள் லெபனான் உள்நாட்டு போர்
பற்றிய நாவல்களை எழுதியிருக்கிறீர்கள். அது பற்றிய
நாவல் ஏதாவது சொல்ல முடியுமா? மேலும் அது மற்ற
நாடுகளின் போர் பற்றிய நாவல்களிலிருந்து எவ்வாறு
வேறு படுகிறது.

எலியாஸ் கவுர்:- லெபனிய போர் நாவல்கள் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. உள்நாட்டு போர்கள் என்றுமே பிரமாண்ட படைப்பிற்கு வழி ஏற்படுத்தாது. மறந்து விடுங்கள். போர் என்பது ஒரு மனித அனுபவம். நீங்கள் சுலோகோவின் "And Quiet Flows the Don" என்ற நாவலை எடுத்து கொண்டால் அந்த நாவலின் முக்கிய அம்சம் ருஷ்ய உள்நாட்டு போரை பற்றிய தகவல்களை தருவதல்ல. மாறாக மனித நிலைமைகள் பற்றிய தகவல்களை தருவது. லெபனானை பொறுத்தவரை லெபனிய போரானது அங்குள்ள இலக்கியத்துக்கான புதிய தொடக்கம் குறித்தது. எனென்றால் மரபார்ந்த லெபனிய படைப்பானது கவித்துவம் மட்டுமே நிரம்பியதாக இருந்தது. அந்த நேரத்தில் நாவல் இலக்கிய படைப்பிற்கு புதிய தொடக்கம் குறித்தது.அது ஒரு சமூகத்தையோ அல்லது குழுவையோ சுய சிந்தனைக்குட்படுத்துகிறது. நாவல்கள் இல்லாத சமூகத்தில் தன்னை அறிவதற்கான காட்சிகள் இல்லை எனலாம். உள்நாட்டு போருக்கு முந்தைய லெபனிய நாவல்கள் முற்றிலும் வேறுபட்ட செவ்வியல் மொழியை தாங்கி வெளிவந்தன. இதில் யூசுப் அவ்வாத், மரூன் அப்பாத், பவத் கனான் போன்றவர்களின் படைப்புகள் விதிவிலக்காக இருந்தன. போரானது நாவல்களுக்கு புதிய சிந்தனை முறையையும், புதிய அலைத்தடத்தையும் ஏற்படுத்தியது. இவை லெபனிய சமூகத்திற்கு உள்ளடங்கிய சாட்சியமாக இருந்தது. ஆனாலும் கூட இவை மட்டுமே நல்ல இலக்கிய படைப்பை தந்து விட முடியாது. நல்ல இலக்கிய படைப்பானது இந்த அனுபவத்தை மனித நெகிழ்வுகள் மீது உரையாடுவதன் வாயிலாக தான் பிறக்கும்.

பெய்ரூட் ரிவியூ:- புகழ்பெற்ற லெபனிய எழுத்தாளர்கள் பலரும் ஆங்கிலத்தை விட பிரெஞ்சு மொழியில் எழுதுவதையே உசிதமாக கருதுகிறார்கள். அரபு மொழியில் எழுதும் நீங்கள் இதை எவ்வாறு அணுகிறீர்கள்..

எலியாஸ் கவுர்:- எந்த அனுபவமும் எந்த மொழியிலும் பிரதிபலிக்க முடியும். தற்போது லெபனானில் பிரஞ்சு எழுத்து மோகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆங்கிலம் கூட. ஒரு சிலரை தவிர எல்லோருமே அரபு மொழியில் தான் எழுதுகிறார்கள். லெபனிய மையநீரோட்ட இலக்கியமானது இன்று அரபு மொழியில் தான் இருக்கின்றது. பிரஞ்சின் காலனிய உணர்வு படைப்பாளிகளிடையே நீடிக்கவில்லை.

பெய்ரூட் ரிவியூ:- நீங்கள் அல் முஹ்லாக் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். அதில் கலாசார, சமூக, அரசியல் பற்றிய விஷயங்களை பிரதிபலிக்கிறீர்கள். இதில் உங்களுக்கான தனி வகை பிரசுர கொள்கை ஏதாவது உண்டா?

எலியாஸ் கவுர் :- எங்களுக்கு அதில் மூன்று விதமான
நோக்கங்கள் உள்ளன. 1. லெபனான் மற்றும் அரபுலகின் புதிய மற்றும் நல்ல இலக்கிய படைப்புகளை வெளியிடுவது 2.லெபனிய சமூக பிரச்சினைகளை வரலாற்று பூர்வமாக அணுகுவது. உதாரணமாக சிறைச்சாலை, அரசியல் புகலிடம் மற்றும் பாலியல் செயல்பாடுகள் போன்றவை. மேற்கண்டவற்றை விமர்சன பூர்வமாக அணுகுவது என்பது இதில் ஒன்று 3. வெகுஜன கலாசாரத்தை விமர்சன பூர்வமாக, மறுவாசிப்பாக, பகுப்பாய்வு முறையில் அணுகுவது. அல் முஹ்லாக்கை பொறுத்தவரை மேற்கண்ட எல்லாவற்றையும் வரலாற்று கண்ணோட்டத்துடனும், அது சார்ந்த புதிய புரிதலோடும் முன்னெடுக்கிறது. நாங்கள் மட்டும் தான் புதிய எழுத்துக்களை புதிய அறிமுகத்தோடு முன் வைக்கிறோம்.

பெய்ரூட் ரிவியூ:- இந்த பத்திரிகை ஆசிரிய பணி உங்களுக்கு நிறைய எழுத இடமளிக்கிறதா?

கவுர்:- நான் என்னுடைய நேரத்தை நிர்வகிப்பதில் மிகுந்த
கட்டுப்பாடாக இருக்கிறேன்
. அதிகாலையிலே எழும்பி வாசிப்பு மற்றும் எழுத்து என இரவு பதினொன்று மணிவரை அன்றாட செயல்பாடு தொடர்கிறது. நான் எதையும் எழுதா விட்டால் உட்கார்ந்து விஷயங்களை பற்றி சிந்தித்து கொண்டிருப்பேன். அதன் பிறகு முஹ்லாக் வேலைக்கு வந்து விடுகிறேன்
- வார்த்தை

Tuesday, May 19, 2009

அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள்







தனிமனிதன் அல்லது சமூகம் தன் நிலைபாட்டின் மீதான பொருண்மையின் மீது, அதன் சாராம்சங்கள் மீது காலத்தை கடக்க முடியாத நுனிமங்கள் மீது தொங்கி கொண்டிருப்பது தான் அடிப்படைவாதம். இது தனிமனிதர்களுக்கிடையே அல்லது சிவில் சமூகங்களுக்கிடையே கருத்தியல் ரீதியான, செயல்பாட்டு ரீதியான மோதல்களையும், அதிகார நவிற்சிகளையும் உருவாக்குகிறது. உலகம் அதை எதிர்ப்பவர்கள் இருப்பதால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற கேதேவின் கோட்பாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் அரசுகள் எல்லாம் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அவற்றின் நம்பிக்கை, கலாசாரம், அரசியல் மீதே அதன் எதிர்செயல்பாடுகள் நிகழ்ந்தேறின. வரலாறு முன்னோக்கி செல்கிறது என்று அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல. மாறாக அதை புரிந்து கொள்வதே அவசியமான ஒன்றாகும் என்ற ஸ்பினோசாவின் கோட்பாட்டு அறிவுறுத்தல் அடிப்படைவாதம் வேர்கொண்டு நிற்கும் இந்த சூழலில் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இதன் தர்க்க ஒழுங்கை, கோட்பாட்டு பொருண்மையை மார்க்சிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடப்பு உலகில் ஆராய்ந்து வருபவர் பாகிஸ்தான் புலம் பெயர் அறிவுஜீவியான தாரிக் அலி. ஒரு விசனகரமான அதே நேரத்தில் நாடகீயமான இளமைக்காலம் அவருக்குரியது. தற்போதைய பாகிஸ்தானின் லாகூரில் 1943 ல் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தவர். சிறந்த, விசாலமான வாழ்க்கை பின்புலத்தை கொண்டவர். நிலப்பிரபுத்துவ பின்னணியை கொண்ட போதும் மார்க்சிய கோட்பாட்டின் மீது ஆர்வமும், தாக்கமும் கொண்டவர். இவர் தந்தையின் திருமணமே மிகுந்த போராட்டத்திற்கிடையே தான் நடைபெற்றது. அதற்கு அன்றைய பாகிஸ்தானில் நிலவிய மாற்று சிந்தனைகள் மீதான வெறுப்பும், மன அயற்சியுமே காரணம். அதன் தொடர்ச்சியின் மீதான எதிர்செயல்பாடு மற்றும் சிந்தனையே தாரிக் அலியின் உருவாக்கம். அன்றைய காலத்தில் லாகூர் பல கலாசாரத்தை கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக இருந்தது. இந்த நகரத்தின் நெளிவான நகர்வுகளுக்கிடையில் தாரிக்கின் இளமைகாலம் சவால் ஒன்றின் முன்னோக்கத்திற்காக காத்திருந்தது. பள்ளிப்படிப்பை லாகூரில் முடித்த தாரிக் அலி பஞ்சாப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையை போன்று இளமைகாலம் தொட்டே தாரிக் மத விவகாரத்தில் அவநம்பிக்கையாளராக இருந்தார். இதன் தொடர்ச்சி அவரை கல்லூரி பருவத்தில் முதிர்ச்சி பெற்ற அரசியல் மற்றும் தத்துவ சிந்தனையாளராக மாற வைத்தது. பஞ்சாப் கல்லூரி வாழ்க்கையின் தொடக்க காலங்களில் அவரின் பேச்சும், எழுத்தும் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார வர்க்கத்தை உசுப்பி விட்டது. காலப்போக்கின் நகர்வில் தாரிக்கின் தத்துவார்த்த செயல்பாடுகள் அவரின் பாகிஸ்தான் இருப்பை கேள்விக்குறியாக்கின. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அக மற்றும் புற நிர்பந்தங்கள் காரணமாக தாரிக் பாகிஸ்தானை விட்டு லண்டனுக்கு செல்ல நேர்ந்தது. கீழைச் சிந்தனையாளர்கள் பலரின் வாழ்க்கை பின்னணியை நாம் நோக்கும் போது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்தல் அல்லது புலப்பெயர்ச்சிக்குள்ளாகுதல் என்ற கட்டத்தில் இருந்து தான் அவர்களின் எதார்த்த வாழ்வின் இன்னொரு கட்டம் தொடக்கம் பெறுகின்றது. இதன் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. நேர்மாறான நிலையில் மேற்கத்தியர்கள் எவரும் தன் செயல்பாட்டிற்காக கீழைத்தேயத்திற்கு பெயர்ந்து வருவதில்லை. (விதிவிலக்கான தருணங்கள் தவிர) மேற்கு நாடுகளின் வட்டத்திற்குள் தான் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. கீழை சிந்தனையாளர்கள் மேற்கை தங்கள் சிந்தனைக்கான சுதந்திர வெளியாக, செயல்பாடுகளுக்கான பரப்பிடமாக காண்பதே அதற்கு காரணம். அது மாதிரியே தாரிக்கின் லண்டன் வாழ்க்கை அவரின் ஆளுமை உருவாக்கத்திற்கான தொடக்க புள்ளி. அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை அது உருவாக்கி விட்டிருந்தது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் படித்த தாரிக் படிக்கும் காலத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். அவருக்கான போராட்ட கள செயல்பாடுகள் அதன் மூலம் தொடக்கம் பெற்றன. இளமைகால தத்துவார்த்த வாசிப்பும், செயல்பாடுகளும், பல்கலைகழக பொருளாதார படிப்பும் அவரை அறிவுஜீவி என்ற கட்டத்திற்கு நகர்த்தின. வியட்நாம் போர்காலத்தில் பெர்டிணான்ட் ரஸ்ஸல் மற்றும் ழீன் பால் சார்த்தர் ஆகியோரின் அறிமுகம் தாரிக் அலிக்கு கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் மூலம் தாரிக் தன் சிந்தனைமுறையை விசாலமாக்கி கொண்டார். அவரின் அனுபவ வெளி மேற்கத்திய அறிவுஜீவிகளுடனான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் அக அனுபவ முதிர்ச்சியாக மாற்றியது. வியட்நாமுக்கு பல சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகள் இணைந்த குழுவாக சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதிலிருந்து அமெரிக்க எதிர்ப்பு சிந்தனை அவரின் கோட்பாட்டு தளத்தில் மையம் கொள்ள தொடங்கியது. ஜியாவுல் ஹக் தலைமையிலான ராணுவ அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண்டுகளாக பாகிஸ்தானிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது இன்னொரு வகையில் மேற்கத்திய நாடுகளில் அவரின் பெயரை குவியப்படுத்தியது. வரலாறு, மறுமலர்ச்சிகால தத்துவம் சார்ந்த தொடர்ச்சியான, விசாலமான, ஆழ்ந்த வாசிப்பு காரணமாக தாரிக் அலி தன் பின்னால் கணிசமான வாசக வட்டத்தை இழுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவரின் முறைப்படியான எழுத்து வாழ்க்கை 1960 ல் லண்டனில் பிரட் ஹாலிடேயுடன் இணைந்து New left review என்ற கோட்பாட்டு சஞ்சிகையை தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது.இதே காலகட்டத்தில் சர்வதேச டிராஸ்கிய கட்சியின் உறுப்பினரானார். பிரிட்டனில் அதற்கு தலைமையும் வகித்தார். அப்போது கட்சியினருடன் இணைந்து trotsky for beginners என்ற நூலை எழுதினார். பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தோல்வியை டிராஸ்கிஸ்டுகள் கையாள தவறியது குறித்த விஷயத்தில் தாரிக் அலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. அது குறித்து எழுதவும் செய்தார். இதை தொடர்ந்து டிராஸ்கிஸ்டுகளுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இவரின் முதல் புத்தகம் இஸ்ரேல் குறித்த சித்திரமாக 1968 and after:Inside the revolution என்ற பெயரில் 1978 ல் வெளிவந்தது.அதன் பிறகு பாகிஸ்தான் வரலாறு, அதன் இராணுவ சர்வாதிகாரம் குறித்த புத்தகமாக Can pakistan survive: Death of a state வெளிவந்தது. தாரிக்கின் தொடர்ச்சியான எழுத்துக்கள் அவரின் அடுத்தடுத்த நூல்களை வெளிக்கொணர்ந்தன. 1984 ல் "இருபதாம் நூற்றாண்டில் ஸ்டாலினியம்" குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். அது ஸ்டாலினியம் குறித்த கடும் விமர்சன ஆய்வுமுறையாக இருந்தது. இதன் சமகாலத்தில் தாரிக் புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் பிரதிபலிப்பாக Shadow of pomegranate tree, Book of saladin, Stone woman போன்ற நாவல்கள் அவரிடம் இருந்து வெளிவந்தன. அவரின் ஆக்கங்களில் முக்கிய கோடிடும் பகுதியாக 2002ல் வெளியான The clash of fundamentalism இருந்தது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் முறை, அதன் தர்க்கரீதியான தொடர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கின் பிராந்திய முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், கலாசார தர்க்கவியல் போன்றவற்றை குறித்த விரிவான ஆய்வுமுறையாக இருந்தது. இதன் மூலம் மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வட்டாரத்தில் தாரிக் அலி குவியமான அறிவு ஜீவியாக முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கு பிந்தைய ஆண்டில் ஈராக் மீதான அமெரிக்க போரை முன்வைத்து, ஏகாதிபத்திய கருத்தியலையும், வரலாறையும் விளக்கும் Bush in Babylon வெளிவந்தது. இந்த நூலும் அறிவுத்துறை வட்டாரங்களில் குறிப்பிட்ட மாறுதலை ஏற்படுத்தியது. பின் மார்க்சிய, பின்காலனிய, எதிர் அடிப்படைவாத தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் தாரிக் அலி தற்போது லண்டனில் வசிக்கிறார்.


தாரிக் அலியின் அடிப்படைவாதம் குறித்த ஆய்வுமுறைகள் முக்கியமானவை. அடிப்படைவாதம் வரலாறு மற்றும் கோட்பாடு சார்ந்த நுனிமங்கள் மீது தொடக்கம் கொள்கிறது என்கிறார் தாரிக். லௌகீக உலகின் வளர்ச்சி போக்கில் சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றும் கோட்பாடுகள், நம்பிக்கைகள் அதன் மனக்கிடங்கில் ஆழ்ந்து பதிகின்றன. அந்த பதிதல் சார்ந்தே அதன் அரசியல் உருவாகிறது. நாகரீகங்கள் உருவான காலத்தில் இருந்து தொடங்கும் இவை சில வேளைகளில் காலத்தை மீற முடியாதவையாக இருக்கின்றன. மதம் அதன் தொடர்ச்சியில் உருவாகும் நம்பிக்கைகள் இதற்கு உதாரணங்கள். அவ்வகையில் உலகில் உருவான எல்லா குறு மற்றும் பெருமதங்கள் இந்த நெறிமுறையில் தான் இருக்கின்றன. இதில் குறுமதங்கள் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து அழிந்து போய்விட்டன. நிலைத்திருப்பவை எல்லாம் விதிவிலக்கான தருணங்கள் தவிர பெரும்பாலும் அடிப்படைவாதத்தின் உற்பத்திக்கூடங்களே. இதன் தொடர்ச்சியில் இஸ்லாமின் தோற்றத்தைப் பற்றி மதிப்பிடும் தாரிக் அலி அதை அக்காலகட்டத்தின் அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டின் அரசியல், கலாசாரம் இருந்த நிலையில் அந்த சமூகத்தில் வலுவான நம்பிக்கை முறையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, வேறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்ட மக்களை ஒன்றிணைப்பது அல்லது இந்த இரண்டையும் செய்வதான நோக்கத்தில் உருவான அரசியல் இயக்கமே என்கிறார். இஸ்லாத்தின் முதல் இருபதாண்டுகளில் குர் ஆன் வெளிப்படுத்திய சொல்லாடல்கள் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு முந்தைய யூதம், கிறிஸ்தவம் போன்றவை இந்த கருதுகோளிலிருந்து பிறந்தவை தான். உலக பேரரசு கனவு என்பதில் இருந்தே இதன் வரலாற்று ரீதியான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற யூத மற்றும் கிறிஸ்தவத்துக்கு இடையேயான போர்கள், 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்லாம் -கிறிஸ்தவத்துக்கு இடையேயான சிலுவைபோர்கள் உலக பெருமதங்களின் பேரரசு நோக்கத்தை வெளிப்படுத்துபவை. இந்திய சூழலில் ஆரிய மற்றும் திராவிட நாகரீகத்திற்கிடையேயான போர்களை குறிப்பிடலாம். மேலும் சமண மற்றும் பௌத்த மதங்கள் அழிக்கப்படுதல், அதன் மீதான ஒடுக்குமுறை போன்றவை இந்த தர்க்க நீட்சிக்கு உதாரணங்கள். இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு கால அரபுலகில் வலுவான அரசியல் மற்றும் கலாசார இயக்கமாக உருமாறிய பிறகு அதன் எல்லை விரிவாக்கம் படிப்படியாக அதற்கான செயல் தந்திரங்களோடும், புதுமையான யுக்திகளோடும் நடந்தேறியது. இக்காலத்தில் அரேபிய பாலைவனத்தில் முஸ்லிம் இராணுவத்தின் வெற்றி என்பது குறிப்பிடதக்கதாக இருந்தது. அந்த வெற்றியின் வேகம் மத்திய தரைக்கடல் உலகை நோக்கி சென்றது. முந்தைய கிறிஸ்தவத்துடனான முரண்பாடுகள் வெளிப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தன. நபியின் மரணத்துக்கு பிந்தைய இருபது ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்தவர்கள் பிறைவள பகுதிகளில் (ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்றவை)தங்களின் முதல் அரசை கட்டமைத்தார்கள். இந்த அரச கட்டமைப்பு மற்ற பகுதிகளில் உடனடியாக அதை விரிவுபடுத்துவதற்கான மன வேகத்தை அளித்தது. ஒவ்வொரு விரிவாக்கத்தின் போதும் அப்பிரதேசத்தின் இனக்குழுக்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டன. இதற்கிடையில் கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பைசாண்டிய மற்றும் பாரசீக பேரரசுகள் வலுவான சக்திகளாக இருந்தன. இந்த இரு பேரரசுகளிடையே அக்காலத்தில் பிரமாண்ட போர் மேகம் நகர்ந்து கொண்டே வந்தது. அதன் இழுப்பங்களுடன் கூடிய தொடர்ச்சியான நகர்வு இருவரையும் தங்கள் பிராந்தியத்தின் மீது புதிய வெற்றியாளர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. சிரியாவும், எகிப்தும் பைசாண்டிய பேரரசின் பகுதிகள், ஈராக் பாரசீக பேரரசின் பகுதி. இவை அனைத்தும் பலம் பொருந்திய, நம்பிக்கையாளர்களான ஒருங்கிணைந்த இனக்குழு சக்தியின் முன் விரைவாக காணாமல் போயின. இரு பேரரசுகளின் உயர் திறன் வாய்ந்த, அனுபவம் மிக்க போர் இயந்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக இருந்த போதும், நடைமுறையில் பலவீனமாக இருந்தன. அரேபிய முஸ்லிம் இராணுவத்தின் ஒட்டக மற்றும் குதிரைப்படைகள், மறைந்திருந்து தாக்கும் கொரில்லா யுத்த முறைகள், தீடீரென தாக்கி விட்டு மறையும் நாடோடி தாக்குதல் முறை போன்ற யுத்த உத்திகள் இரு பெரும் பேரரசுகளை தோற்கடித்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த இரு பேரரசுகளின் வீழ்ச்சியோடு இஸ்லாமின் முறைப்படியான இருப்பு இங்கு தொடங்குகிறது. உலக வரலாற்றில் இவ்வாறு பலமான அரசுகள் பலவீனமாக மனிதர்களால் வெல்லப்பட்டிருக்கின்றன. ரோமானிய பேரரசை பலம் குன்றிய ஜெர்மானியர்கள் வென்றதும், மெக்சிகர்களிடமிருந்து யாங்கிகள் கலிபோர்னியாவை கைப்பற்றியதும் இந்த கருத்தாக்கத்தை மேலும் உறுதி செய்பவை. இவ்வாறான நிலையில் இஸ்லாமிய அரசுகள் பிராந்தியத்தில் வேர்கொண்ட பிறகு சமூக உற்பத்தி மற்றும் இயற்கையோடு இயைந்த செயல்பாடுகள் மீது கவனம் கொள்ள தொடங்கின. குறிப்பாக அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மீது அதீத கவனமும், அவதானமும் அவர்களுக்கிருந்தது. அப்பாஸிட்கள் இதற்கான செயல்திட்டங்களை வைத்திருந்தார்கள். குறிப்பாக மருத்துவ துறையில் அவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. முதல் ஆயிரத்தாண்டு முழுவதும் மருத்துவ துறையின் வளர்ச்சி அறிவின் நீண்ட, குறுக்கு நெடுக்குமான பயணத்திற்கு உதாரணமாக இருந்தது. பாரசீகத்தின் பல நகரங்கள் இதற்கான வாயில்களாக இருந்தன. அரபுலகின் முதல் மருத்துவராக அறியப்பட்ட ஹாரித் இப்னு ஹலதா அக்கால பாரசீக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் அவரின் மருத்துவ ஆலோசனைகள் புகழ்பெற்றவை. அதிக உணவு உண்பதை தவிர்த்தல், கலக்காத ஒயினை அருந்துதல், தினசரி அதிக தண்ணீர் பருகுதல், மது அருந்தி விட்டு உடலுறவு கொள்ளாமை, சாப்பிட்டு விட்டு குளிப்பதை தவிர்த்தல் இவை அரசவையிலிருந்து குடிமக்களுக்கு பரப்பப்பட்டன. அந்த ஆலோசனைகள் அதிகாரபூர்வ முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து இப்னு ஸீனா மற்றும் அல் ராசி ஆகிய மருத்துவ தத்துவவியலாளர்கள் அரபுலகில் தோன்றினர். இவ்வாறாக மருத்துவ துறையின் விதை அன்றைய பாரசீகத்தில் விதைக்கப்பட்டு அரபுலகம் முழுவதும் வேர் கொண்டு மரமாக கிளைத்தது. இஸ்லாத்தின் தோற்றம் அதன் அரசியல், புவி பொருளாதார பார்வை குறித்து தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundamentalism) நூலில் ஆராய்ந்த தாரிக் அலி அதன் முடிபுகளை நீண்டகன்ற முறையில் ஆழ்ந்து வெளிப்படுத்தினார். அவரின் சிந்தனை முறைகள் மரபான மேற்கத்திய சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக இருந்தன. மரபாந்த முறையில் கீழைத்தேயவாதியாக இருப்பதால் மத்திய கிழக்கு சமூகம் குறித்த இந்த ஆய்வு முறை அவருக்கு விரிவான தளங்களை தொடுவதற்கான வாய்ப்பை வழங்கியது.மேலும் மேற்கத்திய நாகரீகம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் குறித்த அடிப்படையான ஆய்வுமுறைகளை நிகழ்த்தியிருக்கிறார். மேற்கத்திய நாகரீகம் குறித்த ஆய்வில் தாரிக் பிரிட்டனின் காலனியாதிக்க நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் இருந்து அதை தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் காந்தியிடம் கேட்டார்." மேற்கத்திய நாகரீகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" அது ஒரு சிறந்த கருத்தாக இருக்கலாம்" காந்தி எள்ளல் முறையில் மிகச்சாதாரணமாக பதிலளித்தார். காந்தியின் இந்த பதிலை தற்போதைய கட்டத்துக்கு நகர்த்தும் தாரிக் அலி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஒடுக்குமுறையை, கண்ணுக்கு புலப்படாத ரீதியில் நாகரீகத்தின் மேல் படும் தாக்குதலாகவே காண்கிறார். குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேற்கு ஈராக்கில் ஜனநாயகம் திரும்பும் என்ற மாயையை வெகுஜன மத்தியில் ஏற்படுத்துகிறது. இது உச்சபச்சமான மேல் திணிக்கப்படும் ஒடுக்குமுறை என்பதை அது உணராமல் இருக்கலாம். மேலும் நாகரீகம் அதன் எதிர்கொள்ளல் குறித்த யுக்திகளுக்கு அமெரிக்க ரெடிமேட் அறிவுஜீவிகளின் துணையை நாடுவதை தாரிக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சாமுவேல் காண்டிங்டனும், பிரான்சிஸ் புகாமாவும் இதன் வார்ப்புகள். அவர்களின் நாகரீகங்களின் மோதல் குறித்த கருத்தாக்கம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கை வடிவமைப்பே. சாமுவேல் காண்டிங்டன் ஜாண்சன் ஆட்சியில் வியட்நாம் போர் குறித்த வழிமுறைகளை அரசுக்கு வகுத்து கொடுத்தவர். சிவிலியன்கள் ஆதரவு இல்லாமல் அந்நிய நாட்டின் மீது போர்தொடுப்பது வெற்றியை தராது என்ற கருத்தை அதிகார வர்க்கத்தின் முன்வைத்தவர். இந்த கருத்தாக்கத்தை தான் அமெரிக்க ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது பயன்படுத்தியது.சர்வதேச ஊடக சர்வாதிகாரம் இதற்கு துணைபுரிந்தது. பல தருணங்களில் சாமுவேல் காண்டிங்டனுக்கு கோட்பாட்டு ரீதியாக எதிர்வினையாற்றியிருக்கிறார். நாகரீகங்கள் குறித்த இந்த ஆய்வுமுறை தாரிக் அலியை மேற்கு மற்றும் கிழக்குலகின் தேர்ந்த அறிவுஜீவியாக ரூபம் கொள்ள செய்தது. கடந்த இருபதாண்டுகளில் மேற்குலகில் புனைவு மற்றும் புனைவு அல்லாத எழுத்துக்களின் எல்லையை கடந்த தாரிக் என்னை பாதித்த சிந்தனையாளராக இன்னும் இருக்கிறார். இவருடனான என் விரிவான நேர்காணல் இரு வருடங்களுக்கு முன்பு தமிழ்பத்திரிகை ஒன்றில் வெளியானது. ஓர் அறிவு ஜீவி மனிதசமூகம், வாழ்க்கை இவற்றை குறித்த ஆழ்ந்த அவதானங்களை உடையவன் என்பதற்கு தாரிக் இந்த நூற்றாண்டின் உதாரண புருஷர்.
- உயிரோசை

Tuesday, May 5, 2009

கிழக்கு திரும்பும் மேற்கின் கதை- மாக்சிம் ரேடின்சன் ஓர் அறிமுகம்




பௌதீக உலகின் வட்டப்பாதையிலான சுழற்சியில் திசைகள் இருப்பை குறிக்கின்றன. அந்த இருப்பின் வடிவமானது நிலப்பகுதி ஒன்றின் வரைவெல்லையாக மாறுகிறது. மேற்கு-கிழக்கு என்ற பிரிவினை இந்த நிலப்பகுதியை சார்ந்தது. அதன் புறச்சூழல், காலநிலை, மக்கட்தொகுதி, குறிப்பிட்ட கலாசாரம் இவற்றை சார்ந்து துருவ இனங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நாகரீகங்களின் பிறப்பிடமாகவும், கலாசார பரிணாமங்களின் புகலிடமாகவும் வரலாற்றில் கிழக்கத்திய சமூகம் முன்னுக்கு வருகிறது. தனித்த விதி ஒன்றின் இயங்கிடமாக கிழக்கத்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த பார்வைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவே செமிட்டிக் நாகரீகம் மற்றும் அதன் கலாசாரம் குறித்த பார்வை மேற்கத்திய தத்துவ மற்றும் சமூகவியலாளர்களால் ஆய்வுபூர்வமாக பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு நிலையில் இதன் தொடர்ச்சியில் செமிட்டிக் மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் குறித்த வரலாற்று, சமூகவியல் ரீதியான அணுகுமுறை இவர்களால் முன்வைக்கப்பட்டது. மதங்கள் கற்பிக்கும் புனிதங்களின் எல்லையை தாண்டியும், அதனால் தொட்டுணர முடியாத பல்வேறு உணர்வோட்டங்களின் துடிப்பை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த வரிசையில் மாக்சின் ரேடின்சன் முக்கியமானவர். பிரான்சுக்கு புலம் பெயர்ந்த போலந்து வம்சாவளிசிந்தனையாளரான இவர் அறுபது மற்றும் எழுபதுகளில் பிரான்சின் அறிவுத்துறை வட்டாரங்களில் பேசப்பட்ட ஓர் அறிவு ஜீவி. வரலாறு மற்றும் சமூகவியல் துறையின் நுட்பணர். 1915 ஆம் ஆண்டு பிரெஞ்சு கட்டுப்பாட்டு பகுதியான மார்சிலி என்ற புராதன நகரத்தில் மாக்சிம் ரேடின்சன் பிறந்தார். இவரின் பெற்றோர் யூத பின்னணியை கொண்டவர்கள். இவரின் தந்தை மார்க்சிய பின்னணியை கொண்டவர். போலந்தின் நகரமொன்றில் பிரபல ஜவுளி வியபாரியாக இருந்தார். டிராஸ்கி மற்றும் லெனினுடன் தொடர்பு கொண்டவராகவும் அவர்களுடன் உரையாடல் நடத்தியவராகவும் இருந்தார். பின்னர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்த இவரின் தந்தை அங்கு வணிகத்தில் கவனம் செலுத்தினார். நாற்பதுகளில் ஹிட்லரின் யூத இன அழிப்பிற்கு இவருடைய குடும்பம் பலியானது. ஆஷ்விச் முகாமிற்கு கடத்தப்பட்ட இவருடனான குடும்பம் இவர் மட்டும் தப்பித்தலுடன் மரணத்தை தழுவியது. மாக்சிம் ரேடின்சனுக்கு இளமைகாலத்தில் தன் தந்தையை போன்றே அறிவுதுறை விஷயங்கள் மீதான நாட்டம் ஏற்பட்டது. மார்க்சிய கோட்பாடுகளை ஆர்வத்துடன் ஆழமாக படிக்க தொடங்கினார். ஒரு விதத்தில் அவரின் அப்போதைய நாட்டமும் அதுவாக தான் இருந்தது. 1937 ல் பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். பின்னர் ஸ்டாலினிய காலகட்டத்தில் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக அதிலிருந்து விலகி தனிமனிதராக செயல்பட்டார்.இந்த விலகலை பற்றி குறிப்பிட்ட ரேடின்சன் கட்சி அமைப்பு என்பது மத நிறுவனம் மாதிரி இருக்கிறது என்றார். 1958 ல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முழுமையாக விலகினார். இதன் பிற்பாடு பிரான்சு பல்கலைகழகத்தின் மொழியியல் பிரிவில் இணைந்து யத்திஷ், ஹிப்ரு, அரபி மொழிகளை படித்தார். பிற்காலத்தில் அங்கு ஓரியண்டல் துறையில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரான்சில் யூதர்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட சிரியாவிற்கு சென்றார். டமாஸ்கஸ் பிரெஞ்சு நிறுவனத்தில் இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு தான் ரேடின்சன் இஸ்லாம், அரபுலகம் அதன் வரலாற்று, சமூக ரீதியான பின்னோக்க பார்வையை விரிவுபடுத்திக் கொண்டார். பிரான்சு பல்கலைகழகத்தில் ஓரியண்டல் துறையில் வேலைக்கு சேர்ந்த காலத்தில் அவரின் புகழ்பெற்ற முதல் நூலான "முஹம்மது" வெளிவந்தது. இஸ்லாமிய மத ஸ்தாபகரான முஹம்மது நபியை பற்றிய விரிவான அறிமுகமும், இஸ்லாத்தின் தோற்றத்தை வரலாற்று, சமூக ரீதியில் தத்துவ மற்றும் சமூகவியலின் துணைகொண்டு இந்நூல் ஆராய்ந்தது. வெளிவந்த காலத்தில் மேற்கிலும், மத்திய கிழக்கு பகுதியிலும் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அரபு பிரதேசத்தின் சில பகுதிகளில் இஸ்லாமிய மதத்திற்கு விரோதமானது என்ற பெயரில் இந்நூல் தடை செய்யப்பட்டது.மாக்சிம் ரேடின்சனின் நபி பற்றிய இந்த நூல் மான்கெமரி வாட்டின் முஹம்மது நபி பற்றிய நூலை ஒட்டி இருந்தது. அதன் பார்வை விசாலமானதாக, ஆழ்ந்த வரலாற்று செறிவை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பிறகு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் ரேடின்சனின் அடுத்த நூலாக "Islam and Capitalism" வெளிவந்தது. அதுவரை ஐரோப்பிய சமூகம் இஸ்லாமிய மதத்தின் பொருளாதார பார்வை குறித்து கொண்டிருந்த கற்பிதங்களை தகர்த்தது. குறிப்பாக மார்க்ஸ் வெபரின் இஸ்லாமிய கலாசாரம் குறித்த கருத்துகளுக்கு விரிவான விளக்கம் அளித்தது. இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு, உள்முரண்பாடுகள், முதலாளித்துவம் ஐரோப்பாவில் வேர்கொண்ட முறை சோசலிசம், மார்க்சின் அந்நியமாதல், நிலப்பிரபுத்துவம் குறித்த பார்வை , ஆசிய உற்பத்தி முறை இவற்றை குறித்து விரிவாக இந்நூல் ஆராய்ந்தது. மார்க்சிய அடிப்படையில் நின்று கொண்டு இஸ்லாத்தை அணுகிய ரேடின்சன் முதலாளித்துவத்தை பொறுத்தவரை இஸ்லாம் எவ்விதமான எதிர்நிலைபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவிற்கு வந்தடைந்தார்.


மாக்சிம் ரேடின்சனை மற்ற பிரஞ்சு சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திய ஒன்று அவரின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாடாகும் தான் அடிப்ப்டையில் யூத மரபை சார்ந்தவராக இருந்த போதிலும், இஸ்ரேலுக்கு எதிராக நின்றார்.பாலஸ்தீன் உரிமை போராட்டம் குறித்து ரேடின்சன் 1967 ல் சார்த்தரின் ஆய்விதழான les tempes moderne ல் Israel a colonial fact என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அதே நேரத்தில் அவரின் போராட்ட ஆதரவு நிலைபாடும் கூட அடிப்படைவாத குழுக்களின் நிலைபாட்டிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அவரின் பாலஸ்தீன் நிலைபாடு இரு பார்வைகளை கொண்டிருந்தது.1. பாலஸ்தீனியர்களின் போராட்டம் அவர்களின் யூத வெறுப்பின் அடையாளமே. 2. பாலஸ்தீனியர்கள் தங்கள் போராட்டத்தை மதத்திற்கு அப்பாற்பட்ட வடிவத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும். இந்த நிலைபாட்டின் மூலம் ரேடின்சன் எட்வர்ட் செய்த் கருத்துடன் ஓரளவு உடன்படுகிறார். இன்னொரு வகையில் அவரின் சியோனிச எதிர்ப்பு கருத்தாக்கம் இரு பார்வைகளை கொண்டிருந்தது. 1. உலகம் முழுவதும் உள்ள யூதர்களையும், யூத சந்ததியினரையும் அவர்களின் அடையாளங்களை துறந்து ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவருதல் என்பது ஆபத்தானது. 2.பாலஸ்தீன் பகுதிகளை யூத மயப்படுத்தி பாலஸ்தீனியர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவர்களை அங்கிருந்து விரட்டுதல். மேற்கண்ட விஷயங்களுக்காக ரேடின்சன் இஸ்ரேலிய எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டிருந்தார். மேலும் பாலஸ்தீனியர்கள் பிரான்சில் பிரஞ்சு மக்களை போன்றும், இங்கிலாந்தில் ஆங்கில மக்களை போன்றும் மீறப்படாத சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றார். அவர்களின் உரிமை போராட்டம் பிளவுபடாத மனநிலையிலிருந்து வெளிப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குற்றங்களை சமரசமற்ற நோக்கோடு எதிர்த்தார். மேலும் அரபு சமூகத்தோடு, அரபு பார்வையாளர்களோடு அவரின் கருத்து தோற்றப்பாடு விமர்சன பூர்வமாக இருந்தது. பாலஸ்தீன் முரண்பாடு பற்றிய அவரின் நிலைபாடு அறிவார்த்தமாக இருந்தது. இஸ்ரேலிய யூதர்களும் பாலஸ்தீனிய அரபுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முடியும். மேலும் இஸ்ரேல் என்பது ரேடின்சனை பொறுத்தவரை வெறுமனே காலனிய குடியேற்ற அமைப்பு அல்ல. மாறாக அது ஒரு தேசிய உண்மை கூட. யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சுயமரியாதை மீது மிகுந்த கூட்டுரிமைகளை கொண்டுள்ளார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவை மற்றொன்றை ஆதிக்கம் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத நிலையில் அரசியல் மட்டத்தில் அந்த குழுக்கள் வேறுபட்ட சமூகங்களாக இருக்கும் நிலையில், அவர்களின் நலன்களும், உள்ளாசைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான அறிவுஜீவி நிலைபாட்டை மேற்கொண்ட ரேடின்சன் அவ்வப்போது யூத அடிப்படைவாதிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். அவர்கள் இவரை யூத விரோதியாக பார்த்தனர். 1967 அரபு-இஸ்ரேல் போரை கடுமையாக எதிர்த்த ரேடின்சன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வரலாற்று ரீதியாக தொகுத்து Israel and the Arabs என்ற நூலை எழுதினார். இஸ்ரேல் விவகாரத்தின் நதிமூலத்திலிருந்து அதன் பரிணாம கட்டம் வரையான விமர்சன பார்வையும், ஆழ்ந்து அகன்ற அறிவு தேடலும் இந்நூல் முழுவதும் நிரம்பி இருந்தது. அதன் பிறகு Marxism and the Muslim world வெளிவந்தது. இஸ்லாமிய நாடுகளுக்கும் , சோவியத் யூனியனுக்குமான உறவு முறை, முதலாளித்துவத்தை இஸ்லாம் அணுகும் முறை, இஸ்லாமிய நாடுகளின் நிலவியல் அமைப்பு, சோசலிச அமைப்பு முறை ஆகியவற்றை குறித்த பன்முக விமர்சன நோக்காக இது இருந்தது. இதன் நீட்சியில் ரேடின்சன் இஸ்லாம் குறித்த சமூக, பொருளாதார கோட்பாட்டு தரவுகளை முன்வைத்தார். அது மேற்கில் அதிகம் கவனிக்கப்பட்டது.

மாக்சிம் ரேடின்சனை பொறுத்தவரை ஐரோப்பா புரிந்து கொள்ளாத உலகம் பற்றிய இரகசிய கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார். சாத்வீகமான நெகிழ்வு முறையோடு அதன் நகரல் இருந்தது. ஐரோப்பியனாக இருந்து கொண்டு ஓரியண்டல் சிந்தனை தளத்தை நோக்கி அவரின் இளமை கால செயல்பாடுகள் திரும்பின. குறிப்பாக அரபுலகம், இஸ்லாம் பற்றிய அவரின் தேடலானது அவரை நட்சத்திர தகுதி பெற்ற அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்த்தியது.பின் நவீனத்துவ சிந்தனையாளர் என்ற கட்டத்துக்கு வந்த ழாக் தெரிதாவின் நண்பராக ரேடின்சன் இருந்தார். அவருடன் பல உரையாடல்கள் நடத்தி இருக்கிறார். பிரபல சோவியத் வரலாற்றாசிரியரான ஐசக் டொயிஸ்டர் இவர்கள் இருவரையும் "யூதமற்ற யூதர்கள்" என்றார். யூதர்களாக இருந்து கொண்டு யூத தேசியத்துவத்தின் அபாயத்தை எதிர்த்தவர்கள் என்ற அர்த்தம் படியாக அந்த வெளிப்பாடு இருந்தது.மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய வரலாற்றில் மார்க்சிய அடிப்படைகளில் இருந்து கொண்டு இஸ்லாம் மற்றும் பிற மதங்களை அணுகிய அவரின் பார்வை தத்துவ வரலாற்றில் புதிய தரிசனமாக இருந்தது. மேலும் மாக்சிம் ரேடின்சனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை இருந்தது. குறிப்பாக செமிட்டிக் மொழிகள் அனைத்தும் அவரின் மொழிக்கிடங்கில் நிறைந்து இருந்தன. இஸ்லாம் மற்றும் அரபுலகம் குறித்து அறிவதற்கு அவருக்கு இது உதவிகரமாக இருந்தது. தத்துவ வாதிகள் தங்களுக்கான கோட்பாட்டை தானே வடிவமைக்கிறார்கள் என்பதற்கு மாக்சிம் ரேடின்சன் உதாரணமாக இருந்தார். 2004 ஜனவரியில் அவரின் மரணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அதற்குரிய சிந்தனை வெறுமையை விட்டு சென்றிருக்கிறது. மேற்கத்திய யூதராக இருந்து கொண்டு மத்திய கிழக்கை ஆராய்ந்த மாக்சிம் ரேடின்சன் அந்த வரலாற்றின் எல்லையை அதிக தூரம் கடந்த தவிர்க்க முடியாத நிழலாக இருக்கிறார்.


- உயிரோசை