காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, March 2, 2013

உதுமானிய பேரரசும் குர்துகளும்






உலக வரலாற்றில் இடைக்கட்டத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் வல்லரசாக திகழ்ந்தது. வரலாற்றில் அவ்வாறான வல்லரசாக திகழ்ந்தவை மூன்று. ஒன்று துருக்கிய உதுமானிய பேரரசு, இரண்டாவது முகலாய பேரரசு, மூன்றாவது ஈரானின் சபாவித் வம்சம் .மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரும் சமூக, கலாசார மற்றும் அரசியல் மாற்றங்கள் அவர்களின் காலகட்டத்தில் தான் நடந்தேறியது. உலகின் பேரரசின் வரலாற்றிலே மிக அதிக காலமாக சுமார் 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்த உதுமானிய பேரரசின் வரலாறு மிக நீண்டது. நீண்ட எல்லையை, நீண்ட காலத்தை உட்கொண்ட வரலாறு அதற்குண்டு. அதாவது உலகின் மிகப்பெரும் பகுதிகளை, இருகண்டங்களை உதுமானிய பேரரசு ஆண்டது.  ரோம் முதல் ஹங்கேரி வரை, போலந்து முதல் எமன், யரித்திரியா வரை, அல்ஜீரியா முதல் அசர்பைஜான் வரை , அதாவது தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி, மேற்கு ஆசியா முதல் வட ஆப்ரிக்கா வரை இதன் எல்லைகள் நீண்டிருந்தன. இதில் 29 மாகாணங்கள் மற்றும் ஏராளமான வரி செலுத்தும் சிற்றரசுகள் அடங்கியிருந்தன. இவற்றுள் பல பிந்தைய கட்டத்தில் பேரரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இவற்றுள் சுயாட்சி பெற்ற மாகாண அரசுகளும் உண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புலை தங்கள் தலைநகராக கொண்டு மத்திய தரைக்கடல் பகுதியின் பெரும் பரப்பை ஆண்ட உதுமானிய பேரரசு கிழக்கிற்கும் மேற்குலகத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உறவு கொண்டிருந்தது.

உதுமானிய பேரரசின் வேர் காசி வம்ச அரசோடு தொடர்பு கொண்டது. கி.பி 1300 ல் அனதோலிய பிராந்தியமானது செல்யூஜ் வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. அவர்களின் முடிவுக்கு பிறகு அந்த பிராந்தியமானது பல பகுதிகளாக பிரிக்க்பட்டது . இது காசிமேத் என்றழைக்கப்பட்டது. அனதோலியா பிராந்தியத்தின் ஒரு பகுதியை காசிமேத் அரசரான உஸ்மான் ஆட்கொண்டார். அந்த கட்டத்தில் பைசாண்டிய பேரரசு மிக பலவீனப்பட்டு காசிமேத்களிடம் தங்களின் பல பிரதேசங்களை இழந்தது. இந்நிலையில் இடைக்கால துருக்கிய கதையான உஸ்மானின் கனவு குறிப்பிட்டது போல் இளம் துருக்கிய அரசனான உஸ்மான் மூன்று கண்டங்களையும், மத்திய கிழக்கு பகுதி முழுவதையும் தன் அதிகார பரப்பாக்கிக் கொண்டார். அந்த பேரரசிற்கு உலகின் பாரம்பரிய ஜீவநதிகளான நைல், யூப்ரடீஸ், டைக்ரீஸ், தனூபி போன்றவை ஆகப்பெரும் வளமிக்க எல்லைகளாக இருந்தன. அவை நான்கு திசைகளிலிருந்தும் பாய்ந்து உதுமானிய பேரரசை வளமாக்கின. மேலும் அதன் வலுமிக்க அரண்களாக காகஸ், டாரஸ், பல்கான், அட்லஸ் ஆகிய பெரும் மலைத்தொடர்கள் இருந்தன. இதன் தொடர்ச்சியில் முதலாம் உஸ்மான் பைஸாண்டிய பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இவரின் காலமானது துருக்கியின் சீர்திருத்தங்களின் தொடக்க காலம். சமூக, பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் செய்யப்பட்டன. இவரின் காலத்திற்கு பிறகு அவரின் மகனான ஒர்கான் அதிகாரத்திற்கு வந்தார்.இவர் தன் அதிகார எல்லையை கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து பல்கான் வரை நீட்டித்தார்.  இவர் பர்ஸா நகரை கைப்பற்றி பின்னர் அதனை தன் தலைநகராக்கிக்கொண்டார். ஒர்கான் தன் பேரரசை மேலும் வளப்படுத்தினார். இவரின் காலத்தில் தான் கட்டிடக்கலையில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டன. துருக்கிய கட்டடக்கலை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் நுட்ப தாட்பங்கள் பரிணமிந்து சென்றன.

உதுமானிய பேரரசின் ஐரோப்பிய நுழைவின் முக்கியகட்டம் என்பது 1389 ஆம் ஆண்டு கொசாவா பகுதியை கைப்பற்றிய நிகழ்வு . இது செர்பிய ஆளுகையை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் சிலுவைப்போர்களின் உச்சகட்டமாக  1396 ல் நடந்த நிகோபலஸ் போரில் உதுமானிய அரசின் ஐரோப்பா நோக்கிய பரவலை பைஸாண்டிய அரசால் தடுக்க முடியவில்லை. அக்காலத்தில் பால்கன் பிரதேசத்தில் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டை யாராலும் தடுக்க முடியவில்லை. பின்னர் ஆட்சி, அதிகார கட்டத்தின் தொடர்ச்சியில் 1402-1413 ல் துருக்கியில் பெரும் உள்நாட்டு கலகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உதுமானிய பேரரசு சிதைந்தது. இதனை தொடர்ந்து ஒன்றாம் மெஹ்மூத்  உதுமானிய பேரரசை மறுநிர்மாணம் செய்தார். இந்நிலையில் உதுமானிய பேரரசிற்கு பிராந்திய, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக பல சவால்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியில் 1512 ல் ஒன்றாம் சலீம் உதுமானிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார். வரலாற்றில் உதுமானிய பேரரசை விரிவாக்கி, அதற்கு சரியான வல்லரசு அடையாளத்தை கொடுத்தவர் சலீம். இவர் காலகட்டத்தில் தான் பேரரசு மிகப்பெரும் இராணுவ பலத்தைப்பெற்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு மிகப்பெரும் சவாலாக  சலீம் இருந்தார். அரசியல் மற்றும் பொருளாதார பலம் இவர்காலத்திய பேரரசிற்கு மிகப்பெரும் வீச்சாக இருந்தது. மேலும் அரபுலக வரலாற்றில் அதன் முழுப்பிராந்தியமும் இவரின் கட்டுப்பாட்டில் வந்தது. குறிப்பாக 1512 -1517  ல் எகிப்திய பகுதி முழுவதையும் கைப்பற்றினார். மேலும் இதே காலகட்டத்தில் சிரியா, சவூதியின் ஹிஜாஸ் பாலைவனம் முழுவதும் இவர் கட்டுப்பாட்டில் வந்தது.  இவ்வாறாக அரபுலகின் இதயப்பகுதிகள் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு , அதன் மூலம் உதுமானிய பேரரசு இஸ்லாமிய உலகின் அதிகாரபூர்வ நபராக மாற்றம்  பெற்றது.

குர்துகளின் வாழ்வியலில், அவர்களின் இயக்கத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் எதிர்கொள்ளலாக இருந்தது. துருக்கிய குர்துகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டத்திலும் முதலாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம் வரையிலும் மிகப்பெரும் இனக்கொடுமைகளுக்கு உள்ளானார்கள். துருக்கிய குர்துகளின் தேசிய இனப்போராட்டத்தின் மிக முக்கிய பேரினவாதம் என்பது உதுமானிய பேரரசை  மையம் கொண்டதாக இருந்தது. சுல்தான் மஹ்மூத் இதன் கதாநாயகராக  இருந்தார். அவரின் காலகட்டம் குர்துகளின் வாழ்வில் மிகப்பெரும் துக்ககரமானதாக இருந்தது.குர்துக்களின் வாழ்க்கை நீரோட்டம் வற்றிப்போன நதியாக தொடர்ச்சியற்று சென்றது. பின்னர் சுல்தான் அப்துல் ஹமீத் அதிகாரத்திற்கு வந்தார். அவரின் காலகட்டத்தில் தான் துருக்கி ரஷ்யா போர் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் ஏராளமான துருக்கிய குர்துகள் அங்கிருந்து புலம்பெயர நேரிட்டது. ஆக உலக வரலாற்றில் உதுமானிய பேரரசு குர்துகள் தங்களின் சுயநிர்ணய உரிமையை கோருவதற்கான மிகப்பெரும் காரணமாக விளங்கியது.