காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Friday, April 19, 2013


ஒரு நகரமும் சாம்பலும் - எகிப்திய நாவலாசிரியர் யூசுப் இத்ரீஸ் ஓர் அறிமுகம்

.

மனித நாகரீகத்தின் தோற்றமாகவும், பாரம்பரிய கலாசார சின்னங்களின் தடமாகவும் இருக்கும் எகிப்து பல நூற்றாண்டுகளாகவே பல கலைஞர்களை, எழுத்தாளர்களை, விஞ்ஞானிகளை, வரலாற்றாய்வாளர்களை உருவாக்கி இருக்கிறது. பல காலகட்டத்தில் பல எழுத்தாளுமைகள் உருவாகி இருக்கிறார்கள். இந்நிலையில் அரபு இலக்கியத்திலேயே முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற நகுப் மஹ்பூஸ் மற்றும் தவ்பீக் ஹக்கீம் வரிசையில் யூசுப் இத்ரீஸ் முக்கியமானவர்.  எகிப்தின் பைரம் மாகாணத்தில் 1927 ல் பிறந்தார் இத்ரீஸ். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்த இத்ரீஸ் உயர்கல்வியை கெய்ரோ பல்கலைகழகத்தில் முடித்தார். மருத்துவத்துறை மீதிருந்த ஆர்வம் காரணமாக உயர்கல்வியில் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தார் இத்ரீஸ். அதே பல்கலைகழகத்தில் முதுகலை மருத்துவப்படிப்பை முடித்த இத்ரீஸ் பின்னர் பயிற்சி மருத்துவராக கெய்ரோ மருத்துவமனையில் சேர்ந்தார். ஆரம்பகட்டத்தில் எகிப்தின் நாசரியத்திற்கு ஆதரவாக இருந்த அவர் பிந்தைய கட்டத்தில் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார். இதற்காகவே Poor layman என்ற நூல் அவரிடமிருந்து வெளிவந்தது. இதனால் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் இத்ரீஸ். மேலும் அரபு தேசிய போராட்ட பிரக்ஞையை கொண்டிருந்ததால் சிறந்த தேசியவாதியாக அறியப்பட்டார். அவரின் அரசியல் உணர்வு மிகக்கூர்மையானது. விரிவும் , ஆழமும் கவிந்த மனநிலையோடு வெளிப்படுத்தக்கூடியது. இதன் தொடர்ச்சியில் அவரிடமிருந்து சிறந்த அரசியல் கட்டுரைகள் எகிப்திய இதழ்களில் வெளிவந்தன. மேலும் புகழ்பெற்ற எகிப்திய அரபு இதழான அல் அஹ்ரத்தில் இவரின் தொடர்ச்சியான பங்களிப்பு உலகளாவிய கவனத்தை இவருக்கு பெற்றுத்தந்தது. ஒரு தேர்ந்த அரசியல் சிந்தனையாளராக இத்ரீஸின் பங்களிப்பு எகிப்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதது. அரபு நாவல்களுக்கு நகுப் மஹ்பூஸ் பிதாமகனாக இருக்கும் பட்சத்தில், அரேபிய சிறுகதைகளுக்கு இத்ரீஸ் தான் எதார்த்த பிதாமகன். அவரின் உயிரோட்டமான, நுண்மையான புனைவுத்தன்மை கொண்ட பல சிறுகதைகள் அரபுலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. மேலும் எழுத்தில் மரபாக தொடரப்பட்டு வந்த அரபுமொழியை உடைத்து அதில் வட்டார வழக்காறுகளை இணைத்தவர். அதன் மூலம் கிராமத்து மொழியை, அதன் உணர்வை, கூட்டு சமூக உணர்வை அவரின் கதைகள் பிரதிபலித்தன. எதார்த்தவாத கதையமைப்பில் அவரின் கதைகள் பெரும்பாலும் வெளிவந்தன. இவரின் முதல் கதைத்தொகுப்பு Cheapest night  and other stories என்ற பெயரில் 1954 ல் வெளிவந்தது. அதில் அவரின் சுய போராட்ட உணர்வுகள் அதிகம் பிரதிபலித்தன. இவரின் படைப்புகள் பெரும்பாலும் வறுமை, பாலியல் உணர்வுகள், பாலியல் வறட்சி, மத அடிப்படைவாதம், ஒடுக்கப்பட்ட மனிதனின் வலி, துயரம் போன்றவைகளின் கூட்டாக இருந்தன. இந்த மனித உணர்தொகுதிகளை புனைவு வெளியில் காட்சி சித்திரங்களாக பிரதிபலித்தவை இவரது கதைகள். இவரின் முக்கிய நாவலான The Sinners இதன் சிறந்த வெளிப்பாட்டு உதாரணம். மனித வாழ்க்கையை போல் வலியும், மீட்டெடுக்க முடியாத துயரம் நிரம்பியது வேறில்லை என்பது இத்ரீஸின் முக்கிய பிரயோகம்.  நாடகத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்திய இத்ரீஸ் அரபு மொழியில் நாடகத்திற்கான தனிமொழியை உருவாக்கி அதை முன்னகர்த்தினார். மொத்தம் 9 நாடகங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. 11 சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. மேலும் மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றுமே கலையின் உச்சகட்ட மெய்ம்மையை அடைபவை. அதற்கான தரிசனத்தையும் கொண்டவை. மேலும் பலமுறை நோபல் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்ட இத்ரீஸுக்கு கடைசி வரை அது வாய்க்கப்படவே இல்லை. மாறாக நகுப் மஹ்பூஸுக்கு கிடைத்தது. மேலும் 1988ல் எகிப்திய அரசின் சிறந்த இலக்கிய பரிசு இவருக்கு கிடைத்தது. அது City of love and Ashes என்ற இவரின் நாவலுக்காக கிடைத்தது. இவரின் படைப்புகள் 24 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எகிப்திய விமர்சகர்கள் பலர் இவரை எகிப்திய கதை உலகின் நாயகர் என்கிறார்கள். இவரின் மூலம் தான் எகிப்திய /அரபு கதை உலகம் மேலும் செழுமையானது. அடுத்தக்கட்டத்தை நோக்கி தன் நகர்வை செலுத்தியது. வெறும் மரபார்ந்த கற்பனா யுகத்தில் நிலைகொண்டிருந்த அரபு இலக்கியத்தை தனித்துவமான, உயிரோட்டமுள்ள, இயங்குநிலை கொண்ட வடிவத்திற்கு மாற்றியவர் இத்ரீஸ் என்கிறார்கள் அரபு விமர்சகர்கள். இத்ரீஸின் படைப்பு வெளி முழுவதும் ஒடுக்கப்பட்ட,  வாழ்விலிருந்து அந்நியப்பட்டுபோன, துயராந்த மனிதர்கள் பற்றிய பதிவுகளாகவே இருக்கிறது. இந்நிலையில் தன் எழுத்து மற்றும் பிற தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் அரபுலகில் தீவிரமாக இயங்கி வந்த இத்ரீஸ் 1991 ல் மரணமடைந்தார். இவரின் மகளான  நெஸ்மா இத்ரீஸ் இன்றைய எகிப்தின் சிறந்த எழுத்தாளர். இத்ரீஸின் பெரும்பாலான படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. ஆக இருபதாம் நூற்றாண்டு அரபு இலக்கியத்தில், புனைவுலகில் யூசுப் இத்ரீஸ் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமை.

Idris, Yusuf: The Sinners 1984, U.S.A., (First English Language Edition.) (many reprints)
Idris, Yusuf: Rings of Burnished Brass 1992, American University in Cairo Press,                                                   (translator: Catherine Cobham)
Idris, Yusuf: City of Love and Ashes 1999, American University in Cairo Press,
Short Stories
The Cheapest Nights.
Isn't it ?
Dregs of the city.
The Hero.
An incident of Honour.
The End of the world.
Tha Language of Oh Oh.
The summons.
A House of Flesh.
I am Sultan of the law of existence.
The Freak
The Cotton King & Farahat's republic. Two Plays
The Critical Moment.
Al-Farafir.
Earthly Comedy.
The striped Ones.
The Third Sex.
Towards an Arabic Drama
The Harlequin
Novels and Novellas
Farahat's Republic & A Love story. [Two novellas]
The Sin.
The Disgrace.
Men and Bulls,The Black Soldier,Mrs. Vienna.[Novellas]
The White.
Other writings
Not very frankly speaking

No comments: