காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, February 19, 2009

உலக கண்ணோட்டத்தில் மத்திய கிழக்கு முரண்பாடு

சமீர் அமீன்

(இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு விவகாரம் குறித்து சமீர் அமீன் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரையை தற்கால சூழலின் அவசியம் கருதி வலைப்பதிவு வாசகர்களுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன்.)

மத்திய கிழக்கு முரண்பாடு என்பது உடைக்கப்பட முடியாத விவகாரமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அது இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அரபு அரசுகளை நிர்ணயிப்பதிலும், பாலஸ்தீன் மக்களின் பின்னும் இருக்கிறது. அரபு அரசுகளின் நோக்கம் என்பது போதுமான அளவில் தனக்கான அரசியல், பொருளாதார சுயாதீனத்தை பெற்று உலக முதலாளித்துவத்தின் சிறந்த பங்காளிகளாக மாறுவது தான். இந்த நோக்கத்தை அடைவதின் வழி பிராந்தியத்தில் தான் அபாயகரமாக, சவாலாக கருதும் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியும் என்று கருதுகிறது. இந்த உடனடியான கதாபாத்திரத்தின் பின்னுள்ள அரபு மக்களின் நலன்களும் , உத்திகளும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுகின்றன. இதனடிப்படையில் இந்த விவகாரம் என்பது கீழ்கண்ட அம்சங்களில் இருக்கிறது. 1. இந்த வரையறையில் அரபு அரசுகள் என்பது உண்மையில் இந்த விளையாட்டின் எஜமானன். இதனடிப்படையில் அவர்களுக்கிடையிலும், மற்ற பிரபல சக்திகளுக்கிடையேயான முரண்பாடு தீர்வில்லாமல் இருக்கிறது.
2. இந்த வரையறையில் இஸ்ரேலும், சியோனிசமும் அதற்கான சொந்த உத்திகளையும், நோக்கங்களையும் கொண்ட சுயாதீனமான சக்தியாக இருக்கிறது.3. இந்த வரையறையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அரபு பிராந்திய விஷயத்தில் பொதுவான உத்திகளை அமல்படுத்த நினைக்கின்றன.

அரபு மக்களிடையேயான இந்த மோதல் மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கம் 1947 ல் இருந்து துவங்கியதல்ல. மாறாக இதன் வேர் என்பது உலக முதலாளித்துவத்தின் தோற்றத்தோடு இணைந்தது. இந்த மோதல்களின் நீண்ட வரலாறு என்பது 16 ஆம் நூற்றாண்டு முதல் 1950 வரையிலான அரபு உலகின் தோல்விகளை சார்ந்ததாகும். உதுமானிய பேரரசு அதிகாரமேற்றதை தொடர்ந்த சமனற்ற அணுகுமுறைகள், 1840 ல் எகிப்திய பாஷா முகமது அலியின் தோல்வி, 1830 ல் அல்ஜீரியா கைப்பற்றப்படுதல், 1882 ல் எகிப்து மற்றும் துனீசியா மீதான ஆக்கிரமிப்பு செயல்பாடு, 1911 ல் மொராக்கோ மீது அதே மாதிரியான ஆக்கிரமிப்பு, 1919 ல் மத்தியகிழக்கின் பகுதிகள் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்காக பங்கிடப்படல் இவ்வாறாக தோல்விகளின் பட்டியல் நீளமாக இருக்கிறது. அரபு மக்களை பொறுத்தவரை 1948 ல் நடந்த இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரிவினையும் அதனை தொடர்ந்து இஸ்ரேலின் விரிவாக்க செயல்பாடுகளும் இவை அனைத்துமே ஐரோப்பிய காலனியமுறையின் விரிவாக்கத்தோடு இணைந்தது. இது சிறந்த உதாரணம் கூட.

ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனிய விரிவாக்கம் என்பது இறுதியில் அடக்க முடியாத விடுதலை போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. பத்தாண்டுகளின் நீட்சியில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பெருவாரியான அரபு நாடுகள் அனைத்தும் அவற்றின் அரசியல் விடுதலையை பெறத்தொடங்கின. அதே காலகட்டத்தில் சியோனிச காலனியாதிக்கம் அதிகாரத்துக்கு வரத்தொடங்கி பூர்வீகர்களான பாலஸ்தீனியர்களை அங்கிருந்து விரட்ட தொடங்கியது. அரபு பிராந்தியத்தில் அந்த காலகட்டத்தில் காலனியாதிக்கத்தின் முரண்நகையான வெற்றி என்பது ஆசிய மற்றும் ஆப்ரிக்கா தேவைகளை சார்ந்தும் இருந்தது.

எந்த முயற்சியுமே இங்கு அரபு தேசிய விடுதலை இயக்கத்தின் பரிசோதனையை பொறுத்து இருக்கிறது. எகிப்து மற்றும் பிறை வள நாடுகளில் (சிரியா, ஈராக், பாலஸ்தீன்)பிரிட்டனின் ஏகாதிபத்தியம் அங்குள்ள பெரிய நிலப்பிரபுக்களின் துணையோடு அந்த பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. அந்த நிலப்பிரபுக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த உலக பொருளாதாரத்தின் பலனை அடைந்தவர்கள். இந்த பகுதியில் அப்போது தோன்றிய அரபு தேசிய இயக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கமாக உருவெடுத்தது. அவர்கள் அங்குள்ள விவசாயிகள், சாதாரண மனிதர்கள், மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஆகியோரை அணிதிரட்டினார்கள். நீண்ட திருப்பங்களுக்கும், திருத்தல்களுக்கும் பிறகு இந்த தேசிய இயக்கம் 1950 வாக்கில் எதிர்வினையாளர்களை தூக்கி எறிந்தது. முதலில் எகிப்திலும், பின்னர் சிரியா மற்றும் ஈராக்கிலும் நடந்தது. 1950 மற்றும் 1960 ல் எகிப்தில் ஆதிக்கம் செலுத்திய கருத்தாக்கமான நாசரியம் இந்த நிகழ்வின் உச்சமாக இருந்தது. இது தேசியத்தின் பொருட்டு எல்லா அரபு நாடுகளையும் இந்த விவகாரத்தை கையாள்வதற்காக பயன்படுத்தி கொண்டது. சிரியா மற்றும் ஈராக்கில் எழுச்சி பெற்ற பாத் கட்சி, அல்ஜீரியா போர் (1954-1962)ஆகியவை இந்த தருணத்தில் ஒன்றோடொன்று சந்தித்து கொண்டன. இதிலிருந்து உருவான தேசிய அரசுகள் தங்களுக்கிடையே பொதுவான சாராம்ச குணாதிசயங்களை பங்கிட்டு கொண்டன. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலசீர்திருத்தம், தேசியமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்றவை இந்த பிராந்தியத்தில் தேசிய அரசை நிறுவின. இந்த சக்திகள் வலுவாக இருந்த காரணத்தால் பழைய பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு மாறாக மாற்று வழி முறை ஒன்றை தேட முனைத்தன. இதன் தொடர்ச்சி மொராக்கோ முதல் வளைகுடா வரை அந்நாடுகளின் சுதந்திரத்தை ஏகாதிபத்திய வல்லரசுகள் ஏற்று கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தின. இதன் பின்னர் இதில் மிதவாத அரசுகளின் அணியானது மற்றவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனது. நாசரின் தலைமையின் போது இது நடந்தேறியது.

நாசரியத்தின் எழுச்சி அரபுலகம் முழுவதும் சமூக எதார்த்தத்தை முன்னெடுத்தது. பல்வேறு படி நிலைகளில் தேசிய அமைப்புகள் பூர்ஷ்வா மேலாண்மை கூட்டணிகளை ஏற்படுத்தின. அவை தொழில்துறை, குலாகுகள் மற்றும் குட்டி பூர்ஷ்வாக்களை உள்ளடக்கி இருந்தன. இந்த அகல பிரிகையில் இரு விதமான போக்குகள் இருந்தன. ஒன்று தீவிர பூர்ஷ்வாக்கள் மற்றொன்று மிதவாத பூர்ஷ்வாக்கள். தீவிர பூர்ஷ்வாக்களை பொறுத்தவரை அவர்களின் நோக்கமானது நவீன மற்றும் தொழில்துறை ரீதியான அரசை ஏற்படுத்தி அதன் மூலம் உலக அரசமைப்பில் சம நிலையான பங்காளியாக மாறுவதாக இருந்தது. அதே நேரத்தில் மிதவாதிகளின் நோக்கமானது சர்வதேச உழைப்பு பிரிவினையில் கீழ்நிலை பங்காளியாக மாறுவதாக இருந்தது.

அமெரிக்காவின் யுக்தியானது அரபுலகில் எழுந்த தீவிர பூர்ஷ்வா போக்கை நிலைகுலைய செய்வதில் இருந்தது. அதற்காக இஸ்ரேலின் மற்ற அரபு நாடுகளுடனான இராணுவ தலையீட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. 1967 அரபு- இஸ்ரேல் போர் இதற்கான உதாரணம். இந்த போரில் எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளின் தோல்வியானது தீவிர பூர்ஷ்வா போக்கின் வரலாற்று மட்டுப்படுத்தலாக இருந்தது. மிதவாத பூர்ஷ்வாக்கள் இந்த போக்கிற்கு எதிராக வெகுஜன கூட்டணியை கட்டமைக்காமல் தங்களுக்குள்ளே சுயமாக மோதி கொண்டார்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரபு மக்களின் போராட்டமானது அரபு ஒற்றுமை விவகாரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டது.

தீவிர பூர்ஷ்வாக்களின் அரபு விடுதலை இயக்கம் அரபு ஒற்றுமைக்கான தளத்தில் அதிகம் இயங்கவில்லை.இதனால் வெகுஜன அரசியல் மேலாண்மைக்கான அறையை ஏற்படுத்த முடியாமல் போனது. எதிலுமே சந்தேக மனோபாவம் கொண்ட தீவிர பூர்ஷ்வாக்கள் பாலஸ்தீன் விவகாரத்திலும் இந்த எல்லைக்கு உள்ளானார்கள். இது சோவியத் யூனியனுடனான விஷயத்திலும் தொடர்ந்தது. மேலும் இவர்கள் அமெரிக்கா இப்பிராந்தியத்தில் சியோனித்தின் எழுச்சியை தடுத்து இவர்களின் முக்கிய கூட்டாளியாக மாறும் என நம்பினார்கள். ஆனால் அமெரிக்கா இந்த வழியில் செல்லவில்லை. மாறாக அது இவர்களின் பலவீனத்தை அடிப்படையாக வைத்து ஆதாயம் அடைய தீர்மானித்தது. அமெரிக்காவின் இந்த தரகுத்தனம் 1967 போருக்கு பிறகு சரியான வடிவத்தை அடைந்தது. ஏகாதிபத்தியத்தின் இந்த செயல்பாடானது மூன்று வித கட்டங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. முதல் கட்டம் 1967 க்கு பிறகு நாசரியத்தின் தோல்வியும், அரபு ஒற்றுமை போக்கின் தொடக்கமும், இரண்டாம் கட்டம் இன்திபாதா அல்லது திறந்த வெளி கொள்கையின் தோற்றம், மூன்றாம் கட்டம் புதிய தரகு பூர்ஷ்வா வர்க்கத்தின் தோற்றம் இவை எகிப்து, சிரியா,ஈராக் மற்றும் அல்ஜீரியாவில் ஏக காலத்தில் நடந்தேறின. இவ்வாறான நிலையில் அரபு தேசியவாதத்தின் தீவிர பிரிவானது சாதகமற்ற சமநிலையை மறு உருவாக்கம் செய்ய முயன்றது. சோவியத் யூனியன் உதவியுடன் 1973 அக்டோபரில் நடந்த போரின் விளைவாக எகிப்து சூயஸ் கால்வாய் பகுதியை கடந்து சென்றது. அதை மீட்டெடுத்த நிலையில் அரபு பூர்ஷ்வா வர்க்கத்தின் உருவாக்கத்திற்கும் இது வழிவகுத்தது. அரபு ஒற்றுமை வெளிப்பட்ட இந்த தருணத்தில் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடனான (OPEC)புரிந்துணர்வின் அடிப்படையில் எண்ணெய் விலையை உயர்த்தவும், செல்வ வளமிக்க வளைகுடா நாடுகளுடனான நம்பகத்தன்மைக்கும், நகர்வுக்கும் முன்னோக்கமிட்டது.

ஆனால் இது வெகுகாலம் நீடிக்கவில்லை. மாறாக 1973 மீண்டும் ஒரு தரகு முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. சந்தேகமின்றி இந்த போர் பல அர்த்தப்படுத்தலை கொண்டது. எகிப்து அதிபர் அன்வர் சாதத்தின் சோவியத் யூனியனுடனான உராய்வுக்கு பிறகு மிதவாத அரபுகள் எல்லாம் ஓரே நேர்கோட்டில் இணைந்து அமெரிக்காவுக்கான விளையாட்டு வீரர்களாக மாறினார்கள்.இந்நிலையில் அரபு வெளிக்குள் இருந்த வளைகுடா பிராந்தியமானது தனக்குள் ஒன்றிணைந்து உலக முதலாளித்துவத்தின் மேலும் ஒரு பிரிவாக மாறியது. தங்களுக்குள் சுழற்சி முறையிலான நிதி முறைமை மூலம் அரபு பூர்ஷ்வாக்களின் தன்னாட்சியை கேள்விக்குள்ளாக்கியது. சவூதி அரேபியா எகிப்துக்கு மாற்று நிதி தீர்வை வழங்க மறுத்தது. மாறாக சர்வதேச நிதி நிறுவனம் எகிப்து மீது விதித்த நிபந்தனையை ஏற்க சொன்னது. அதன் பிறகு மட்டுமே தான் நிதி உதவி அளிக்க இயலும் என்றது. மேலும் அன்றைய தருணத்தில் எகிப்துக்கு சினாய் மலைப்பகுதியை மீட்டெடுப்பது அவசியமாக இருந்தது. 1982 ல் இஸ்ரேல் லெபனானின் பெய்ரூட் பகுதியை கைப்பற்றி பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. இதற்கான அரபுலகின் எதிர்வினை ஒன்றுமில்லை.அரபு பூர்ஷ்வாக்களின் தீவிர பிரிவினர் இந்த விஷயத்தில் சிதைந்தும், நிலைகுலைந்தும் போயிருந்தனர். அவர்கள் ஏகாதிபத்தியத்தின் விதியை ஏற்றுக்கொண்டு அதன் தரகு பங்காளியாக இருந்தனர். ஆக அரபுலகின் 30 வருட அரசியல் வாழ்க்கையானது சிக்கலான தருணங்களை அளித்திருக்கிறது. சியோனிச இஸ்ரேல் அரசின் தலையீடு அதை நிலைகுலைய செய்தது. இஸ்ரேல் என்பது அதற்கான சொந்த நோக்கங்களையும், வழிகளையும் கொண்ட தன்னார்பு சக்தியா?

சியோனிசம் என்பது யூத சமூகத்தின் துயரத்தின் எதிர்வினையாகும். ஐரோப்பிய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த காயங்களின் மருந்தாக இதை கண்டுபிடித்தனர். குறிப்பாக அது நவீன கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிலும் நடந்தேறியது. இந்நிலையில் இந்த கதையானது ஐரோப்பிய சோக வரலாற்றின் பகுதியோடு சம்பந்தப்பட்டது. கிழக்கத்திய சமூகத்தோடு அல்ல. ஐரோப்பாவுக்கும் , மத்திய கிழக்கிற்குமான உரையாடல் என்பது நிலத்திற்கு திரும்புதல் என்ற பாலஸ்தீன் விவகாரத்திலிருந்து தான் தோற்றம் பெறுகிறது. இது 14 நூற்றாண்டாக பாலஸ்தீனை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றவும், விரட்டியடிக்கவும் செய்யும் மரணயுத்தமாகும். 19 ம் மற்றும் 20 நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு இந்த வாய்ப்பு மிக லாவகமாக பயன்பட்டது. நிலமற்ற மக்கள் நிலத்திற்கு திரும்புதல் என்பதன் வழி ஆயிரக்கணக்கான யூதர்களை அங்கிருந்து வெளியேற்றவும் அவர்களை அரபுகளின் நிலத்தில் குடியேற்றம் செய்யவும் இது மிக சௌகரியமானதாக இருந்தது.
சியோனிச தலைவர்கள் இந்த வாய்ப்பை ஐரோப்பிய காலனிய விரிவாக்கம் போன்று பயன்படுத்தி கொள்ள தீர்மானித்தனர். அன்றைய பாலஸ்தீன் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்பதே சாத்தியப்பட்டிருக்காது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு திறன் ஏற்றுக்கொள்ளகூடியதல்ல. 1920 ல் அறுபதாயிரமாக இருந்த யூதர்களின் எண்ணிக்கை 1948 ல் ஆறு இலட்சமாக உயர்ந்தது அதன் தூய ஆக்கிரமிப்பு திறனை வெளிப்படுத்துகிறது. இஸ்ரேலிய அரசானது 1947 ல் வரையப்பட்ட எல்லைக்கோட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் பாலஸ்தீன் மக்களுக்கான இருப்பையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை. அது தன் எதிர்காலத்தை முடிவற்ற காலனிய விரிவாக்கமாக மாற்றிக் கொள்ள முனைகிறது. இந்த விரிவாக்கத்தினால் அது சாதிக்க கூடியது ஒன்றுமில்லை. தெற்கு லெபனான் மற்றும் சினாய் பகுதிகளை தன்னோடு இணைத்து கொள்ளலாம் என்று கனவு காண்கிறது. இஸ்ரேலின் இந்த யுக்தியும், கருத்தியலும் மிக எளிமையானது. 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் இனவாத கண்ணோட்டமே அது. சியோனிஸ்ட்கள் அரபுகளையும், அரபு தேசங்களையும் பார்க்க தவறியது மட்டுமல்ல, பாலஸ்தீன் மற்றும் லெபனானின் தேசிய உரிமையையும் மறுக்கிறார்கள்.

அமெரிக்க அரசானது இப்போதும், எதிர்காலத்திலும் இஸ்ரேலுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவை நிறுத்தாது. மேலும் இஸ்ரேல் அமெரிக்க உலக யுக்தியின் முக்கியஸ்தலமாக இருக்கிறது. இஸ்ரேல் அழிவுகரமான பலமான ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை வைத்திருப்பதன் மூலம் தன்னை பிராந்தியத்தின் பலசாலியாக கருதி கொள்கிறது. அதே நேரத்தில் அரபு படைகள் தனக்கான சுயபாதுகாப்பு தகுதியுடன் விளங்கவில்லை. இஸ்ரேல் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகு மக்களின் அணிதிரட்டலையும் நன்றாக அறிந்தே இருக்கிறது. இது உலகளாவிய இடதுசாரிகளின் கோஷம் என்றும் அதற்கு தெரியும். மேலும் ஆசிய, ஆப்ரிக்க மக்களுக்கு எதிரான ஐரோப்பிய அணிதிரட்டலுக்கான அதன் விண்ணப்பமும் இன்னமும் உயிருடன் இருக்கிறது. அரபு ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் தலைமை தன்னையோ அல்லது தன் குடிமக்களையோ இன்னமும் நம்ப தயாரில்லை. அது மற்றவர்களின் தலையீட்டை எதிர்நோக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் (யுகோஸ்லேவியா, அல்பேனியா தவிர) அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய வரம்பை ஏற்றுக்கொண்டன. அதன் பிறகு அவை ஐரோப்பிய கவுன்சிலாக ஒன்றிணைந்து நகர் தேசியவாதமாக மாறின. அரபு அரசுகளை பொறுத்தவரை அவை தங்களை பூர்ஷ்வா தேசிய அரசுகளாக மறு கட்டமைப்பு செய்து எவ்வித வெற்றிகரமான செயல்பாடுகளற்ற அரசுகளாக மாறி விட்டன. சியோனிசத்திற்கு எதிரான இவற்றின் எதிர்வினை திட்டங்கள் இன்னும் கடக்க முடியாத தூரத்தில் இருக்கின்றன.

No comments: