காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Friday, February 14, 2014

காதலர் தினமும், சமூக கட்டமைப்பும்




Valenties day என்ற காதலர் தினம் மேற்கில் இருந்து வந்தது. பொதுவாக இன்றைய கட்டத்தில் எல்லா கொண்டாட்ட தினங்களும் மேற்கில் இருந்தே வருகின்றன. குறிப்பாக அந்த தினங்களில் பெரும்பாலானவை கிரேக்க புராண கதைகளோடு சம்பந்தப்பட்டவை. அதன் ஆட்சியாளர்களோடும் சம்பந்தப்பட்ட நிறைய கதைகள் உண்டு. அந்த அடிப்படையிலேயே இந்த காதலர் தினம் உருவாக்கப்பட்டு தற்போது இந்தியா போன்ற நாடுகளிலும் இது தொடர்கிறது. உண்மையில் காதல் என்பது என்ன? காலத்தை பின்னுக்கு தள்ளியே நாம் இதனை ஆராய வேண்டியதிருக்கிறது. இரு பாலினரும் ஒரே மனநிலையோடு ஈர்க்கப்படும் காதல் என்பது ஆதி உணர்வு தான். மனிதன் தோன்றிய நாளில்  காதல் என்பது நாம் அறிந்து கொண்ட அல்லது புரிந்து வைத்திருக்கிற அர்த்தத்தில் அல்ல. மாறாக இனக்குழு மற்றும் நாடோடி சமூக மனநிலையோடு சம்பந்தப்பட்டது. புராதன சமூகம் தாராள பாலுறவு ஒழுங்கோடு தான் நகர்ந்து வந்திருக்கிறது. இங்கு திருமண ஒழுங்கு இல்லை. கட்டுப்பாடு இல்லை. இங்கு நிர்ணயிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கை இல்லை. திருமணம் என்ற வரையறுக்கப்பட்ட வாழ்க்கை சூழலில் இருந்தே நடப்பு காதலின் பரிணாமம் தொடங்குகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு வந்த பிறகு தனக்கு விருப்பப்பட்ட ஆணையோ அல்லது பெண்ணையோ தேர்ந்தெடுக்கும் உரிமையை , அதற்கான சுதந்திரத்தை தன்வயப்படுத்திய முறைமையே காதல்.. அதன் பிந்தைய கட்டத்தில் கீழை சமூகங்கள் (Eastern Societies)இந்த தேர்வு முறையை, உரிமையை தனிநபர் என்ற நிலையிலிருந்து குடும்பம் சார்ந்த ஒன்றாக மாற்றின. இதிலிருந்தே தற்போதைய முரண்பாடுகளும், நெருக்கடிகளும் தோன்றி விட்டன.

திருமணம் என்ற வாழ்க்கை முறையியல் உருவான தருணத்தில் இருந்தே காதலும் உருவாகி விட்டது.  நவீனத்துவமும் அதன் வாழ்க்கை ஒழுங்கும் ஊடுருவிய மேற்கத்திய சமூகங்களில் காதல் என்பது முழுக்க முழுக்க தனிநபர் தேர்வாகவே இருக்கிறது. அங்கு 18 வயது என்பது ஒரு மேஜின் நம்பர். அதை ஓர் ஆணோ அல்லது பெண்ணோ கடந்து விடும் போது அது அவர்களுக்கான காலமாக, சகாப்தமாக மாறி விடுகிறது. அங்கு 18 வயது வரை மட்டுமே ஓர் ஆண் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். அதன் பின்னர் தனக்கு விருப்பப்பட்ட ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ அவர்கள் உரையாட, நட்பு கொள்ள, காதலிக்க முழு சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆணும், பெண்ணுமே தங்களுக்கான இணை குறித்த அதிக பிரக்ஞையோடு இருக்கின்றனர். இந்த மரபு மேற்கில் Romantic literature உருவான காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. அந்த இலக்கியங்கள் மேற்கின் தனிமனித வாழ்வை, அதன் அந்தரங்க புனிதத்தை அதிகம் பிரதிபலித்தன.  தனிமனித ஆன்மாவை அதிகம் பிரதிபலிக்கும், படிமப்படுத்தும் கவிதைகளை மேற்கத்திய இலக்கிய மரபில் நாம் காண முடியும். பல மேற்கத்திய கவிஞர்கள் காதல்வயப்பட்டவர்களே... வாழ்க்கையை அந்தரங்கப்படுத்தும், எதிர்பால் உறவை அகங்கொள்ளும் சூழலை பிரக்ஞைப்படுத்தியவர்கள். மேலும் குழந்தை என்ற கருத்துருவமும் அங்கு அதிக முக்கியத்துவத்தோடு பார்க்கப்படுகிறது. ஒரு குழந்தை அந்த பருவத்தின் சகல உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று மேற்கத்திய உலகம் வலியுறுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான இயல்பான வளரும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் அதன் கோட்பாடு. மேலும் Walking bus என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக நடைபாதையும் பல மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன.

கீழை நாடுகள் அல்லது இந்தியா போன்ற நாடுகள் குடும்பம் என்ற நிறுவனத்தை அதிகம் கட்டிக்காப்பவை. அதுவே அதற்கான பலம். அதனூடே அதன் விழுமியங்களும், மதிப்புகளும் உருவாகி இருக்கின்றன. குறிப்பாக சாதிய அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்தில் குடும்பம் அதிக அதிகாரம் செலுத்துகிறது. வணிக நிறுவனங்கள் கூட குடும்பத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. இந்த மதிப்பை குலையாமல் இவை பாதுகாக்கின்றன. இந்த அடிப்படையில் தான் காதல் என்பதும் குடும்ப தேர்வாக இருக்கிறது. காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட தங்கள் குழந்தைகள் காதலிப்பதை விரும்புவதில்லை. இங்கு சாதிகள் தான் காதலை தீர்மானிக்கின்றன. இந்திய புராண இதிகாசங்களில் காதல் சார்ந்த கதைகள் ஏராளம். மேலும் கீழை இலக்கியங்களில் அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழி சார்ந்த இலக்கியங்களில் காதல் காவியங்கள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. அவற்றில் புகழ்பெற்றது லைலா மஜ்னூன் காவியம். தன் இலட்சிய காதலியை தேடி அலைந்த  பித்தன் என்னும் பொருள் கொண்ட மஜ்னு என்றழைக்கப்பட்ட குவைஸ் பின் அல் முலாவா பற்றிய கதை. தான் கனவு கண்ட காதலியை தேடி பிரதேசம் தாண்டி வந்த மஜ்னூ பின்னர் தன் காதலி இறந்து விட்டதை அறிந்து அவளின் கல்லறையில் போய் கவிதை பாடுவான்.

"நான் இந்த சுவரை கடந்து விடுகிறேன். இது லைலாவின் சுவர்

இந்த சுவற்றை முத்தமிடுகிறேன்

காதல் வீட்டை என் இதயத்திலிருந்து எடுத்துக்கொண்ட வீடல்ல

ஆனால் ஒன்று  குடிகொள்ளும் இந்த வீடு"


இதே போன்றே குவைஸ் - லுப்னா,  காதிர் - அஸ்ஸா,  மர்வா - அல் மஜ்னூ பர்னாஸி, அன்தாரா - அப்லா, மற்றும் இர்பான்  - ஷுபி ஆகியோரைப்பற்றிய பதிவுகள் இருக்கின்றன. மேலும் உருது மொழியின் கஸல்கள் என்பவை காதலன் மற்று காதலி ஆகிய இருவரிடையேயான உரையாடலின் இசை வடிவம்.



இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய காலகட்டத்தில் காதல் என்பது  தனிமனித நிலைக்குள் வரவில்லை. சாதிய குடும்பங்கள் சார்ந்த அதீத கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. சாதிய சமூகங்கள் இதற்காகவே பஞ்சாயத்துகளை அமைத்திருக்கின்றன. இதில் பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்க சமூகம் சாதியத்திற்குள் ஊடுருவி பெண்ணை காலி செய்கிறது. இதற்காகவே பல கௌரவக்கொலைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்கள் தான் இதன் பலியாடுகள். தமிழ்நாட்டில் இளவரசன் -திவ்யா சம்பவம் சாதிய குடும்பங்களின் அக்கிரமத்திற்கு பெரும் உதாரணமாக இருக்கிறது. ஒரே சாதியில் கூட தனிநபர்கள் காதலிக்க முடிவதில்லை. அங்கும் உட்சாதி, குல, கோத்திரம் மற்றும் ஜாதகம் குறுக்கே வந்து நிற்கிறது.  எல்லா நிலையிலும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தனிநபர் சுதந்திரம் பறிபோகி வருகிறது. அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவன ஊழியர்களிடம் இந்த சாதி மற்றும் மதமறுப்பு சார்ந்த காதல் திருமணங்கள் எல்லாவித எல்லைப்பாடுகளை தாண்டி நடந்து வருகின்றன. இது ஒரு சிறிய மாற்றமே... அதே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண முறையில் அதிகரிக்கும் விவாகரத்துகள் குடும்ப அமைப்பை சிதைத்து வருகின்றன. வாழ்க்கைக்கு மற்றொரு அர்த்தத்தை தேடும் நிகழ்வு இது. இந்நிலையில் தனிமனிதர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன், அவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாட, உளவியல் பிணைப்பை அதிகப்படுத்த ஒரு களம் தேவைப்படுகிறது. அது வெளியாக, காலமாக இருக்கலாம். ஆக இன்றைய இந்தியா போன்ற சாதியக் கட்டமைப்பை வலுவாகக்கொண்ட  நாடுகளில் காதல் என்பது சாதிய உடைப்பதாக, அதனை கடந்த ஓர் ஆரோக்கியமான, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்... அது தான் இம்மாதிரியான தினங்களின் லட்சியமாக இருக்க வேண்டும்.

No comments: