காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 31, 2008

நான் ஏன் தினமும் சவரம் செய்கிறேன்

நான் ஏன் தினமும் சவரம் செய்கிறேன்

- எச்.பீர்முஹம்மது

நவீன உலகில் ஆண்களின் தனிமனித ரசனையில் தாடி (Beard)என்ற முகமுடியும் முக்கிய இடத்தை பெறுகிறது. வாழ்க்கையின் இயல்பான இயக்கத்தில் மனித நடத்தை (Human Behavior)சில உடல்குறியீடுகளை கொண்டு சில சமயங்களில் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னொரு சூழலில், வேறு விஷயங்களில் நாம் கடக்கும் போது தனிமனித நடவடிக்கைகள், குணநலன்கள் முக்கியம் பெறுகின்றன. இஸ்லாத்தின் தனிமனித நடத்தை ஒழுங்குகள் சில நேரங்களில் காலத்தை நோக்கிய சிக்கலுக்கு உள்ளாகின்றன. முக முடி அல்லது தாடி இன்று முகம் மாதிரியே உலகளாவிய சித்திரமாக மாறி விட்டது. அது ஒரு குறிப்பிட்ட சமூகங்களின் கலாசார ஒழுங்கிலிருந்து தனிமனித ஆணையாக (Mandatory) மாறி விட்டதை குறித்து நாம் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. பண்டைய எகிப்தியர்கள் தாடியை துக்கத்தின் குறியீடாக கண்டனர். இன்றும் இது பரவலான சமூக நிலையில் அதன் குறியீடாக இருப்பதை நாம் காண முடியும். அதே சமயத்தில் சுமேரியர்கள், பாபிலோனியர்கள், மெசிடோனியர்கள் அதை அழகின் வெளிப்பாடாக்கினர். பண்டைய ரோமர்களிடத்தில் சவரம் என்ற ஒரு செயல்பாடே இருக்கவில்லை. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் டிசினஸ் என்பவர் சவரம் செய்வதை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் அது ஒரு நடத்தை ஒழுங்காக ரோமர்களிடத்தில் தொடக்கம் பெற்றது.ரோமர்களில் ஸ்கிபி இனத்தவர்கள் முதன்முதலாக முக சவரத்தை பின்தொடர்ந்தனர். இதன் பிறகு ரோம் முழுவதும் முகச் சவரம் பரவலானது. அதை அவர்கள் சமூக குறியீடாக்கினர். இது கிரேக்கர்களின் கலாசார எதிர்வாக பார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் கிரேக்கர்களிடத்தில் தாடி ஒரு கலாசார ஒழுங்காக இருந்தது. சாக்ரடீஸ் தொடங்கி கோபர்னிகஸ் வரையில் தாடி தொடர் ஒழுங்கானது. அறிவு ஜீவிகள் தாடி வைத்துக் கொள்ளும் நடைமுறை இதன் மூலம் தொடர்ந்ததை நாம் அறிய முடிகிறது. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் ரோமர்களிடத்தில் கிரேக்க கலாசாரம் பரவியது. அதை தொடர்ந்து அவர்கள் தாடி வைத்துக் கொள்ள தொடங்கினர். நீரோ மன்னன் காலத்து ரோமர்கள் ஒரு சிறுவனின் முகத்தில் வளரும் கன்னிமுடியை வெட்டி அதை வழிபாட்டு பொருளாக்கினர். ரோமர்களில் ஒருவன் இறந்து விட்டால் அவர்கள் தலைமுடி, முகமுடி போன்ற எல்லாவற்றையும் வளர்க்க தொடங்கினர். அது அவர்களின் துக்க குறியீடாக வெளிப்பட்டது. இதற்கு நேர்மாறாக கிரேக்கர்கள் இறப்பு நிகழ்ந்து விட்டால் முழு சவரம் செய்தார்கள்.( இது இந்தியாவில் பெரும்பாலான சாதிய சமூகங்களில் வழக்கிலிருக்கிறது). ரோமர்களிடத்தில் தாடி மனோ தைரியத்தின் குறியீடாக இருந்தது.ரோமானிய அடிமைகள் தங்கள் தலை மற்றும் முகமுடியை வெட்ட அனுமதிக்கப்படவில்லை. இன்னொரு நீட்சியில் அது அடிமைசார் வாழ்வின் பிரதிபலிப்பு. ரோமர்களில் கணவனை இழந்த மனைவி தன் தலைமுடியை வெளிக்காட்டாமல் அதை துணியால் மூடிவைக்கும் கலாசார நிர்பந்தத்திற்கு ஆளானாள். தலை முடியை மூடிவைத்தல் ஒரு கலாசார அமைப்பிற்கு துக்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் தருணத்தில் மற்றொரு கலாசார அமைப்பிற்கு அது ஒழுக்க குறியீடு. பெண்ணை பற்றியதான கலாசார கருதுகோள்கள் பிரதேசம் தாண்டி வேறுபடுகின்றன.ஜெர்மானிய கட்டி இனக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் போரில் எதிர்களால் தோற்கடிக்கப்படும் வரை தலைமுடியையோ அல்லது தாடியையோ சவரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதே வழக்கம் இந்தியாவில் சில சமூக அமைப்பினரிடம் இருந்தது. ருஷ்ய மன்னன் பீட்டரும், இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றியும் தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்டவர்கள் தாடி வைத்தால் அவர்களுக்கு வரி விதித்தனர். அவர்களுக்கு தாடி ஒழுங்கின்மையாக தெரிந்தது.மறுமலர்ச்சி காலம் ஐரோப்பிய வரலாற்றின் பெரும் துவக்கம். 17 ஆம் நூற்றாண்டே இதன் வெளிப்பாடு. இக்காலத்தில் ஐரோப்பிய கத்தோலிக்க பாதிரிமார்கள் சவரத்தை தங்கள் தூய்மைத்துவத்தின் குறியீடாக கண்டனர். புரட்டஸ்டண்ட் இயக்கம் மரபார்ந்த, நிறுவன சமயத்திற்கு எதிராக உருவான நிலையில் அவர்கள் தாடி வைப்பதை எதிர் செயல்பாடாக்கினர். இதன் தொடர்ச்சியில் கத்தோலிக்க பாதிரியார்களும் தாடி வைக்க தொடங்கினர். இப்போது புனித குறியீடு எதிர்வாக திரும்புகிறது. இன்றும் கத்தோலிக்க பாதிரியார்களிடத்தில் அவர்கள் சார்ந்திருக்கும் சபையை பொறுத்து இந்த கலாசாரம் தொடர்கிறது.

தாடியை தனிமனித நடத்தை ஒழுங்காக மாற்றியது இஸ்லாம் மட்டுமே. நாம் அதன் வேர்களை இஸ்லாமுக்கு முந்தைய இயற்கை வழிபாட்டிய, நாடோடி சமூகங்களிலிருந்து தொடங்க முடியும். இஸ்லாமின் வரலாற்றிற்கு சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எகிப்தியர்கள் சிறிய அளவிலான தாடியை வைக்க தொடங்கினர். அன்று அது ஒரு பரவலாக்க நிகழ்வாகவே இல்லை. பின்னர் ரோமிய கலாசார தாக்கம் இவர்களிடத்தில் பரவியது. தங்கள் முகம் அருவருப்பான ஒன்றாக அவர்களுக்கு தெரிந்தது. இத்தருணத்தில் அவர்களில் சவரம் செய்வதெற்கென்றே தனிமனிதர்கள் உருவானார்கள். இது அசிரிய, மெசிடோனிய, சுமேரிய, அரேபிய நாடோடி இனமக்களிடத்திலும் பரவியது. ஒரு நடத்தை ஒழுங்கமைவாக மீசையை கத்தரிக்காமல் வளர்த்தல், தாடியை முழுவதுமாக சவரம் செய்தல் அவர்களிடையே அமைந்தது. செமிட்டிக் மதங்கள் இப்பிரதேசங்களில் உருவான போது அவை முன் நிலவிய ஒழுங்கை மாற்றியமைக்க முற்பட்டன. இதன் விளைவு தான் மீசையை கத்தரித்தல், தாடியை வளர்த்தல். இது யூத வரலாற்றிலிருந்து தொடங்குகிறது. ஈரானின் பார்சி மன்னனான சைரஸ் தாடி வைத்திருந்ததாக சிறு குறிப்பு ஒன்று காணகிடைக்கிறது பண்டைய யூதர்கள் தாடியை மனிதத்துவ குறியீடாக கண்டனர். யூதத்திற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவம் உருவான நிலையில் அது இவ்வழக்கத்தை பின்தொடர்ந்தது.

இஸ்லாமிய தோற்றச்சூழலின் வித்தியாசப்படுத்தலையும், ஒத்திவைத்தலையும் குறித்து நாம் அதன் பிரதிகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். அன்றைய சூழலில் அரேபிய நாடோடி இனத்தவர்கள், பிற இனக்குழுக்களிடத்தில் தாடி பரவலாக இல்லை. அவர்கள் மீசையை முழுவதுமாக வளர்த்தி, தாடியை சவரம் செய்தனர். இதற்கு மாற்றாகவே இஸ்லாம் தாடியை அறிமுகப்படுத்துகிறது. இப்னு உமர் அறிவிக்கும் தாடியை பற்றிய நபிமொழி காணகிடைக்கிறது."நீங்கள் அறியாமை காலத்தவர்கள் செய்ததற்கு நேர்மாறாக செய்யுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை கத்தரியுங்கள்." இதன் மூலம் தாடி என்பது வரலாற்றுப்போக்கில் கலாசார ஒழுங்குகளின் மோதலாகவே இருந்து வந்திருக்கிறது.கலாசார ஒழுங்குகள் பிரதேச எல்லைகளை கடக்கும் போது இனங்களிடையேயான முரண்களாக உருவாகின்றன. அது மேய்ச்சல் தொழில் சார்ந்த பழங்குடிகளின் கலாசார குறியீடு.இஸ்லாத்தின் தோற்ற காலத்தில் தாடி மற்ற இனக்குழுக்களிடமிருந்து வித்தியாசப்படுத்தலாகவும், அடையாளமிடலாகவும் இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும் அன்றைய சூழலில் இது அரசியல் இஸ்லாமிலிருந்து ஆன்மீக இஸ்லாமாக மாறும் கட்டத்தின் நிகழ்தகவு எனலாம்.

நவீன காலகட்ட ஐரோப்பாவில் பெரும்பான்மையினர் மத்தியில் தாடி வழக்கில் இல்லை. ஆனால் அமெரிக்க உள்நாட்டு போரின் போது அரசியல் தலைவர்கள் தாடி வைக்க தொடங்கினர். போர் பிரதிபலிப்பு நடவடிக்கையாக அது வெளிப்பட்டது. முதல் உலகப்போர் கட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு தாடி தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. பல்வேறு வித போர்பாதுகாப்பு காரணங்கள் இதன் பின்னால் சொல்லப்பட்டன. ஆனால் வியட்நாம் போரின் போது அங்குள்ளவர்கள் தாடி வைக்க தொடங்கினர். மாற்று கலக குரலின் அடையாளமாக அது பார்க்கப்பட்டது. பிந்தைய கட்டத்தில் அது பரவலாக காணாமல் ஆனது. ஐரோப்பாவில் கிரேக்கத்திற்கு அடுத்தபடியாக தாடியின் ஒழுங்கமைவு ஏற்பட்டது பிரான்சில். பிரெஞ்சு பாணியிலான தாடி முறை இன்று உலகமயமாக இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான பிரான்சை சேர்ந்தவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியவில்லை. நூறாண்டு கால ஐரோப்பிய வரலாற்றில் தாடியை நாம் நேர்-எதிர் நடத்தை ஒழுங்காகவே பார்க்க முடியும்.

இஸ்லாம் மேற்குலகிற்கு சவாலான, நெருக்கடியான கட்டத்தில் இருந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் தாடி அதற்கு பயங்கரவாத குறியீடாக தென்படுகிறது. உலக மீடியாவின் வெளியில் அது மிகைக்காட்சிப் பரப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் தன்னுடைய பக்கங்களை நிரப்புவதற்கு மிகுந்த சிரமப்படும் தினசரி ஒன்று உண்டு. அதுவே தமிழ்ச்சூழலில் அச்செயல்பாட்டை தொடங்கி வைத்தது. அதை தொடர்வதற்கான அதே அளவுசிரமத்தையும் எடுத்துக்கொள்கிறது. இன்னொரு சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தாடியை நிரந்தர கலாசார ஒழுங்கிலிருந்து நடத்தை ஒழுங்காக தீர்மானிக்கிறது. இஸ்லாத்தின் சில சட்ட பிரிவுகளின் படி சவரம் செய்வது விலக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சி போக்கில் தாடி என்பது ஆண்களின் தீர்மானமற்ற சக்தியாக மாறும் தருணத்தில் எந்த கலாசார அமைப்புகளாலும் அதை நிர்பந்திக்க முடியாது. அரபு நாடுகளில் அரபு இனத்தவரிடையே அதன் எந்த தாக்கத்தையும் பெருமளவில் காண முடியவில்லை. வளைகுடாவின் பெரும்பான்மையான நிறுவனங்கள் தாடியை அனுமதிப்பதில்லை என்பது பரவலாக்கப்பட்ட ஒன்று. சில நிறுவனங்கள் அபராதம் கூட விதிக்கின்றன. அப்துல் வஹ்ஹாபின் நாட்டில் கூட (சவூதி அரேபியா) விமான பணியாளர்களுக்கு சவரம் அவசியம்.ஒரு நெருக்கடியான தருணத்தில் சவரம் மீள் பரிசோதனை நடவடிக்கையாக அமைவதை நாம் கவனிக்கிறோம். வளைகுடாவின் கடல் நீரே சக மனிதனின் எல்லா தேவைகளுக்குமானதாக அமையும் போது, பின் விளைவாக அவன் தலைமுடி தானாகவே சவரத்துக்குள்ளாவது பற்றி எந்த உலகமும் கவலைப்படுவதில்லை. அப்துல் ரஹ்மான் அல் முனீபின் "Cities Of Salt" என்ற நாவலை படிக்கும் போது இதை உணர முடியும். இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் அரபு இனத்தவரின் உடல் ரோமங்களின் அமைப்பு முறையை நாம் இதன் விளைவில் தான் சிந்திக்க முடியும். தென்னிந்தியாவின் சில பகுதிகளில் முன்னொரு காலத்தில் முஸ்லிம் ஆண்களின் தலைமுடி அமைப்பு முறை கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தனிமனித உடலியல் மற்றும் நடத்தை விதி காலத்தை எப்போதுமே தாண்ட முடிவதில்லை. நிகழ்கால வாழ்வின் எதார்த்தம் அது. உலகின் தலைச்சிறந்த சவர கிரீம்கள், முக கிரீம்கள் மற்றும் பிளேடுகள் அனைத்திற்கும் மத்திய கிழக்கு நாடுகளின் நுகர்பொருள் சந்தையில் கணிசமான வரவேற்பு உண்டு. ஆக தாடியை உலக அல்லது இந்திய ஊடகங்கள் குறிப்பிட்ட மதத்தின் வன்முறை குறியீடாக பார்ப்பது அபத்தமானது. இது அந்த மதத்தை சார்ந்த அனைவரும் வன்முறையாளர்கள் என்ற பிம்பத்தை பொதுப்புத்தி மீது திணிக்கிறது. ஆக மத அடையாளங்கள் குறித்த சிக்கலை அறிவார்ந்த சமூகம் அந்த மதத்தின் குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலோடு பொருத்தி, சமகாலத்தோடு அதை நகர்த்தி பார்ப்பதே சிறந்ததாக இருக்கும்.

2 comments:

காலப் பறவை said...

arumai nanbare - Stalin Felix

அன்புடன் புகாரி said...

வெகு நேர்த்தியாகத் தகவல்களைச் சேகரித்து சுவாரசியமாக எழுதப்பட்ட கட்டுரை. அருமை அருமை

அன்புடன் புகாரி