காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label இந்துத்வா. Show all posts
Showing posts with label இந்துத்வா. Show all posts

Saturday, August 24, 2013

தமிழ்நாட்டின் மத அரசியல் இயக்கங்களின் மாறி வரும் முகங்கள்




தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசியல் படுகொலைகள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான அரசியல் பின்புலம் தனித்த ஒன்று என்றாலும் வெகுஜன உளவியலில் இது மத அடையாளத்தின் மீதான ஒன்றாக திணிக்கப்படுகின்றது. திராவிட இயக்க அரசியல் பின்னணியை சார்ந்த தமிழ்நாட்டில் இது போன்ற செயல்கள்   சமூக நல்லிணக்கத்தையும், பரஸ்பர பண்பாட்டு உறவையும் சீர்குலைக்கும் முயற்சியாகும். சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படாமல் இருப்பது புலனாய்வின் பலவீனத்தையே காட்டுகிறது. சில நேரங்களில் இவை மத அடையாளம் சார்ந்த அப்பாவிகளை கைது செய்யும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கிய துயரமாக இருந்த பாகிஸ்தான் பிரிவினை தருணத்தில் கூட தமிழ்நாடு உள்ளடக்கிய தென்னிந்தியா அமைதியாக தான் இருந்தது. அதற்கு பின்பு தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில மத வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன.  இதன் தொடர்ச்சியில் 1982 ல் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் தமிழ்நாட்டில் முதன் முதலாக மத வன்முறைக்கு விதை தூவியதுடன், சமூக நல்லிணக்கத்திற்கும் சவால் விட்டது. இந்த காலகட்டத்தில் தான் இந்து முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இவற்றின் நோக்கம் தமிழ்நாட்டு இந்துக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதாகும். இதன் காரணமாக சமூக துண்டிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. அதே நேரத்தில் இந்திய அளவில் இந்துத்வ சக்திகளின் செயல்பாடுகள்  இந்தியாவில் பல பகுதிகளில் மதரீதியாக மக்களை துண்டிப்பதற்கு தூண்டலாக இருந்தன. இதன் தொடர்ச்சியில் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற கலவரங்கள், வன்முறைகள் இரு சமூகங்களிடையே மேலும் உராய்வை அதிகப்படுத்தின. இந்நிலையில் தமிழ்நாட்டில் 1995 ல் முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சிறுபான்மையினரான முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது என்பதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பிந்தைய கட்டத்தில் கோவையில் நடைபெற்ற விசனகரமான சம்பவங்கள் சமூக அமைதிக்கு சவால் விடுபவையாக இருந்தன. காவலர் செல்வராஜ் படுகொலையும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளும் இருதரப்பிலும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தின. பலதரப்பட்ட தொழிலாளர்கள் நிறைந்த தொழிற்சங்க பூமியான கோவை மத வன்முறை நிறைந்த பதட்டமான ஒன்றாக மாறியது. இதன் பின்னர் 2004 ல் பல்வேறு வித தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக (குடுமிச்சண்டைகள்) அந்த இயக்கத்திற்குள்ளேயே பிளவு ஏற்பட்டு பி.ஜெய்னுலாப்தீன் தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் உருவானது. இதன் பின்னர் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது. சவூதிய அரேபிய வகைப்பட்ட வஹ்ஹாபிய இஸ்லாத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட இது முஸ்லிம் சமூக இளைஞர்களை அதிகம் கவரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. இஸ்லாமிய அடிப்படை பிரதிகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகம் செய்தல் என்பதாக அதன் செயல்பாடு நீள்கிறது. இதற்குள்ளும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.எம். பாக்கர் தலைமையில்  அகில இந்திய தவ்ஹீத் ஜமா அத் என்ற அமைப்பு உருவானது. மதத்தின் ஒட்டுமொத்த அதிகாரம் மற்றும் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் ஆகியவை தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்ற உள்ளகத்தோடு தமிழ்நாட்டின் மேற்கண்ட முஸ்லிம் இயக்கங்கள் ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு களத்தில் வர துடிக்கின்றன. இவற்றில் சமூக உரிமை சார்ந்த பிரச்சினைகளை தவிர மற்ற படி அனைத்தும் பிறசமூகங்களுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும், அதன் பயன்பாட்டிற்கும் அச்சுறுத்தலான விஷயங்களாகும். குறிப்பாக ஊடகங்களில் தங்கள் தலைவர்களின் முகம் வர வேண்டும் அல்லது தங்களுக்கு உவப்பான விஷயங்கள் மட்டுமே ஒளிபரப்பாக வேண்டும் என்ற இவற்றின் நிலைபாட்டை குறிப்பிடலாம். பன்மயப்பட்ட இந்திய சமூகத்தில் அனைத்து இனத்தினரின் உரிமை சார்ந்த விவகாரங்கள், ஒடுக்குமுறைகள் மற்றும் பிற்போக்குத்தனங்கள் அனைத்துமே இன்றைய நவீன ஊடக வெளியில் விவாதிக்கப்படுகின்றன. இவை சமூகத்தை மூடுண்ட நிலையிலிருந்து திறக்கும் முயற்சியே. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் பல தீவிர மத இயக்கங்கள் ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்பது தொடங்கி சமீபத்தில் சென்னை பல்கலைகழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமினா வதூதின் கவுரவ விரிவுரையை தடை செய்த நிகழ்ச்சி வரை ஒவ்வொன்றாக தொடர்கின்றன. பன்மய சமூகமாக இயங்கும் இந்தியாவில்/ தமிழ்நாட்டில் தீவிர முஸ்லிம் இயக்கங்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். சமூக நல்லிணக்கத்திற்கும் உணர்வுபூர்வமான நெருக்கடிகளை உருவாக்கும். சமூக நல்லிணக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைமை இப்போது இருக்கிறது. ஒவ்வொரு இயக்கமும் தங்களுக்கான சுதந்திரம் மற்றும் அவற்றின் எல்லை எது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை இம்மாதிரியான இயக்கங்கள் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தின் மிக முக்கிய தேவை.