காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label எட்வர்ட் செய்த். Show all posts
Showing posts with label எட்வர்ட் செய்த். Show all posts

Thursday, August 20, 2009

ஓரியண்டலிசம், அரபு அறிவுஜீவிகள், மார்க்சியம் மற்றும் பாலஸ்தீன் வரலாற்று தொன்மம்


எட்வர்ட் செய்த்துடன் நூரி ஜரா நேர்காணல்

கேள்வி:- உங்கள் புத்தகம் ஒன்றின் முன் அட்டைப்படம் ஹமாஸின் சுவர் வாசகத்தை வெளிப்படுத்தும். அதாவது ஹமாஸ் போரட்ட வடிவம் அல்லது அது மாதிரி என்பதாக அதன் அர்த்தம். அந்த படத்தை நீங்கள் தானா தேர்ந்தெடுத்தீர்கள்?
எட்வர்ட் செய்த்:- இல்லை. பதிப்பாளரே அந்த புத்தகத்தின் வடிவத்தை தேர்ந்தெடுத்தார்.
கேள்வி:- உங்களுக்கு இதில் மாறுபட்ட பார்வை உண்டா?
எட்வர்ட் செய்த்:- இல்லை.இந்த விவகாரத்தில் நான் அதிகமாக சம்பந்தப்படவில்லை. மேலும் நான் இதற்கு எதிரானவன் அல்ல. ஏனென்றால் இது வெறும் வடிவம் மட்டுமே. எனக்கு அதில் முக்கியமாக படுவது அதன் உள்ளடக்கமே.
கேள்வி:- உங்களின் சிறந்த வாசகர்களாகிய அறிவுஜீவிகள் எல்லாம் நவ இஸ்லாமிய குழுக்களை சார்ந்தவர்கள். அவர்களின் ஆய்வுகளில் உங்கள் கருத்துக்களை, எழுத்துக்களை மேற்கோள் காட்டுவது அதிகரித்து வருகிறதே?
எட்வர்ட் செய்த்:- நிச்சயமாக இந்த விஷயம் பற்றி நான் அடிக்கடி வெளிப்படுத்தி இருக்கிறேன். அதில் என்னுடைய கருத்துக்கள் பல தவறாக வியாக்கியானம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை விமர்சிக்கும் விஷயத்தில். முதலாவதாக நான் மதசார்பற்றவன். இரண்டாவதாக நான் மத இயக்கங்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மூன்றாவதாக அந்த இயக்கங்களின் முறைமை, வழிகள், பகுப்பாய்வு, மதிப்பீடுகள், பார்வைகள் இவற்றின் மீது எனக்கு உடன்பாடில்லை. ஒரு குறிப்பிட்ட விளக்கத்தின் படி ஒர் ஆசிரியனின் நூலை வாசிக்கும் போது அது அடிக்கடி நிகழ்ந்தால் தவறான புரிதல் ஏற்பட சாத்தியப்பாடு அதிகம். என் ஓரியண்டலிச நூலின் புதிய பதிப்பில் நான் இந்த விஷயம் குறித்து அறிவுறுத்தி இருக்கிறேன். அதில் எனக்கும், இஸ்லாமிய வாசிப்பிற்குமான மிகப்பெரும் வித்தியாசத்தை குறிப்பிட்டிருக்கிறேன். நான் இஸ்லாம் பற்றி பேசவில்லை. மாறாக மேற்கில் இஸ்லாம் பற்றிய சித்திரமும், அதன் அடிப்படை மீதான அவர்களின் விமர்சனமும் பற்றிய பார்வையே அது.
கேள்வி:- தற்போதைய அரபு மொழி எழுத்துக்களின் வாசிப்பு போக்கானது ஓரியண்டலிசம் இந்தியா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், அரபு மொழி வாசிப்பு என்பது மற்ற மொழிகளை விட முக்கியமானது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
எட்வர்ட் செய்த்:- இந்த கேள்விக்கு நான் முன்னர் பயன்படுத்திய உதாரணங்களை தான் குறிப்பிடுகிறேன். இந்தியா, ஜப்பான், அல்லது தென்னாப்ரிக்கா ஆகியவற்றின் ஆய்வுகள் எனக்கு அரபுலகை விட ஆழமாக தெரிகின்றன. குறிப்பாக இந்திய வரலாற்று புலத்தில் அடித்தள மக்கள் பற்றிய ஆய்வானது மூன்றாம் உலக சிந்தனை பள்ளிகளில் முக்கியமானதும், அது எழுத்தில் பின்காலனிய சிந்தனையை உற்பத்தி செய்வது மற்றும் தீவிர வரலாற்று பகுப்பாய்வுமாகும். இந்த சிந்தனைப்பள்ளியானது ஓரியண்டலிசத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்துவதுடன், எந்த அமெரிக்க பல்கலைகழகமும் இந்த சிந்தனை பற்றிய பிரதிநிதிகள் இல்லாமல் இல்லை. உண்மையில் இதற்கு இணையாக சிந்தனைப்பள்ளிகள் அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் இல்லை. அடித்தள மக்கள் பற்றிய ஆய்வானது அமெரிக்க வரலாற்றை எழுதுவதிலும் தாக்கம் செலுத்துகிறது. அது மாதிரியே மற்ற உலக பல்கலைகழகங்களிலும் தாக்கம் செலுத்துகிறது. என்னை பொறுத்தவரை ஓரியண்டலிசம் அரபுலகை விட மற்ற பகுதிகளில் அதிகமாக கவனிக்கப்படுகிறது.
கேள்வி:- இதற்கு என்ன காரணம்?
எட்வர்ட் செய்த்:- காரணம் ஓரியண்டலிசம் என்பது அடிப்படையில் அரபுலகினரால் கருத்துக்கள் அடிப்படையிலான பகுப்பாய்வு சிந்தனையின் வளர்ச்சியாக பார்க்கப்படாமல் வெறும் முரண்பாட்டு வழிமுறையாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஓரியண்டலிசம் என்பது அவமானகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒருவரை அவமதிக்க வேண்டுமென்றால் அவரை ஓரியண்டலிஸ்ட் என்று அழைத்தால் போதும். இதுவே என் புத்தகத்தின் மிகைப்படுத்தப்பட்ட வாசிப்பின் எதிர்மறையான விளைவுகள்.
கேள்வி:- உங்கள் புத்தகத்தில் நீங்கள் இந்த சொல் பற்றிய விசனகரமான உதாரணங்களை அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறீர்களே?
எட்வர்ட் செய்த்:- ஒரு வேளை. ஆனால் ஓரியண்டலிசமும் அதன் சூழலும் அவமதிக்கப்பட்டதின் எல்லையை விட மிக விரிந்த சூழலில். ஓர் ஆசிரியன் என்ற முறையில் நான் அதற்கு சார்பானவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்பது அந்த புத்தகம் என்பது பகுப்பாய்வு முறை, ஒழுங்கமைக்கப்பட்ட கோட்பாட்டு சட்டகம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அது எவ்வகையிலும் இந்த ஓரியண்டலிஸ்ட் என் எதிரி என்றோ, இது எனக்கு எதிரானது என்றோ, இதை நான்விரும்புகிறேன் அல்லது இதை வெறுக்கிறேன் என்றோ குறிப்பிடவில்லை. மேலும் அரபு சமூகத்தில் அந்த முறைமையின் அடிப்படையில் நாங்கள் சிறைக்கைதிகள், நாங்கள் கடந்த கால இருளிலிருந்து விடுபட்டு ஒன்றை வளர்த்தெடுக்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கேள்வி:- உங்கள் வாசகர்களில் பலர் உங்கள் கோட்பாடுகளுக்கு எழுத்து வடிவில் எதிர்வினையாற்றுவதில்லை. அவர்கள் உங்கள் புத்தகத்தில் நீங்கள் முன்வைக்கும் சூழலின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள். இங்கு வித்தியாசம் என்னவென்றால் வாசிப்பு என்பது எழுத்தாக மாறவில்லை.
எட்வர்ட் செய்த்:- இது வெறும் வாசிப்பை அடிப்படையாக கொண்டது. அது எழுத்தாகவோ அல்லது விவாதமாகவோ மாறவில்லை. நான் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஓரியண்டலிசம் 1978 ல் வெளிவந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக சுமார் பத்து புத்தகங்களை எழுதியிருக்கிறேன். கலாசாரம் மற்றும் ஏகாதிபத்தியம் (Culture and imperialism)உட்பட. இந்த புத்தகங்கள் எல்லாம் இலக்கிய விமர்சனம், தத்துவம் மற்றும் பிற விஷயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
கேள்வி:- நீங்கள் உங்கள் புத்தகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறீர்களா?
எட்வர்ட் செய்த்:- ஓர் ஆசிரியன் புதிய ஒன்றை அளிப்பதற்கு தொடர்ந்து முயல வேண்டும். அது அவனின் எழுத்தாக்கம் குறைவதை தடுக்கும். எல்லோர்களின் அறிவானது அவர்களின் வித்தியாசமான எழுத்துக்கள் மூலம் புதிய சிந்தனையை வளர்த்தெடுக்கும். இது மக்கள் என் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு முக்கியமாக படுகிறது. என்னுடைய முக்கிய ஆர்வமே தொடர்ந்த எழுத்தின் மீதான கவனம் அன்றி, ஏற்கனவே எழுதியதை திருப்புவது அல்ல. அதாவது எனக்கு இன்னும் கொஞ்சம் தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது.

கேள்வி:- அரபுலகின் தற்போதைய நிகழ்வுகளின் போக்கானது அறிவுஜீவிகளின் கருத்துக்கள், பகுப்பாய்வு, ஆராய்ச்சி இவற்றில் மிக போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இவர்கள் உண்மைகளை கண்டு அதிர்வதுடன், வலுவான சிந்தனையை உற்பத்தி செய்வதற்கு பதில் எதிர்வினைகளையே அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்.
எட்வர்ட் செய்த்:- இது அரபுலகில் குறிப்பிட்ட எல்லை வரை சரியான விஷயம். என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையானது நான் இந்த பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறேன். மேலும் என்னுடைய தினசரி, வாராந்திர, மாத, வருட வேலை என்பது நான் வாழும் மேற்குலகம் சார்ந்ததாக இருக்கிறது. இரு அமெரிக்க பல்கலைகழங்களை தவிர (கெய்ரோ, பெய்ரூட்)மற்றபடி எனக்கு எந்த அரபு பல்கலைகழகத்தோடும் உறவில்லை. அதனால் அங்குள்ள பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் அரபு அறிவுஜீவிகள் ஆகியோரைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆக நிலைமையின் போதாமை குறித்தவனாக நான் இருக்கிறேன். ஆனால் கிடைக்கும் விவரங்களை வைத்து எனக்கு உங்கள் உள்வாங்கலை மிக வேகமாக புரிந்து கொள்ள முடிகிறது.
கேள்வி:- நீங்கள் இன்னும் புனர் மார்க்சியத்தை எதிர் சொல்லாடலாக பார்க்கிறீர்களா? உங்களின் முந்தைய குறிப்புகள் அடிப்படையில் நான் புரிந்து கொண்டது நீங்கள் இது சாத்தியமா அல்லது சாத்தியமில்லையா என்பது குறித்த கேள்வியில் இருக்கிறீர்கள். இந்த கேள்வி மிக தீவிரமானதும், வெளிப்படையானதுமாக நமக்கு தெரிகிறது. தற்போதைய உலக நெருக்கடியில் புனர் மார்க்சியம் நம்பிக்கை தரும் தடமாக இருக்க முடியும் என்று நான் நினைக்கலாமா?
எட்வர்ட் செய்த்:- மார்க்சிய விவகாரம் குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன் சொற்கள் பற்றிய சர்ச்சைக்குள் நான் உள்ளாக விரும்பவில்லை. இங்கு கேள்வியே மார்க்சியம் என்பது என்ன? நான் மார்க்சியனா அல்லது மார்க்சியன் இல்லையா என்பதல்ல. நான் இதை முற்றிலும் வித்தியாசமாக பார்க்கிறேன். ஒரு தாராள மற்றும் சுதந்திர அறிவுஜீவி என்ற நிலையில் அவை மார்க்சியமோ அல்லது வேறொன்றோ நான் கோஷங்களுக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுக்கிறேன். மார்க்சிய பகுப்பாய்வு முறை அல்லது பொருளாதய பகுப்பு முறை , அதன் பாடங்களும், கூறுகளும் தற்போது நாம் வாழும் முறைமை பற்றிய புரிதலுக்கு மிகவும் உதவுகின்றன. இங்கு மார்க்சிய ஆய்வுமுறையாக நான் குறிப்பிடுவது கிராம்சி மற்றும் லூக்காஸ் ஆகியோரின் பங்களிப்புகளை தான். இதன் வழி நாம் மார்க்ஸ் எதை சிந்திக்கவில்லை. தற்போதைய சூழலுக்கு நாம் எதை பயன்படுத்த முடியும் என்பதை பற்றி பகுப்பாய்வு செய்ய முடியும். நமக்கு தேவை மரபார்ந்த மார்க்சியத்தை மறு உற்பத்தி செய்வதோ அல்லது கோஷங்களை உயிர்ப்பிப்பதோ அல்ல. மாறாக தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய சொல்லாடல்களை உற்பத்தி செய்வதும், புதிய கண்ணோட்டத்தோடு கூறுகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்தலுமே.

கேள்வி:- ழாக் தெரிதாவின் நிரந்தர நாடுகடத்தல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இது மாதிரியே பாலஸ்தீனியர்களையும் நாம் கருதலாமா?
எட்வர்ட் செய்த்:- ஒரு வேளை
கேள்வி:- பிறகு இரு நிலைமைகளுக்கும் இடையே என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள்?
எட்வர்ட் செய்த்:- வித்தியாசம் என்னவென்றால் யூதர்கள் பாலஸ்தீன் பிரதேசத்துடனான தங்களின் உறவு 3000 ஆண்டுகள் முந்தையது என்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் நாடுகடத்தப்பட்டு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் பாலஸ்தீனியர்களின் கட்டாய புலப்பெயர்வு நேற்று தான் ஆரம்பமானது. இன்னும் நாம் யூதர்களின் அதிகாரபூர்வ வரலாறு என்பது டயஸ்போராவினாலும், நிரந்தர நாடுகடத்தல் கருத்தாலும் உருவாக்கப்பட்டது என்பதை மறக்க வேண்டாம். இந்த வரலாறு நிறைய தொன்மங்களுக்கு பயன்படுகிறது. பாலஸ்தீனியர்களாகிய நாம் இந்த தொன்மங்களை தவிர்த்து விட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். மேலும் அறிவுஜீவிகளாகிய நாம் வரலாற்று மற்றும் பருண்மையான உண்மைகள் மீது அதிக கவனம் செலுத்தி , தொன்ம பரிமாணங்கள் பயன்படுத்தப்படுவதை நிராகரிக்க வேண்டும். பாலஸ்தீனிய அகதி எப்போதுமே பாலஸ்தீன் அகதியாக தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனியர்களின் தற்போதைய நிலைமையை கையாளாத வரை பாலஸ்தீன் பிரச்சினைக்கு எதார்த்த தீர்வு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆக கேள்வியே நாம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு 1948 க்கு முந்தைய வரலாற்றுக்கு திரும்ப முடியுமா? என்பதே. நான் சந்தேகம் கொள்கிறேன். நாம் இழப்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நம் மக்கள் போராட்டத்தில் தற்காலிகமாக தோல்வியுற்றிருக்கிறார்கள். இது எதுவரை? தற்போது இதற்கு யாரிடத்திலும் இறுதி விடை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாம் இப்போது செய்ய வேண்டியது இந்த இழப்புகளை மட்டுப்படுத்துவது தான்.
கேள்வி:- யூதர்கள் டயஸ்போரா என்ற சொல்லை புராதன இடத்தை குறிக்கும் கூட்டு பழைமை ஏக்கமாக கருதுகிறார்கள். சில பாலஸ்தீனியர்கள் இந்த சொல்லை பாலஸ்தீன் பிரதேசத்திலிருந்து அவர்களின் அந்நியமாதலை குறிக்க பயன்படுத்துகிறார்கள். பாலஸ்தீனியர்கள் இந்த சொல்லை வேறு அர்த்தத்தை குறிக்க பயன்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குறிப்பாக பாலஸ்தீனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் அவர்களின் எதார்த்த இடத்தை குறிக்கவும், அவர்கள் வீட்டு சாவியை இன்னும் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும் பயன்படுத்தலாமா? பாலஸ்தீனியர்கள் பயன்படுத்த டயஸ்போராவுக்கு மாற்றான வேறு சொல் இருக்கிறதா?
எட்வர்ட் செய்த்:- அரபியில் நான் சாதத்(பரவலாக்கம்) என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். தொன்ம கற்பனை அடிப்படையிலான பல சொற்கள் மீதான என் விமர்சனம் மற்றும் எச்சரிக்கை தொடர்ந்த போதும் இதனை பயன்படுத்தி வருகிறேன். இயல்பாக நான் "டயஸ்போரா" என்ற சொல்லை நிராகரித்து வந்திருக்கிறேன். ஆனால் அதை பயன்படுத்துவதை தடுப்பதற்கு ஒன்றுமில்லை. யூதர்கள் தங்கள் சொந்த கற்பனையை நிறைவு செய்வதற்கு இதனை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் பாலஸ்தீனியர்களின் வித்தியாசமான நிலைமையைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறோம். பாலஸ்தீன் நிலைமை மற்றும் பாலஸ்தீனிய சமூக விருப்பம் இவை அந்த தேசத்திற்கு விநோதமானது.
(எட்வர்ட் செய்த்தின் Power, Politics and culture என்ற நூலிலிருந்து)
(உயிரோசை)

Monday, June 8, 2009

அதிகாரம், அரசியல் மற்றும் கலாசாரம்- எட்வர்ட் செய்த் அறிவுலகில் ஒரு நெடும் பயணம்




எட்வர்ட் செய்த் மரணமடைந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி பரவலான எழுத்தோட்டங்கள் இருக்கின்றன. இவரை பற்றிய எழுத்தோட்டங்கள் கோலப்புள்ளிகள் மாதிரி வெளிவந்திருக்கின்றன. கீழைச்சிந்தனை மரபில் எட்வர்ட் இன்றும் குவியமானவராக இருக்கிறார். காலனியத்திற்கு பிந்தைய கட்டத்தில் மேற்கின் அறிவுலகில் ஆதிக்கம் செலுத்திய கீழைத்தேய வாதி. பௌதீக உலகின் அறிவுத்தளம் என்பது மேற்காக புனையப்பட்ட தருணத்தில் தன் Orientalism நூல் மூலம் அதை தகர்த்தவர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில் இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற்போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்காலனிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட் செய்த்தின் இளமைக்காலம் பாலஸ்தீன் பகுதியில் ஆரம்பமானது.1935 ல் ஜெருசலமில் ஒரு நடுத்தர குடும்பத்தில் செய்த் பிறந்தார். 1948 ல் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீனில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவர் குடும்பம் எகிப்துக்கு புலம்பெயர்ந்தது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த செய்த் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து மேற்படிப்பை தொடர்ந்தார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு பட்டங்களை பெற்ற செய்த் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். எட்வர்ட் செய்த் மேற்கத்திய வாழ்க்கை மூலம் தன் மொழிப்புலத்தை மிக வலுவாக்கிக்கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளில் வலுவான அடித்தளம் அவருக்கிருந்தது. மேலும் தாய்மொழியான அரபி அவரை பின்தொடர்ந்து வந்தது. மொழியின் சாத்தியபாடுகள் அவரை முன்னோக்கி இழுத்துச் சென்றன. இவரின் முதல் நூல் 1966 ல் Joseph conrad and fiction of autobiography என்ற பெயரில் வெளிவந்தது. ஜோசப் கன்ராட் படைப்புகள் பற்றிய மதிப்பீடாகவும், விமர்சன கோட்பாடாகவும் இருந்தது. மேலும் நவீனத்துவம் , சிந்தனை மரபில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த பதிவாகவும் இருந்தது.
எட்வர்ட் செய்த்தை மேற்கில் அதீதமாக கவனப்படுத்தியது அவரின் ஓரியண்டலிசம் நூலாகும். பின் காலனிய சிந்தனையின் மூலநூலாக அறிவு ஜீவிகளால் அளவிடப்படும் இது மேற்கு பற்றிய பெரும் பிம்பத்தை தகர்த்தது. ஐரோப்பா காலம் காலமாக கிழக்கத்திய பிராந்தியத்தை மதிப்பிட்ட முறையை செய்த் விமர்சித்தார். குறிப்பாக மேற்கு அரபுலகை அறிவு ரீதியாக அணுகிய விதம் வரலாற்று ரீதியாக மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றார். அவரின் கருத்துப்படி ஓரியண்டலிசம் என்பது கிழக்கு (Oriental)மற்றும் மேற்கு (Occidental)ஆகியவற்றின் இயற்கை தத்துவம் மற்றும் அறிவுதோற்றவியல் அடிப்படையிலான சிந்தனா வகைமையே. அது ஆசிய கண்டத்தின் அல்லது கிழக்கின் புவியியல் , அறவியல் மற்றும் கலாசாரத்தை குறிக்கும்.இரு நிலப்பிளவுகளின் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கவிஞர்கள், வரலாற்றாளர்கள், ஆட்சியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் இந்த வித்தியாசத்தை வடிவமைக்கிறார்கள். நெப்போலியன் எகிப்தை கைப்பற்றியதை தொடர்ந்து ஓரியண்டலின் எதார்த்த வடிவம் தொடங்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை கைப்பற்றிய நெப்போலியன் படிப்படியாக அல்ஜீரியா, மொராக்கோ போன்ற நாடுகளை கைப்பற்றினார். இதன் தொடர்ச்சியில் மத்திய கிழக்கின் இந்த பிரதேசங்களில் மேற்கின் அரசியல் மற்றும் கலாசார ரீதியான மேலாதிக்கம் நிறுவப்பட்டது. தொடர்ந்து இந்த பிராந்தியங்களில் பிரிட்டனின் வருகையும் இந்த ஆதிக்கத்தை தொடர செய்தன. சிவில் மற்றும் அரசியல் சமூகம் சில வித்தியாசங்களை கொண்டிருக்கிறது. சிவில் சமூகம் பள்ளி, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் சமூகம் அரசு, ராணுவம், காவல்துறை, அதிகார வர்க்கம் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. இதில் அரசியல் சமூகத்தின் மீது நேரடியான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் கலாசாரம் மறைமுகமாக மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. கலாசாரத்தின் சில வடிவங்கள் சில தருணங்களில் கருத்தியல் ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ மற்றொரு சிவில் சமூகம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை கிராம்சி சமூக மேலாண்மை (Hegemony) என்றார். கிராம்சி கூறிய இந்த மேலாண்மையே ஓரியண்டல் சொல்லாடல் மீதும் படிந்திருக்கிறது. இந்த இடத்தில் மேற்கத்திய உலகமானது ஆதிக்க கருவியாக செயல்படுகிறது. இங்கு கருத்தியல் உற்பத்தி கருவிகளின் பங்கு முக்கியமானது. ஒரு கலாசாரத்தின் அல்லது நாகரீகத்தின் கருத்தை உருவாக்கும் கருவியானது அது உருவாக்கும் பிரதியை அசலாக்க வேண்டும். அந்த அசல் முறைப்படியானதாக இருக்க வேண்டும். இதை அசலானது அல்லது போலியானது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மேற்கு இருக்கிறது என்கிறார் செய்த். கீழை சமூகத்தின் தொன்மங்கள், வரலாறுகள், நாகரீகங்கள், புராணங்கள், புனித பிரதிகள், ஆவணங்கள் போன்றவற்றை போலியானவையாக மேற்கு பார்த்து வந்திருக்கிறது. உலக நாகரீகத்தை கண்டறிந்தது மற்றும் அதை வியாபித்தது மேற்கு தான் என்பதான புனைவை உருவாக்கி இருக்கிறது. கீழை சமூகத்தின் குறிப்பாக மத்தியகிழக்கு அரபு சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் எல்லாம் பொருட்படுத்த தகாதவை என்று மேற்கு காலம் காலமாக கருதி வந்திருக்கிறது. இதன் மூலம் மேற்கின் பிரதியாதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. மேலும் கீழைத்தேய கோட்பாடு அதன் எதார்த்த புறநிலையையை விட அதிகமும் கலாசார நடைமுறைகள் மீதே கவனம் செலுத்துகிறது. கீழை சமூகங்களில் குடும்பம், மதம் போன்ற முதல் நிலை மையங்கள் அதிக கட்டுப்பாட்டுடன் விளங்குவதை இதனடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். இவை இரண்டும் குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல்மயமாகும் என்றார் எட்வர்ட் செய்த். அதற்கு உதாரணமாக மத்தியகிழக்கு அரபு மற்றும் முஸ்லிம் சமூகத்தை எடுத்து கொண்டார். இவை சில கருதுகோள்களை கொண்டு ஸ்திரமற்றதாக இருக்கின்றன. 1.மேற்கின் இஸ்லாம் மற்றும் அரபுலகம் பற்றிய அவநம்பிக்கை. 2. அரபுகளுக்கும் இஸ்ரேலிய சியோனிஸ்ட்களுக்குமான போராட்டம். இது அமெரிக்க யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம். 3. அரபுகள் அல்லது இஸ்லாம் குறித்த உணர்ச்சிபூர்வமற்ற முறையிலோ அல்லது அடையாள பூர்வமாகவோ விவாதிக்க மேற்கில் எந்த கலாசார நிலைமையும் இல்லாதது. மேலும் மத்திய கிழக்கு இன்று மிகப்பெரும் அதிகார அரசியல், எண்ணெய் பொருளாதாரம், இரட்டை அதிகார மனத்தை கொண்ட விடுதலை வேட்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இவை அனைத்துமே மேற்கின் சாதகமான விஷயமாக மாறி இருக்கின்றன. இதற்கான மாற்றுகளை தேடுவதற்கான உபாயங்களை எட்வர்ட் செய்த் கண்டறிந்தார்.
எட்வர்ட் செய்த்தின் எழுத்து, சிந்தனை, அறிவுலக செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய கோடிடும் பகுதியாக பாலஸ்தீன் பிரச்சினை இருந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் செய்த்தின் நிலைபாடு தெளிவாக இருந்தது. அவர் சுதந்திர இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் அமைவதில் உடன்பாடாக இருந்தார். இனரீதியாக இணக்கமான பிரேதசமாக இரண்டும் அமைய வேண்டும் என்ற கனவே கடைசி வரை அவரிடம் இருந்தது. இந்த பிரதேசத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமை என்பது பிளவுபடாதது. நெகிழ்வுதன்மை கொண்டது. பரஸ்பர புரிதல் அடிப்படையில் வரலாற்று ரீதியாக இரு யூத, அரபுகளின் எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றார். பாலஸ்தீன் தேசிய கவுன்சில் அதன் பிறகு பாலஸ்தீன் விடுதலை இயக்கம் போன்றவற்றில் இருந்த எட்வர்ட் செய்த் 1993 நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உருவான இஸ்ரேல் பாலஸ்தீன் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். அது பாலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்க செய்வதற்கான அறிகுறி என்றார். காசா மற்றும் மேற்குகரை பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் அது கடைசிவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுத்தது. மேற்கத்திய வாழ்க்கையின் காலங்கள் முழுவதையும் பாலஸ்தீன் துயரம் குறித்த படிப்புக்கும், போராட்டத்துக்குமாக செய்த் கடந்து சென்றார். ஐரோப்பிய சூழலில் பல்வேறு அறிவுஜீவிகளிடம் இதுகுறித்த அவரின் வாதம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அது இந்த விவகாரம் பற்றிய சர்வதேச அவதானத்துக்கு வழி ஏற்படுத்தியது. குறிப்பாக சார்த்தர், லியோதர்த், அலன்பதூ போன்றவர்களிடம் அதிகமாக விவாதித்தார். இதற்காகவே Question of palestine என்ற நூல் அவரிடம் இருந்து வெளிவந்தது. பாலஸ்தீன் குறித்த மிக விரிந்த வரலாற்று பார்வையையும், தேசிய இனம் பற்றிய விஞ்ஞான பூர்வ கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக இந்நூல் இருந்தது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் செய்த் விமர்சித்தார். அதன் பின்னால் இருக்கும் அமெரிக்க அதிகாரவர்க்க நலனையும் வெளிக்கொணர்ந்தார். அமெரிக்க யூதர்களின் பணம் மற்றும் உடல்ரீதியான ஒத்தாசைகள் அமெரிக்க அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது. அவர்களின் பணமே அங்கு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய பலமாக இருக்கிறது. இவர்களின் மூளைகள் தேர்தல் முடிவில் முக்கிய தளமாக செயல்படுகின்றன. இதனின் தூர பிரதிபலிப்பே அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாடு. ஒருபக்கம் எண்ணெய் பொருளாதார பலத்திற்காக அரபு நாடுகள் மீதான அதன் நேசப்பார்வை, மறுபக்கம் இஸ்ரேலுக்கு சகல அம்சங்களிலான உதவி இவை இரண்டும் அதன் இரட்டை சர்வாதிகார தன்மையை வெளிப்படுத்த போதுமானவை. தான் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்த போதும் பல்வேறு விஷயங்களில் செய்த் அமெரிக்க எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டார். செய்த்தின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாட்டை அமெரிக்க வலதுசாரி இதழ் ஒன்று விமர்சித்தது. அவரை அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த அறிவார்ந்த அகதி என்று கிண்டலடித்தது. 1977 ல் சில பாலஸ்தீனிய தலைவர்கள் பாலஸ்தீன் நிலபரப்பு மீதான இஸ்ரேலின் உரிமையை ஒத்துக்கொண்டார்கள். இதை பற்றி செய்த் இவ்வாறு குறிப்பிட்டார்." நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலபரப்பு மீதான இறைமையை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேல் -பாலஸ்தீன் விவகாரத்தை பொறுத்தவரை செய்த் மற்ற எல்லா சிந்தனையாளர்களை விட சிறந்த காலனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருந்தார். இஸ்ரேல் மற்றும் யூத விவகாரத்தின் வரலாற்று ரீதியான யதார்த்தத்தையும், ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத எதிர்ப்பு சிந்தனையின் தோற்றத்தை பற்றியும் விரிவாக ஆராய்ந்தார். ஒரு தேர்ந்த தத்துவார்த்த நிலைபாடு அவரிடமிருந்தது.பின் காலனியம் குறித்த எட்வர்ட் செய்த் சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலனியம் உலக வரலாற்றில், குறிப்பாக கிழக்கில் ஏற்படுத்திய பாதிப்புகளை விரிவாக ஆராய்ந்தார். 1815 க்கும் 1918 க்கும் இடைபட்ட கட்டத்தில் ஐரோப்பாவின் பிரதேச ஆதிக்கம் மொத்த உலக பரப்பில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகரித்தது. இங்கு மானுட மையவாதம் (Anthropocentrism)என்பது ஐரோப்பிய மையவாதமாக (Europocentrism)மாறிபோனது. இன்று பிரதேச கட்டுப்பாடு பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடாக மாறிவிட்டது. கீழை சமூகத்தின் நுண்தளங்களில் மேற்கின் இந்த தாக்கம் அங்கு நிலையான சமூக பொருண்மையை ஏற்படுத்தி விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டங்களில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் மத்திய கிழக்கில் பரவலாக ஆதிக்கம் செலுத்தின. இவை 14 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவத்தோடு அடையாளப்படுத்தப்பட்டன. இதற்கான எதிர்வினை இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலனிய விடுதலை போராட்டத்தின் வடிவில் வெளிப்பட்டது. பல தேசிய தலைவர்கள் வட்டார அரபு மொழியை தங்கள் விடுதலை பிரசார உணர்வு ஊடகமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக எகிப்தின் அன்வர் சாதத், சிரியாவின் மிஷல் அப்லாக், சாதிக் ஏ ஆஸம் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாடல்களை அரபு மொழியில் உருவாக்கினர். வெகுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இது மேற்கின் கலாசார ஊடுபாவலுக்கு எதிர் செயல்பாடாக அமைந்தது. இவ்வாறாக கிழக்கின் மொழி என்பது கடந்த நூற்றாண்டின் இடைக்கட்டத்தில் காலனிய விடுதலை கருவியாக செயல்பட்டது.


எட்வர்ட் செய்த் இயற்கையை மீறிய சக்திகளை விட மானுடத்துவத்தின் மீது அதிகமும் நம்பிக்கை வைத்திருந்தார். மனித சமூகத்தின் வரலாறு மற்றும் அதன் ஆக்கங்கள் மீது செய்த்திற்கு அதிக ஆர்வம் இருந்தது. இதன் தொடர்ச்சியில் 18 ஆம் நூற்றாண்டு இத்தாலிய தத்துவவாதியான விக்கோவின் கோட்பாடுகள் செய்த்தை அதிகம் ஈர்த்தன. விக்கோ புனிதங்களின் செயல்பாட்டு தளத்தை மனிதர்களின் செயல்பாட்டு தளத்தில் இருந்து பிரித்து பார்த்தார். மேலும் மானுட செயல்பாடுகள் சார்ந்த பகுப்பாய்வை தன் கோட்பாடுகளில் வெளிப்படுத்தினார். எட்வர்ட் செய்த் யூதர்கள் அல்லாத நாடற்றவர்கள், இனக்குழுக்கள் ஆகியோரின் வரலாற்றை அறிவதிலும், அதை அவதானிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். மேலும் காலனிய மேலாண்மை (Hegemony)என்பது வெறுமனே அரசியல் மற்றும் இராணுவ ரீதியான ஒன்றல்ல. மாறாக கலாசார பொருண்மையே. தந்திரபூர்வமாகவோ அல்லது அதந்திரபூர்வமாகவோ ஐரோப்பிய கலாசாரம் இனவாத கோடுகளாக காலனிய ஆட்சியாளர்களால் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக செய்த் குறிப்பிட்டார். மறுமலர்ச்சி கால மனித மதிப்பீடுகள் எவ்விதத்தில் இருந்தாலும் அவை காலனிய சொல்லாடல்களின் பிரதியாக்கமே என்றார் செய்த். மேலும் அவரின் இஸ்லாம் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை. மேற்கு இஸ்லாம் பற்றி வரலாற்று ரீதியாக புனைந்து வைத்திருக்கும் கருதுகோள்கள் மீது செய்த் சந்தேகம் கொண்டிருந்தார். அதற்காவே 1981 ல் Covering Islam என்ற நூலை எழுதினார். இது முழுமையாக அறிதல், பாதுகாத்தல் என்ற இரு அர்த்த பிரதிகளை உற்பத்தி செய்தது. இதில் இடைக்கால ஐரோப்பிய வரலாறு எவ்வாறு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையேயான வெறுப்புணர்ச்சியின் நகலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி செய்த் குறிப்பிட்டார். மேலும் கிறிஸ்தவ மற்றும் யூத அடிப்படைவாதிகள் இஸ்லாம் குறித்த பக்க சார்பான பார்வையை முன்னோக்குவது குறித்தும் அதில் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க பத்திரிகையாளரான பிரான்ஸ் பிக்ஜெரால்ட் இந்நூலை ஒவ்வொரு மேற்கத்திய பத்திரிகையாளரும், அதன் ஆசிரியர்களும் படிப்பது அவசியம் என்றார். மேலும் செய்த்தின் சிந்தனையில் முக்கியமானது இலக்கிய பிரதிகளின் கால எல்லை மற்றும் எல்லையற்ற தன்மை. (Time bound and timeless of Text)பிரதியின் காலமற்ற தன்மை என்பது அது பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த போதும், நடப்பு சூழலுக்கு பொருத்தமற்றதாக இருந்த போதும் அதை படிப்பது, அவதானிப்பது, ஜமாய்ப்பது. மாறாக கால எல்லை என்பது அந்த பிரதியின் உருவாக்க காலமும்,அந்த காலத்திய கலாசார சூழல் மற்றும் சமூக அழகியலின் குறுக்கான ஊடாட்டமும் கலந்த ஒன்று. மத சமூகங்கள் இந்த முரண்களின் ஊடாக தான் பயணம் செய்து வருகின்றன. இதை குறித்து மார்க்ஸ் தன் அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான ஒரு பங்களிப்பு (A Contribution to the critique of Political economy ) நூலில் குறிப்பிட்டார். தொழில்மய சமூகத்தில் ஒரு மனிதன் எவ்வாறு கிரேக்க தொன்மங்கள் குறித்து உவகை அடைகிறான். அந்த அவதானமும் , உவகையும் என்பது அவனின் இளமை நோக்கிய ஏக்கமும் (Nostalgia)பழைய உற்பத்தி முறைமையின் தொகுப்புமாகும். செய்த் இந்த சிந்தனை முறைமையை இடைக்கால அந்தலூசிய சிந்தனையாளரான இப்னு ஹாசம் என்பவரிடமிருந்து நீட்சியடைய செய்தார். அதாவது நடப்பு எதார்த்தம் மற்றும் பிரதியாக்கம். இதன் அடிப்படையில் தான் செய்த் குர் ஆன் மற்றும் பைபிளை ஆராய்ந்தார். அதன் காலம் , சூழல் , சமூக அழகியல் போன்றவை புனித பிரதியின்அலகுகளாக பார்க்கப்பட வேண்டும் என்றார். மேலும் மத பூடகமாக்கலுக்கும், வெற்று வாதங்களுக்கும் எதிரான செய்த்தின் கோட்பாடுகள் முக்கியமானவை. தன் நேர்காணல்களில் பிரதி, உலகம், அதிகாரம், காலனியம், மதம் குறித்த கோட்பாடுகள் மீதான விமர்சனத்தையே அதிகமும் முன்வைத்தார் . செய்த்தின் இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு அரசியல், அதிகாரம் மற்றும் கலாசாரம் என்ற நூலாக வெளிவந்தது. கீழைத்தேயத்தில் இருந்து புலம் பெயர்ந்து மேற்கத்திய கல்விசார் அறிவுஜீவியாக செயல்பட்டு தன் சிந்தனையால் மேற்குலகிற்கு பெரும் சவாலாக இருந்த எட்வர்ட் செய்த் கிழக்கின் வரலாற்றில் முன்கோடாகவே இன்றும் இருக்கிறார்.
- உயிரோசை