காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label ஓரியண்டலிசம். Show all posts
Showing posts with label ஓரியண்டலிசம். Show all posts

Monday, October 5, 2009

இடம் பெயர்ந்த மனிதர்கள்- எட்வர்ட் செய்த்தும் ஓரியண்டலிசமும்


யார் தன் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ அதுவே நாடுகடத்தல் என்பார் எட்வர்ட் செய்த். எதார்த்த வாழ்வில் நகர முடியாத மனிதன் புலம்பெயர நிர்பந்திக்கப்படுகிறான். அவன் மனம் ஒரு வலியின் அலையோட்டமாக மாறுகிறது.தன் இருப்பிடத்தின் எல்லா உணர்வுகளும் விடுபட்டு தண்ணீரிலிருந்து கரைஒதுங்கும் மீன்கள் மாதிரி அவனின் புலம் பெயர்தல் அமைகிறது. குணாம்சரீதியில் புலம்பெயர்தலை நான்காக வகைப்படுத்தலாம். 1.நாடுகடத்தப்பட்டவர் 2.குடிபெயர்ந்தோர் 3. அகதிகள் 4. தற்காலிக குடிபெயர்ந்தோர் அல்லது புகலிகள். இதில் நாடுகடத்தலும் தற்காலிக குடிப்பெயர்வும் தனி நபரை சார்ந்து அமைகிறது. உலக வரலாற்றில் பெரும்பாலும் அரசியல் கைதிகள், அறிவு ஜீவிகள் ஆகியோர் நாடுகடத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது அவர்களின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை சதுரமாக்கி சிறைப்படுத்துகிறது. கிராம்சி, அனா அரந்த், டிராஸ்கி ஆகியோர் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். ஒரு தனித்துவமான உலகம் அவர்களுக்குரியது. பெரும்பாலும் நாடுகடத்தல் அரசியல் காரணங்களுக்கானதாகவே வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. தற்காலிக குடிப்பெயர்வு பொருளாதார மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கானது. தன் சொந்த நாட்டின் காலநிலையும் அதற்கான ஒரு காரணி. முதல் உலகப்போருக்குப்பின் பிரான்சில் அமெரிக்கர்களின் வருகை மற்றும் ஐம்பதுகளுக்கு பிறகான சூழலில் கேரளாவில் பெரும் எண்ணிக்கையிலான மலையாளிகளின் வளைகுடா பெயர்வு மற்றும் ஜேம்ஸ் ஜாய்ஸ், பிரக்ட், கன்ராட் ஆகியோரின் பாரிஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து வருகை முதலானவற்றை குறிப்பிடலாம். குடிப்பெயர்வு என்பது காலனியத்தோடு தொடர்பு கொண்டது. இரு நூற்றாண்டுகளாக உலகை பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜெர்மனி பங்கு போட்டு கொண்டது இதனின் தொடர்ச்சி தான். இத்தகைய எல்லை விரிவாக்க செயல்தந்திரங்கள் மூலம் தான் காலனியம் ஒரு நாட்டை கையகப்படுத்துகிறது.. சுதேசிகளின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மை காலனிய பிடியில் வந்ததன் விளைவாக காலனிய நாடுகளுக்குள் இடம்பெயர்தல் நடந்தது. அல்ஜீரியர்களின் பிரான்சு குடியேற்றம், ஆப்ரிக்க, எகிப்திய, யூத மற்றும் இத்தாலியர்களின் அமெரிக்க குடியேற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழர்களின் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புருனே, பர்மா, மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கான குடியேற்றம்,17 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்து ஹுகினஸ் இனத்தவரின் கட்டாய இடப்பெயர்வு போன்றவை அன்றைய மக்களின் தவிர்க்க முடியாத வாழ்நிலையாக இருந்தன. டெரி ஈகிள்டன் இதை ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கான வாழ்வின் நிலைகுலைவு என்பார். இருபதாம் நூற்றாண்டின் இடப்பெயர்வு வரலாற்றில் பெருங்கொடுமையானதாக இந்திய பாகிஸ்தான் பிரிவினை அமைந்தது. பீகார், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காலனியம் ஏற்படுத்திய சமூக பிரிவினை கொடூரம் காரணமாக நேர் எதிரான திசையில் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். இந்தியாவின் எல்லா வரலாற்று நகர்வுகளுமே இதை தொட்டு விட்டு தான் செல்கின்றன. தாரிக் அலி இந்நிகழ்வை திருப்பியளிக்க முடியாத ஆன்மாவின் பெரும் துயரம் என்றார். அகதிகள் என்பவர்கள் மேற்கண்ட மூன்று வகையான பிரிவினர் அடையும் மனச்சலனத்தை விட அதிகபடியான சலனத்துக்கு உட்படுகிறார்கள். சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் புதிய கலாசார வாழ்முறை திணித்தலின் எல்லையில் அடைபடுகிறார்கள். உலக வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் ஏற்படுத்திய மிகப்பெரும் அகதித்தனத்தின் பெரும் பரிணாமமாக சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி அமைந்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றார்கள். இதற்கு அறிவுத்துறையின் கரிசனமும் இருந்தது. ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் நடவடிக்கையோடு இது ஒப்பிட்டு பேசப்பட்டது. இரண்டாவது மிகப்பெரும் அகதிகள் ஆப்கானியர்கள். ஆப்கானின் உள்முக சூழல் இதற்கு காரணம். அதற்கு அடுத்த நிலையில் சிங்கள பேரினவாதம் காரணமாக இலங்கை தமிழர்களின் புலப்பெயர்வு, இத்தாலிய பாசிசத்தின் விளைவான யூகோஸ்லேவியர்களின் இடப்பெயர்வு மற்றும் செர்பியர்கள், ஈராக்கியர்கள் ஆகியோரை குறிப்பிடலாம். புலம் பெயர்ந்தவர்களின் தன்னிலை என்பது அந்நியப்பட்ட கலாசாரத்திற்கும் அவர்களால் நிறுவப்பட்ட சொந்த கலாசாரத்திற்கும் இடையே பெரும் பாரதூர இடைவெளியை ஏற்படுத்துகிறது. இந்த அனுபவத்தை அனா அரந்த் இவ்வாறு பதிவு செய்கிறார். "நாம் நம் வீடுகளை இழந்தோம். அது தினசரி வாழ்வின் அர்த்த நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. தொழில்களை இழந்தோம். அது உலகத்தின் எங்காவது ஒரு பகுதியில் நாம் வைக்கும் நம்பிக்கையாகும். மொழியை இழந்தோம். அது நம் உணர்ச்சிகள், உடற்குறிகள், எதிர்வினைகள் ஆகியவற்றை சிதைக்கிறது." இவ்வாறு சொன்ன அனா புலம் பெயர்தலின் அனுபவ வலிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்தார். ஹிட்லரின் நாடுகடத்தல் குறித்ததாக அது இருந்தது. புலம் பெயர்தலின் இப்படியான எல்லா அனுபவங்களுமே நம்முன் புதிய கலைச்சொற்களை கொண்டு வருகின்றன. உலகம் என்ற பெரிய கிராமத்தினுள் அவை எதிரும் புதிருமான திசையில் இடையறாது பயணிக்கின்றன. செய்த் இந்த இடம்பெயர்தல் குறித்து பல தருணங்களில் விரிவாக ஆராய்ந்தார். இதற்காகவே அவரின் Reflections of exile வெளிவந்தது. இஸ்ரேலை அடிப்படையாக வைத்து நாடுகடத்தலை ஆராய்ந்தார். பாலஸ்தீனியர்களின் பிரதேச அந்நியம் உலக இடம்பெயர்தல் வரலாற்றில் மிகுந்த துயரமாக இருக்கிறது. லௌகீக வாழ்வு அதன் சுய அர்த்தத்தை இழக்கும் போது வாழ்வின் இயக்கம் என்பது போராட்ட வடிவமாகவே இருக்கும். டயஸ்போரா என்ற கட்டாய இடப்பெயர்வை குறிக்கும் சொல் செய்த்திற்கு யூத ஆக்கிரமிப்பாளர்களின் பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறையை குறிக்க பயன்பட்டது. செய்த் அதை மாற்று அர்த்தத்தில் பார்த்தார். ஒடுக்குமுறை மற்றும் கட்டாய இடப்பெயர்வு ஆகியவற்றை குறிக்கும் சொற்கள் எல்லா சூழலிலும் அதிகார வர்க்கத்திற்கு ஒட்டுமை உடையதாக இருக்கக்கூடாது. மாறாக அவை அடித்தள மக்கள் சார்பாக திருப்பப்பட வேண்டும் என்றார். இதற்காக இவை சார்பான சொல்லாடல்களை அதிகம் உற்பத்தி செய்ய முயன்றார். இடம்பெயர்தல் மற்றும் அகதியாக்கப்படல் குறித்த எட்வர்ட் செய்த்தின் கோட்பாடுகள் ஓரியண்டலிசத்துடன் நீட்சியடைபவை. காரணம் உலக வரலாற்றில் கட்டாய இடப்பெயர்வுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டவர்கள் கீழைச் சமூகத்தவரே. இதனடிப்படையிலான கீழை வரலாறு சராசரி மனித வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போன தவிப்புகளையும், தொடர்ந்த வலிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அவை வெறுமனே காலம் சார்ந்த ஒன்றாக இல்லை. மாறாக வெளி சார்ந்தும் இருக்கிறது. நெப்போலியன் காலந்தொட்டு தொடங்கிய மேற்கின் கிழக்கு மீதான ஆக்கிரமிப்பு தற்போது வளரும் கீழைநாடுகள் அல்லது மூன்றாம் உலக நாடுகளின் சமூக கட்டுமானத்தில் மிகப்பெரும் தகர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்றாம் உலக மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கீழைச்சமூகத்தில் பிரான்சு மற்றும் பிரிட்டனின் தலையீடு என்பது வரலாற்று மற்றும் கலாசார ரீதியான அளவு மற்றும் தர மாறுபட்டை உட்கொண்டிருக்கின்றது.குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில் இந்த தலையீட்டின் எல்லை மிகவும் நீண்டது.கீழைச்சமூகத்தை பொறுத்தவரை இந்திய சமூகம், புராதன பைபிள் நிலங்கள், செமிட்டிய நாகரீகம், நறுமண வர்த்தகம், காலனிய இராணுவம், கீழை சமூக மதக்குழுக்கள், தத்துவங்கள், வரலாறு இவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாளரான விக்கோ மனிதன் அவனுடைய வரலாற்றை தானே உருவாக்கிக் கொள்வதாக நம்பினார். அவர்களுக்கு எது தெரிய முடியுமோ அதை உருவாக்குகிறார்கள். அது புவியியல் ரீதியாகவும் நீள்கிறது. ஆக ஓரியண்டலிசம் என்பது வெறும் அரசியல் தன்னிலையோ அல்லது கலாசாரம், நிறுவனம், பிரதிகள் ஆகியவற்றின் தொகுப்போ அல்ல. மாறாக புவியரசியல் வெளிப்பாட்டின் பகிர்வே. இது அழகியல், பொருளாதார, சமூக, வரலாற்று, இலக்கிய தொகுப்புகளின் நீட்சியாகவும் இருக்கிறது. கிழக்கின் மீதான மேற்கின் ஆக்கிரமிப்பு என்பது பதினேழாம் நூற்றாண்டின் இறுதிபகுதியிலிருந்தே தொடங்கியது என்கிறார் செய்த். பிரிட்டனின் பொதுச்சபையில் 1910 ல் ஆர்தர் ஜேம்ஸ் பால்பரின் உரை முக்கியமானது." நாம் பிரச்சினைகளை எகிப்தில் இருந்து கையாள வேண்டும். அது மொத்ததில் வித்தியாசமான வகைப்பாட்டை சார்ந்தது. பால்பர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர். அயர்லாந்தின் முதன்மை செயலாளராக இருந்தவர். லார்டு சலிஸ்பரியின் செயலாளராக இருந்தவர். இந்தியா மீதான பிரிட்டனின் ஆக்கிரமிப்பு தருணத்தில் பால்பர் முக்கிய பங்காற்றினார். மேலும் 1882 ல் எகிப்து மீதான ஆக்கிரமிப்பு தருணத்திலும் அவரின் பங்களிப்பு தொடர்ந்தது. இவரின் பிரகடனம் அடிப்படையில் தான் பாலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது. எட்வர்ட் செய்த்தை பொறுத்தவரை ஓரியண்டலிசத்திற்கான தேர்வு என்பது நீண்டகாலத்தை சார்ந்தது. இந்த சொல்லாடல் சாசர், மாண்டிவெல்லி, ஷேக்ஸ்பியர், டிரைடன், மற்றும் பைரன் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது. இது ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகியவற்றின் பிரதேச, அற, கலாசாரம் இவற்றின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. பால்பர் எகிப்து விஷயத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அவரின் எகிப்து மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினார். எகிப்தை பற்றிய நம் அறிவானது இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை முதன்மையாக கொண்டதல்ல. மாறாக அது எகிப்திய நாகரீகத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. அது பற்றிய அறிவே நமக்கு முக்கியம் என்றார். இவை தன்னிலைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றார் பால்பர். மேலும் அந்த அறிவின் நோக்கம் என்பது ஓரியண்டல் பற்றிய உள்ளடங்கிய பரிசோதனையே. அவற்றின் பின் விளைவுகள் பற்றி பால்பர் இவ்வாறு குறிப்பிட்டார்." எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இந்த விஷயத்தில் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முயல வேண்டும். மேற்கத்திய தேசங்கள் வரலாற்றில் உருவான பிறகு அவற்றின் தொடக்கமே அவை ஒவ்வொன்றுக்குமான சுய - அரசுகள் தான். அது அவர்களின் நலனை சார்ந்தே இருந்தது. கிழக்கத்திய தேசங்களை பொறுத்தவரை அவற்றின் வரலாற்றில் சுய அரசுக்கான தடத்தை நாம் பார்க்கவே முடியாது. அவற்றின் பெரிய நூற்றாண்டுகள் இடைவெளியில் சர்வாதிகார அரசுகளாக அவை கடந்து சென்றிருக்கின்றன. அவற்றில் ஒரு வெற்றியாளர் மற்றொரு வெற்றியாளரை தொடர்ந்து சென்றிருக்கிறார். ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். ஆனால் நம்மை போன்ற சுய அரசை ஏற்படுத்துவதற்கான புரட்சிகர விதியோ , செயல்பாடோ அங்கு ஏற்பட்டதில்லை. " பால்பரின் இந்த கருத்தே தவறானது. காரணம் பலம் பொருந்திய ரோம பேரரசு பலவீனமான ஜெர்மானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது. கிழக்கத்திய சமூகத்தை சார்ந்த மூர்கள் முந்நூறு வருடங்கள் ஸ்பெயினை ஆண்டிருக்கிறார்கள். அதன் பிறகு ஐரோப்பிய சர்வாதிகார அரசுகளின் நீண்டகால திட்டத்தின் படி அவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள். மேற்குலகு வரலாற்றை நான்காம் பரிமாணத்தில் கட்டமைக்கும் திறனை பெற்றிருப்பதே அதன் மிகப்பெரும் பலம்.
எட்வர்ட் செய்த்தை பொறுத்தவரை ஓரியண்டலிசம் என்பது ஓர் அரசியல் கோட்பாடு என்ற வகையில் மேற்குலகை விட பலவீனமாக இருக்கிறது. அது கலாசார கருவி என்ற நிலையில் முழுவதுமான செயல்பாடு, உண்மை விருப்புறுதி, அறிவுநிலை ஆகியவற்றை கொண்டிருக்கிறது. செய்த் தன் ஓரியண்டல் ஆய்வு முறையை மூன்றாக வகைப்படுத்தினார்.
1. ஓரியண்டலின் நோக்கம் 2.ஓரியண்டலிச கட்டுமானம் மற்றும் மறு கட்டுமானம் 3. தற்போதைய ஓரியண்டலிசம். முதற்பகுதியில் எட்வர்ட் செய்த் மேற்கில் கல்வி துறை சார்ந்த எல்லா சொல்லாடல்களும் ஓரியண்டலிச நோக்கத்தை கொண்டவையல்ல. மேலும் எல்லா கலாசாரங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மற்ற கலாசாரங்களை அந்நியமானவையாகவே காண்கின்றன. கலாசார ஆதிக்கங்கள் இந்த இடத்தில் தான் உருவாகின்றன. மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய அறிவுஜீவிகள் பலர் பேச்சிலும் எழுத்திலும் கீழை கலாசாரத்தை அந்நியமானவையாகவும், தாழ்நிலையாகவும் கருதினர். பால்பர், ஷேக்ஸ்பியர்,பைரான், நெப்போலியன், டான்டே, சாசர் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இரண்டாம் பகுதியில் செய்த் எவ்வாறு ஓரியண்டலிச சொல்லாடல் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு, ஒரு அரசியல் தலைவரிடமிருந்து மற்றொரு நூலாசிரியருக்கு செல்லும் போது மாறுதலுக்குட்படுகிறது என்பதை ஆராய்ந்தார். இந்த சொல்லாடலே மேற்குலகால் மேற்கொள்ளப்படும் எல்லா ஆய்வுகளுக்கும் விரிந்த அடிப்படையை ஏற்படுத்தும் தரைக்கல். இதன் நீட்சி தான் கீழைச்சமூகத்தின் விரிவாக்கம், வரலாற்று எல்லை,வகைப்பாடு இவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உதாரணமாக ஐரோப்பிய சிந்தனையாளரான எட்வர்ட் வில்லியம் லேனை செய்த் குறிப்பிடுகிறார். வில்லியம் லேன் எகிப்தில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இருந்து விட்டு ஐரோப்பாவுக்கு திரும்பி வந்து "Manners and customs of modern Egypt " என்ற நூலை எழுதினார். அது ஐரோப்பாவில் மிகுந்த விற்பனையை எட்டியது. பிந்தைய எல்லா கீழைத்தேய பயணிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு இதுவே அடிப்படையாக இருந்தது. மூன்றாம் பகுதியான தற்போதைய ஓரியண்டலிசம் பகுதியில் செய்த் மொத்த பின்தொடரலாக கலாசாரங்களின் அந்நியமாதல் என்பது என்ன? கலாசார தகவமைப்பில் மதங்கள், மற்றும் நாகரீகங்களின் பங்கு என்ன? என்பதை குறித்து விரிவாக ஆராய்ந்தார். இவை செய்த்துக்கு ஓரியண்டல் பற்றிய சிந்தனை தொடர்ச்சியை அளித்தன. மேலும் புரட்சிகர சொல்லாடல் அரபுலகில் பன்மீய அர்த்தங்களை உற்பத்தி செய்வதாக எட்வர்ட் செய்த கண்டறிந்தார். அதாவது கலகம், உணர்ச்சி பாவம், சுதந்திர இறையாண்மை, போராட்டம் ஆகிய வெவ்வேறு வடிவங்களில் பல தருணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிபகுதி வரை நீண்டது. கீழைச்சமூகங்களின் மேற்கத்திய புலப்பெயர்வும், வாழ்நிலை நெருக்கடியும் ஓரியண்டலின் எல்லையோடு நெருங்கி தொட்டுக்கொள்பவை.ஓரியண்டலிசம் மற்றும் இடம்பெயர்தல் குறித்த செய்த்தின் கோட்பாடுகள், எழுத்துக்கள் கிழக்கு மற்றும் மேற்கு வரலாற்றில் ஒரு நிலையான இடத்தை அவருக்கு அளித்திருக்கிறது. கீழைச்சமூகத்தின் புராதன, வரலாற்று தரவுகளை, தடங்களை தேடுதல் என்பது ஓர் அறிவுஜீவி என்ற நிலையில் செய்த்திற்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. வேறொரு வாக்கியத்தில் சொன்னால் "கீழைச்சிந்தனைகளின் உலகளாவிய பரப்பெல்லை செய்த்தின் ஓரியண்டலிசம் வழியே சாத்தியப்பட்டது எனலாம்."
(உயிரோசை)

Monday, June 8, 2009

அதிகாரம், அரசியல் மற்றும் கலாசாரம்- எட்வர்ட் செய்த் அறிவுலகில் ஒரு நெடும் பயணம்




எட்வர்ட் செய்த் மரணமடைந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி பரவலான எழுத்தோட்டங்கள் இருக்கின்றன. இவரை பற்றிய எழுத்தோட்டங்கள் கோலப்புள்ளிகள் மாதிரி வெளிவந்திருக்கின்றன. கீழைச்சிந்தனை மரபில் எட்வர்ட் இன்றும் குவியமானவராக இருக்கிறார். காலனியத்திற்கு பிந்தைய கட்டத்தில் மேற்கின் அறிவுலகில் ஆதிக்கம் செலுத்திய கீழைத்தேய வாதி. பௌதீக உலகின் அறிவுத்தளம் என்பது மேற்காக புனையப்பட்ட தருணத்தில் தன் Orientalism நூல் மூலம் அதை தகர்த்தவர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில் இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற்போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்காலனிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட் செய்த்தின் இளமைக்காலம் பாலஸ்தீன் பகுதியில் ஆரம்பமானது.1935 ல் ஜெருசலமில் ஒரு நடுத்தர குடும்பத்தில் செய்த் பிறந்தார். 1948 ல் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீனில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவர் குடும்பம் எகிப்துக்கு புலம்பெயர்ந்தது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த செய்த் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து மேற்படிப்பை தொடர்ந்தார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு பட்டங்களை பெற்ற செய்த் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். எட்வர்ட் செய்த் மேற்கத்திய வாழ்க்கை மூலம் தன் மொழிப்புலத்தை மிக வலுவாக்கிக்கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளில் வலுவான அடித்தளம் அவருக்கிருந்தது. மேலும் தாய்மொழியான அரபி அவரை பின்தொடர்ந்து வந்தது. மொழியின் சாத்தியபாடுகள் அவரை முன்னோக்கி இழுத்துச் சென்றன. இவரின் முதல் நூல் 1966 ல் Joseph conrad and fiction of autobiography என்ற பெயரில் வெளிவந்தது. ஜோசப் கன்ராட் படைப்புகள் பற்றிய மதிப்பீடாகவும், விமர்சன கோட்பாடாகவும் இருந்தது. மேலும் நவீனத்துவம் , சிந்தனை மரபில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த பதிவாகவும் இருந்தது.
எட்வர்ட் செய்த்தை மேற்கில் அதீதமாக கவனப்படுத்தியது அவரின் ஓரியண்டலிசம் நூலாகும். பின் காலனிய சிந்தனையின் மூலநூலாக அறிவு ஜீவிகளால் அளவிடப்படும் இது மேற்கு பற்றிய பெரும் பிம்பத்தை தகர்த்தது. ஐரோப்பா காலம் காலமாக கிழக்கத்திய பிராந்தியத்தை மதிப்பிட்ட முறையை செய்த் விமர்சித்தார். குறிப்பாக மேற்கு அரபுலகை அறிவு ரீதியாக அணுகிய விதம் வரலாற்று ரீதியாக மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றார். அவரின் கருத்துப்படி ஓரியண்டலிசம் என்பது கிழக்கு (Oriental)மற்றும் மேற்கு (Occidental)ஆகியவற்றின் இயற்கை தத்துவம் மற்றும் அறிவுதோற்றவியல் அடிப்படையிலான சிந்தனா வகைமையே. அது ஆசிய கண்டத்தின் அல்லது கிழக்கின் புவியியல் , அறவியல் மற்றும் கலாசாரத்தை குறிக்கும்.இரு நிலப்பிளவுகளின் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கவிஞர்கள், வரலாற்றாளர்கள், ஆட்சியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் இந்த வித்தியாசத்தை வடிவமைக்கிறார்கள். நெப்போலியன் எகிப்தை கைப்பற்றியதை தொடர்ந்து ஓரியண்டலின் எதார்த்த வடிவம் தொடங்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை கைப்பற்றிய நெப்போலியன் படிப்படியாக அல்ஜீரியா, மொராக்கோ போன்ற நாடுகளை கைப்பற்றினார். இதன் தொடர்ச்சியில் மத்திய கிழக்கின் இந்த பிரதேசங்களில் மேற்கின் அரசியல் மற்றும் கலாசார ரீதியான மேலாதிக்கம் நிறுவப்பட்டது. தொடர்ந்து இந்த பிராந்தியங்களில் பிரிட்டனின் வருகையும் இந்த ஆதிக்கத்தை தொடர செய்தன. சிவில் மற்றும் அரசியல் சமூகம் சில வித்தியாசங்களை கொண்டிருக்கிறது. சிவில் சமூகம் பள்ளி, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் சமூகம் அரசு, ராணுவம், காவல்துறை, அதிகார வர்க்கம் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. இதில் அரசியல் சமூகத்தின் மீது நேரடியான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் கலாசாரம் மறைமுகமாக மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. கலாசாரத்தின் சில வடிவங்கள் சில தருணங்களில் கருத்தியல் ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ மற்றொரு சிவில் சமூகம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை கிராம்சி சமூக மேலாண்மை (Hegemony) என்றார். கிராம்சி கூறிய இந்த மேலாண்மையே ஓரியண்டல் சொல்லாடல் மீதும் படிந்திருக்கிறது. இந்த இடத்தில் மேற்கத்திய உலகமானது ஆதிக்க கருவியாக செயல்படுகிறது. இங்கு கருத்தியல் உற்பத்தி கருவிகளின் பங்கு முக்கியமானது. ஒரு கலாசாரத்தின் அல்லது நாகரீகத்தின் கருத்தை உருவாக்கும் கருவியானது அது உருவாக்கும் பிரதியை அசலாக்க வேண்டும். அந்த அசல் முறைப்படியானதாக இருக்க வேண்டும். இதை அசலானது அல்லது போலியானது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மேற்கு இருக்கிறது என்கிறார் செய்த். கீழை சமூகத்தின் தொன்மங்கள், வரலாறுகள், நாகரீகங்கள், புராணங்கள், புனித பிரதிகள், ஆவணங்கள் போன்றவற்றை போலியானவையாக மேற்கு பார்த்து வந்திருக்கிறது. உலக நாகரீகத்தை கண்டறிந்தது மற்றும் அதை வியாபித்தது மேற்கு தான் என்பதான புனைவை உருவாக்கி இருக்கிறது. கீழை சமூகத்தின் குறிப்பாக மத்தியகிழக்கு அரபு சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் எல்லாம் பொருட்படுத்த தகாதவை என்று மேற்கு காலம் காலமாக கருதி வந்திருக்கிறது. இதன் மூலம் மேற்கின் பிரதியாதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. மேலும் கீழைத்தேய கோட்பாடு அதன் எதார்த்த புறநிலையையை விட அதிகமும் கலாசார நடைமுறைகள் மீதே கவனம் செலுத்துகிறது. கீழை சமூகங்களில் குடும்பம், மதம் போன்ற முதல் நிலை மையங்கள் அதிக கட்டுப்பாட்டுடன் விளங்குவதை இதனடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். இவை இரண்டும் குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல்மயமாகும் என்றார் எட்வர்ட் செய்த். அதற்கு உதாரணமாக மத்தியகிழக்கு அரபு மற்றும் முஸ்லிம் சமூகத்தை எடுத்து கொண்டார். இவை சில கருதுகோள்களை கொண்டு ஸ்திரமற்றதாக இருக்கின்றன. 1.மேற்கின் இஸ்லாம் மற்றும் அரபுலகம் பற்றிய அவநம்பிக்கை. 2. அரபுகளுக்கும் இஸ்ரேலிய சியோனிஸ்ட்களுக்குமான போராட்டம். இது அமெரிக்க யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம். 3. அரபுகள் அல்லது இஸ்லாம் குறித்த உணர்ச்சிபூர்வமற்ற முறையிலோ அல்லது அடையாள பூர்வமாகவோ விவாதிக்க மேற்கில் எந்த கலாசார நிலைமையும் இல்லாதது. மேலும் மத்திய கிழக்கு இன்று மிகப்பெரும் அதிகார அரசியல், எண்ணெய் பொருளாதாரம், இரட்டை அதிகார மனத்தை கொண்ட விடுதலை வேட்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இவை அனைத்துமே மேற்கின் சாதகமான விஷயமாக மாறி இருக்கின்றன. இதற்கான மாற்றுகளை தேடுவதற்கான உபாயங்களை எட்வர்ட் செய்த் கண்டறிந்தார்.
எட்வர்ட் செய்த்தின் எழுத்து, சிந்தனை, அறிவுலக செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய கோடிடும் பகுதியாக பாலஸ்தீன் பிரச்சினை இருந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் செய்த்தின் நிலைபாடு தெளிவாக இருந்தது. அவர் சுதந்திர இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் அமைவதில் உடன்பாடாக இருந்தார். இனரீதியாக இணக்கமான பிரேதசமாக இரண்டும் அமைய வேண்டும் என்ற கனவே கடைசி வரை அவரிடம் இருந்தது. இந்த பிரதேசத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமை என்பது பிளவுபடாதது. நெகிழ்வுதன்மை கொண்டது. பரஸ்பர புரிதல் அடிப்படையில் வரலாற்று ரீதியாக இரு யூத, அரபுகளின் எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றார். பாலஸ்தீன் தேசிய கவுன்சில் அதன் பிறகு பாலஸ்தீன் விடுதலை இயக்கம் போன்றவற்றில் இருந்த எட்வர்ட் செய்த் 1993 நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உருவான இஸ்ரேல் பாலஸ்தீன் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். அது பாலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்க செய்வதற்கான அறிகுறி என்றார். காசா மற்றும் மேற்குகரை பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் அது கடைசிவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுத்தது. மேற்கத்திய வாழ்க்கையின் காலங்கள் முழுவதையும் பாலஸ்தீன் துயரம் குறித்த படிப்புக்கும், போராட்டத்துக்குமாக செய்த் கடந்து சென்றார். ஐரோப்பிய சூழலில் பல்வேறு அறிவுஜீவிகளிடம் இதுகுறித்த அவரின் வாதம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அது இந்த விவகாரம் பற்றிய சர்வதேச அவதானத்துக்கு வழி ஏற்படுத்தியது. குறிப்பாக சார்த்தர், லியோதர்த், அலன்பதூ போன்றவர்களிடம் அதிகமாக விவாதித்தார். இதற்காகவே Question of palestine என்ற நூல் அவரிடம் இருந்து வெளிவந்தது. பாலஸ்தீன் குறித்த மிக விரிந்த வரலாற்று பார்வையையும், தேசிய இனம் பற்றிய விஞ்ஞான பூர்வ கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக இந்நூல் இருந்தது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் செய்த் விமர்சித்தார். அதன் பின்னால் இருக்கும் அமெரிக்க அதிகாரவர்க்க நலனையும் வெளிக்கொணர்ந்தார். அமெரிக்க யூதர்களின் பணம் மற்றும் உடல்ரீதியான ஒத்தாசைகள் அமெரிக்க அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது. அவர்களின் பணமே அங்கு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய பலமாக இருக்கிறது. இவர்களின் மூளைகள் தேர்தல் முடிவில் முக்கிய தளமாக செயல்படுகின்றன. இதனின் தூர பிரதிபலிப்பே அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாடு. ஒருபக்கம் எண்ணெய் பொருளாதார பலத்திற்காக அரபு நாடுகள் மீதான அதன் நேசப்பார்வை, மறுபக்கம் இஸ்ரேலுக்கு சகல அம்சங்களிலான உதவி இவை இரண்டும் அதன் இரட்டை சர்வாதிகார தன்மையை வெளிப்படுத்த போதுமானவை. தான் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்த போதும் பல்வேறு விஷயங்களில் செய்த் அமெரிக்க எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டார். செய்த்தின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாட்டை அமெரிக்க வலதுசாரி இதழ் ஒன்று விமர்சித்தது. அவரை அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த அறிவார்ந்த அகதி என்று கிண்டலடித்தது. 1977 ல் சில பாலஸ்தீனிய தலைவர்கள் பாலஸ்தீன் நிலபரப்பு மீதான இஸ்ரேலின் உரிமையை ஒத்துக்கொண்டார்கள். இதை பற்றி செய்த் இவ்வாறு குறிப்பிட்டார்." நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலபரப்பு மீதான இறைமையை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேல் -பாலஸ்தீன் விவகாரத்தை பொறுத்தவரை செய்த் மற்ற எல்லா சிந்தனையாளர்களை விட சிறந்த காலனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருந்தார். இஸ்ரேல் மற்றும் யூத விவகாரத்தின் வரலாற்று ரீதியான யதார்த்தத்தையும், ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத எதிர்ப்பு சிந்தனையின் தோற்றத்தை பற்றியும் விரிவாக ஆராய்ந்தார். ஒரு தேர்ந்த தத்துவார்த்த நிலைபாடு அவரிடமிருந்தது.பின் காலனியம் குறித்த எட்வர்ட் செய்த் சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலனியம் உலக வரலாற்றில், குறிப்பாக கிழக்கில் ஏற்படுத்திய பாதிப்புகளை விரிவாக ஆராய்ந்தார். 1815 க்கும் 1918 க்கும் இடைபட்ட கட்டத்தில் ஐரோப்பாவின் பிரதேச ஆதிக்கம் மொத்த உலக பரப்பில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகரித்தது. இங்கு மானுட மையவாதம் (Anthropocentrism)என்பது ஐரோப்பிய மையவாதமாக (Europocentrism)மாறிபோனது. இன்று பிரதேச கட்டுப்பாடு பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடாக மாறிவிட்டது. கீழை சமூகத்தின் நுண்தளங்களில் மேற்கின் இந்த தாக்கம் அங்கு நிலையான சமூக பொருண்மையை ஏற்படுத்தி விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டங்களில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் மத்திய கிழக்கில் பரவலாக ஆதிக்கம் செலுத்தின. இவை 14 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவத்தோடு அடையாளப்படுத்தப்பட்டன. இதற்கான எதிர்வினை இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலனிய விடுதலை போராட்டத்தின் வடிவில் வெளிப்பட்டது. பல தேசிய தலைவர்கள் வட்டார அரபு மொழியை தங்கள் விடுதலை பிரசார உணர்வு ஊடகமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக எகிப்தின் அன்வர் சாதத், சிரியாவின் மிஷல் அப்லாக், சாதிக் ஏ ஆஸம் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாடல்களை அரபு மொழியில் உருவாக்கினர். வெகுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இது மேற்கின் கலாசார ஊடுபாவலுக்கு எதிர் செயல்பாடாக அமைந்தது. இவ்வாறாக கிழக்கின் மொழி என்பது கடந்த நூற்றாண்டின் இடைக்கட்டத்தில் காலனிய விடுதலை கருவியாக செயல்பட்டது.


எட்வர்ட் செய்த் இயற்கையை மீறிய சக்திகளை விட மானுடத்துவத்தின் மீது அதிகமும் நம்பிக்கை வைத்திருந்தார். மனித சமூகத்தின் வரலாறு மற்றும் அதன் ஆக்கங்கள் மீது செய்த்திற்கு அதிக ஆர்வம் இருந்தது. இதன் தொடர்ச்சியில் 18 ஆம் நூற்றாண்டு இத்தாலிய தத்துவவாதியான விக்கோவின் கோட்பாடுகள் செய்த்தை அதிகம் ஈர்த்தன. விக்கோ புனிதங்களின் செயல்பாட்டு தளத்தை மனிதர்களின் செயல்பாட்டு தளத்தில் இருந்து பிரித்து பார்த்தார். மேலும் மானுட செயல்பாடுகள் சார்ந்த பகுப்பாய்வை தன் கோட்பாடுகளில் வெளிப்படுத்தினார். எட்வர்ட் செய்த் யூதர்கள் அல்லாத நாடற்றவர்கள், இனக்குழுக்கள் ஆகியோரின் வரலாற்றை அறிவதிலும், அதை அவதானிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். மேலும் காலனிய மேலாண்மை (Hegemony)என்பது வெறுமனே அரசியல் மற்றும் இராணுவ ரீதியான ஒன்றல்ல. மாறாக கலாசார பொருண்மையே. தந்திரபூர்வமாகவோ அல்லது அதந்திரபூர்வமாகவோ ஐரோப்பிய கலாசாரம் இனவாத கோடுகளாக காலனிய ஆட்சியாளர்களால் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக செய்த் குறிப்பிட்டார். மறுமலர்ச்சி கால மனித மதிப்பீடுகள் எவ்விதத்தில் இருந்தாலும் அவை காலனிய சொல்லாடல்களின் பிரதியாக்கமே என்றார் செய்த். மேலும் அவரின் இஸ்லாம் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை. மேற்கு இஸ்லாம் பற்றி வரலாற்று ரீதியாக புனைந்து வைத்திருக்கும் கருதுகோள்கள் மீது செய்த் சந்தேகம் கொண்டிருந்தார். அதற்காவே 1981 ல் Covering Islam என்ற நூலை எழுதினார். இது முழுமையாக அறிதல், பாதுகாத்தல் என்ற இரு அர்த்த பிரதிகளை உற்பத்தி செய்தது. இதில் இடைக்கால ஐரோப்பிய வரலாறு எவ்வாறு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையேயான வெறுப்புணர்ச்சியின் நகலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி செய்த் குறிப்பிட்டார். மேலும் கிறிஸ்தவ மற்றும் யூத அடிப்படைவாதிகள் இஸ்லாம் குறித்த பக்க சார்பான பார்வையை முன்னோக்குவது குறித்தும் அதில் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க பத்திரிகையாளரான பிரான்ஸ் பிக்ஜெரால்ட் இந்நூலை ஒவ்வொரு மேற்கத்திய பத்திரிகையாளரும், அதன் ஆசிரியர்களும் படிப்பது அவசியம் என்றார். மேலும் செய்த்தின் சிந்தனையில் முக்கியமானது இலக்கிய பிரதிகளின் கால எல்லை மற்றும் எல்லையற்ற தன்மை. (Time bound and timeless of Text)பிரதியின் காலமற்ற தன்மை என்பது அது பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த போதும், நடப்பு சூழலுக்கு பொருத்தமற்றதாக இருந்த போதும் அதை படிப்பது, அவதானிப்பது, ஜமாய்ப்பது. மாறாக கால எல்லை என்பது அந்த பிரதியின் உருவாக்க காலமும்,அந்த காலத்திய கலாசார சூழல் மற்றும் சமூக அழகியலின் குறுக்கான ஊடாட்டமும் கலந்த ஒன்று. மத சமூகங்கள் இந்த முரண்களின் ஊடாக தான் பயணம் செய்து வருகின்றன. இதை குறித்து மார்க்ஸ் தன் அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான ஒரு பங்களிப்பு (A Contribution to the critique of Political economy ) நூலில் குறிப்பிட்டார். தொழில்மய சமூகத்தில் ஒரு மனிதன் எவ்வாறு கிரேக்க தொன்மங்கள் குறித்து உவகை அடைகிறான். அந்த அவதானமும் , உவகையும் என்பது அவனின் இளமை நோக்கிய ஏக்கமும் (Nostalgia)பழைய உற்பத்தி முறைமையின் தொகுப்புமாகும். செய்த் இந்த சிந்தனை முறைமையை இடைக்கால அந்தலூசிய சிந்தனையாளரான இப்னு ஹாசம் என்பவரிடமிருந்து நீட்சியடைய செய்தார். அதாவது நடப்பு எதார்த்தம் மற்றும் பிரதியாக்கம். இதன் அடிப்படையில் தான் செய்த் குர் ஆன் மற்றும் பைபிளை ஆராய்ந்தார். அதன் காலம் , சூழல் , சமூக அழகியல் போன்றவை புனித பிரதியின்அலகுகளாக பார்க்கப்பட வேண்டும் என்றார். மேலும் மத பூடகமாக்கலுக்கும், வெற்று வாதங்களுக்கும் எதிரான செய்த்தின் கோட்பாடுகள் முக்கியமானவை. தன் நேர்காணல்களில் பிரதி, உலகம், அதிகாரம், காலனியம், மதம் குறித்த கோட்பாடுகள் மீதான விமர்சனத்தையே அதிகமும் முன்வைத்தார் . செய்த்தின் இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு அரசியல், அதிகாரம் மற்றும் கலாசாரம் என்ற நூலாக வெளிவந்தது. கீழைத்தேயத்தில் இருந்து புலம் பெயர்ந்து மேற்கத்திய கல்விசார் அறிவுஜீவியாக செயல்பட்டு தன் சிந்தனையால் மேற்குலகிற்கு பெரும் சவாலாக இருந்த எட்வர்ட் செய்த் கிழக்கின் வரலாற்றில் முன்கோடாகவே இன்றும் இருக்கிறார்.
- உயிரோசை