காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label கிழக்கு. Show all posts
Showing posts with label கிழக்கு. Show all posts

Saturday, June 28, 2014

உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் - மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு



கலாசாரம் என்பது சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதது. அதன் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கூட. உலகில் எந்த சமூகமும் அதற்கான சொந்த கலாசாரங்களை கொண்டே இயங்கி வருகிறது. கலாசாரமற்ற சமூகங்களை வரலாற்றில் நாம் காண்பது அரிது. பனிப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் சமூகங்களின் கலாசாரம் என்பது உலக அரசியலை வடிவமைக்கும் சக்தியாகவும் மாறி இருக்கிறது. தேசங்களிடையே, நாகரீகங்களிடையே, இரு மதங்களிடையே கலாசார யுத்தங்கள் அகவய மற்றும் புறவய நிலையில் நடந்து வருகின்றன. மனித வாழ்க்கையின் இயக்கத்திற்கு கலாசாரம் முக்கிய இயங்கு சக்தியாக இருக்கும் நிலையில் உலகமயமாக்கல் சூழலில் அது ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை அவதானிக்க வேண்டியதிருக்கிறது. இங்கு கலாசாரம் என்பது குறிப்பிட்ட மக்கட்தொகுதியினர் தங்களின் மனோபாவம், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் போன்றவற்றை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது  என்பதாகும். இது கலாசாரம் குறித்த விளக்கமாக சில மேற்கத்திய அறிவுஜீவிகளால் பயன்படுத்தப்படுகிறது. அது எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கான அரசியல் ஆராயப்பட வேண்டும்.


உலகமயமாக்கல் உலக மக்களிடையே செயற்கையான உள்பிணைப்பையும், கூட்டிணைவையும் உருவாக்க முயல்கிறது. அதனை விரிவாகவும், ஆழமாகவும் நிகழ்த்த நம்மை எத்தனிக்கிறது. இந்நிலையில் உலக கிராமம் என்ற கருதுகோள் மேற்கண்டவற்றிற்கு  தீவிர உயிரோட்டத்தை அளிக்கிறது.
மேலும் அறுபதுகளில் நிலாவை கண்டறிந்த நிகழ்வானது மூடியிருந்த உலகின் கண்களை திறப்பதற்கு காரணமாக அமைந்தது. நிலவின் பயணம் உலகம் ஒன்றோடொன்று வலைப்பின்னலாக இருக்கிறது என்பதை உணர வைத்தது. அடுத்த நூற்றாண்டிற்கான உலகத்தை தயார் செய்ய அது ஒரு தொடக்கத்தை அளித்தது. மேலும் தேசங்களில் சமூக மாற்றத்திற்கான தொடக்கமும் அதன் மூலம் குறிக்கப்பட்டது. மேலும் நாடுகளில் அதிகரித்த மக்கள்தொகையானது பூமியின் வளங்கள் எல்லாம் வரம்பிற்கு உட்பட்டவை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. அதுவரையிலும் மனித சமூகம் வளங்கள் குறித்த பேராசையை மட்டுமே தன் இயல்பான நம்பிக்கையாக வைத்திருந்தது. இந்நிலையில் உலகமயமாக்கல் மனிதனின் அசல்தன்மையை வலிமைப்படுத்தும் ஒன்றாக மாறியது.  அதே நேரத்தில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறையில் அது நிகழ்த்திய வேக பாய்ச்சல் சக மனிதனின் அசல்தன்மையை இழக்கும் ஒன்றாகவும் மாறியது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். மேலும் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ஊடுபாவல்களுக்கு பெரும் வழிவகுத்தது. அந்த ஊடுபாவல் இயங்கும் வகையிலான சந்தை வடிவத்தில் தான் இருந்தது. முன்னை விட அதிக வர்த்தக போக்கு, மூலதனம், நிதி, சுற்றுலா, புலப்பெயர்வு, தகவல் மற்றும் அறிவு ஆகியவை  உலகம் பின்னலுக்கு நெருங்கி வருவதை வெளிப்படுத்தின. மேலும் உலக கிராமம் (Global Village)என்ற கருத்தாக்கமும் சீன கன்பூசிய கருதுகோளான பெரும் ஒற்றுமை என்பதன் மறுவடிவம் தான். சீனாவின் கன்பூசியம் உலகம் பற்றிய சில பார்வைகளை வெளிப்படுத்தி விட்டு சென்றது.

உலகமயமாக்கல் மேற்கு மற்றும் கீழை உலகங்களை ஒருங்கிணைய செய்ய மேற்கொண்ட முயற்சிகள் இரு துருவங்களிலும் சமூக மற்றும் கலாசார ரீதியாக சில தகர்வுகளை நிகழ்த்தி இருக்கின்றன. அதன் அரசியலானது சமூகங்களிடையே தொடர்பு, வலைப்பின்னல், பரிமாற்றம், கூட்டிணைவு போன்ற அம்சங்களில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியில்  மேற்கின் பகுத்தறிவு தாக்கத்தால் உருவான தொழிற்துறை, நகரமயமாக்கல், மேற்கத்திய மயமாக்கல் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற கருத்தாக்கங்கள் கீழைநாடுகளின் கலாசார, நிறுவன மற்றும் கட்டமைப்பு வித்தியாசங்களை பெருமளவில் தகர்த்தது. ஒரே சீரான உலகம் என்பதை செயற்கையாக முன்வைக்க தொடங்கியது. இதன் காரணமாக ஏகாதிபத்திய கருத்தாக்கம் வலுப்பெற்று ஆங்கிலம் உலக சொல்லாடலாக, அமெரிக்க வகையான கேளிக்கை முறை, துரித உணவு முறை, அவசர முறை மற்றும் இளைய தலைமுறை கலாசாரம் போன்றவை  கீழை நாடுகளை ஆக்கிரமிக்க தொடங்கின. இதனால் உலகம் ஒரு முனையை நோக்கி குவிவது ஏற்பட்டது. கீழை சமூகம் மற்றும் அதன் கலாசாரமும் ஒரு முனையை நோக்கிய குவியமாக மாறியது. அதுவே கீழை சமூகத்தினரை அமெரிக்க கனவை நோக்கி நகர்த்தியது. 90 களில் இந்தியாவின் படித்த மத்தியதரவர்க்கத்தினரிடையே   உருவான   அமெரிக்க கனவு இதன் நீட்சி தான். இதன் எதிரிடையாக கீழைநாடுகளின் சமூக அறிவுஜீவிகள் ஆசிய மதிப்புகள், வலைப்பின்னல் முதலாளித்துவம் மற்றும் ஆசிய பசிபிக் நூற்றாண்டு போன்ற கருத்தாக்கங்களை முன்வைத்தனர். ஒரே சீரான உலகம் என்ற பெயரில் மேற்குலகம் கீழைநாடுகள் மீது தொடுக்கும் சமூக கலாசார யுத்தத்திற்கு பதிலடியாக இதனை முன்வைத்தனர். கிழக்காசிய நாடுகளில் இது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அறிவார்ந்த மற்றும் ஆன்மீக தளங்களில் இது அதிகமும் ஊடுருவியது.  குறிப்பாக சீனாவில் வெகுஜன மக்களிடையே இது பற்றிய உரையாடல்கள் அதிகம் நடந்தன. 1919 ல் சீனாவில் உருவான அறிவியக்கம் நவீன மேற்குலகம் பற்றிய கருத்தாக்கத்தினை அறிந்து வைத்திருந்தது. அது பற்றிய தொலைநோக்கு உரையாடல்களையும் முன்வைத்தது. மேலும் உச்சகட்ட கலாசார புரட்சியே சீனாவின் நாகரீக வளர்ச்சிக்கு உதவும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் பிரெஞ்சு தத்துவமேதைகளான ழீன்பால் சார்த்தர், தெரிதா மற்றும் மிஷல் பூக்கோ போன்றவர்கள் மாவோயிசம் 1968 ல் நடந்த பிரெஞ்சு மாணவர் புரட்சிக்கு உதவியது என்று மாவோவை சிலாகித்தார்கள். மாவோயிசம் நீண்டகால புரட்சிக்கான சாத்தியபாடுகளை உள்ளடக்கி இருக்கிறது என்று சார்த்தர் ஒருமுறை குறிப்பிட்டார்.

மேற்குலகில் சமூக புரட்சிக்கு காரணமாக இருந்த கோட்பாடுகளில் மத சார்பின்மை (Secularism)முக்கியமானது. திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராக 16 ஆம் நூற்றாண்டில் உருவான புரோட்டஸ்டண்ட் இதற்கான தொடக்கம் அளித்தது எனலாம். இந்த சொல்லை முதன்முதலாக உருவாக்கியவர் பிரெஞ்சு தத்துவமேதை பெர்டிணான்ட் பூஷன். 1841 ல் பாரிஸில் பிறந்த அவர் ஆரம்பக்கல்வி கற்று தத்துவம் மீதான ஆர்வம் காரணமாக பிரெஞ்சு பல்கலைகழகத்தில் தத்துவ படிப்பு படித்தார். அப்போதே அவருக்கு தாராள அரசியல் மீதான ஈர்ப்பு அதிகமானது. மேலும் திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடினார். திருச்சபையும் அரசும் பிரிக்கப்பட வேண்டும் என்பது  அவரின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதற்காகவே Secular என்ற சொல்லாடலை பிரெஞ்சில் உருவாக்கினார். அதாவது Laicite என்ற பிரெஞ்சு சொல் இவரின் கண்டுபிடிப்பாகும். அதனைத்தொடர்ந்து இதன் பயன்பாட்டு அர்த்தத்தை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். பிரெஞ்சு தத்துவமேதையான ரூசோவின் சிவில் மதம் என்ற கோட்பாட்டின் மீது இவருக்கு அதிகம் ஈர்ப்பு இருந்தது. மேலும் இதற்காக மதசார்பற்ற மனித உரிமை அமைப்பொன்றை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியில் 1882 ல் பிரான்சு அரசு பள்ளிகளில் மதசார்பற்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தியது.  பூஷன் உருவாக்கி விட்ட இந்த சொல்லாடலானது ஆரம்பகாலகட்டத்தில்  சில புரட்சிகர புரோட்டஸ்டண்ட் பிரிவை குறித்தாலும் கால போக்கில் பகுத்தறிவு இயக்கத்தை குறிப்பதாக மாறியது. மேலும் பிரெஞ்சு புரட்சி காலத்தில் மதத்திற்கும் அரசியலுக்குமான மோதல் உருவாகி இந்த சொல்லாடல் அரசு மற்றும் மதத்தை பிரிப்பதை குறித்தது. அதாவது தனியான சிவில் சமூகம் மற்றும் மத சமூகம் என்பதை குறித்தது. இருபதாம் நூற்றாண்டில் Secular இன்னும் பரிணாமமடைந்து முழு முதலான சிவில் சமூகத்தை குறித்தது. மேலும் மனிதர்களை மோசமான மனசாட்சி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முன்வைத்தது.  இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் மதசார்பின்மை மேற்கத்திய நாடுகளில்   மத சமூகத்திடமிருந்து முற்றிலும் விலகிய சிவில் சமூகத்தை அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை குறித்தது. அரசானது எல்லா மதத்தையும் சமமாக நிராகரிக்க வேண்டும் என்ற மேற்கத்திய அரசுகளின் கோட்பாடு இதன் தொடர்ச்சி தான். ஆனால் கீழை நாடுகள் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் ஒன்றாக இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள் மதத்தை பின்பற்றும் நாடுகளாக, அதே நேரத்தில் மதசார்பின்மை  கோட்பாட்டை பின்பற்றும் பிற நாடுகள் எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கும் விதமாக அதனை அர்த்தப்படுத்திக்கொண்டன. காரணம் இங்கு மதமே சிவில் சமூகத்தை தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக  இருப்பதால் தான். இந்தியா அதற்கு சரியான உதாரணம்.


மதசார்பின்மை கோட்பாடானது அதன் தொடர்ச்சியில் லௌகீக சமூகத்தின் மீது  மதசார்பற்ற அறம் (Secular Morality)என்ற கோட்பாட்டை முன்வைத்தது. அதாவது மனித பிறப்பின் அடிப்படையிலான பொருளாயத மற்றும் அறிவார்ந்த சொத்துகளுக்கு  அதிக முக்கியத்துவம் அளிப்பது. உதாரணமாக வீடு, உணவு, கருவிகள், தொழில்நுட்பம், புத்தகங்கள் மற்றும் பிற அறிவு மூலங்கள் அனைத்தையும் இறப்பின் பலனாக கண்டது. இறப்பு என்பது இறப்பை தவிர  வேறொன்றுமில்லை என்றது. மனிதர்கள் நற்செயல்கள் எப்போதும் அழிவதில்லை என்றது. இது பௌத்தம் மற்றும் கன்பூசிய கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டது. இரண்டுமே இதனை வேறுவடிவத்தில் முன்வைத்தன.

கலாசாரம் சமூகத்தின் வளர்ச்சியில் அல்லது அதன் இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிதமானது. சமூக மனிதர்களின் நடத்தை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் இவற்றின் ஒவ்வொரு நிலையிலும் இது ஊடுருவுகிறது. இன்னும் இதனை ஆழ அகலங்களுடன் ஆராய்ந்தால் தனிமனித அல்லது சமூகத்தின் உடல் மற்றும் மன உணர்வு நிலை முக்கிய இடத்தை வகிக்கிறது. இது தனிமனித/சமூகம் பற்றிய விழிப்பு நிலை, கமுக்கத்தனம் மற்றும் உள்ளார்ந்த நடவடிக்கைகள் இவற்றின் மொத்தமாக இருக்கிறது.  தனிமனித நிலையில் மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை இம்மாதிரியான தன்மை வெட்கத்தனம், பயம் மற்றும் சமூக தகுதியின்மை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றன. அதே நேரத்தில் கிழக்காசிய நாடுகளில் அல்லது தென்கிழக்காசிய நாடுகளில் இம்மாதிரியான தன்மை அடக்கம், பணிவு, சமூக தகுதி, சிறந்த நடத்தை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றன. மேற்கத்தியர்களை கூர்ந்து அவதானித்தால் நாம் மேற்கண்டவற்றை உறுதிப்படுத்த முடியும். அதே மாதிரியே சீனர்களையும், ஜப்பானியர்களையும் அவதானித்தால் மேற்கண்ட உடல் உளவியல் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சமூக சார்பு நடத்தை (Prosocial behavior) என்பது சமூக கலாசாரத்தின் ஒரு பகுதி. அதாவது உதவி செய்தல், பகிர்தல், பராமரித்தல் மற்றும் விநயம் இவை அனைத்தும் சமூக சார்பு நடத்தையில்  உட்படும் விஷயங்கள். பெற்றோர் -குழந்தை உறவு முறை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகள் சார்ந்து இவை மதிப்பிடப்படுகின்றன. மேலும் மேற்கத்திய குழந்தைகளை விட கிழக்காசிய நாடுகளின் குழந்தைகள் சமூக சார்பு நடத்தையில் தீவிரமாக இருக்கின்றன. மேலும் தங்கள் குழந்தைகள் சமூக சார்பு நடத்தை உடையனவாக இருக்க வேண்டும் என்று கிழக்காசிய நாடுகளின் அன்னையர்கள் விரும்புகிறார்கள். இது கூட்டு உணர்வின் விளைவாகும். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் கூட நாம் கிராமம் மற்றும் நகரத்து குழந்தைகளிடம் இந்த பகிர்தல் மற்றும் உதவுதலை காண முடியும். உதாரணமாக சாக்லேட் சாப்பிடும் குழந்தையிடம் எனக்கு கொஞ்சம் கொடு என்று சொல்லும் போது பெரும்பாலான குழந்தைகள் கொடுத்து விடுகின்றன. இது இந்திய சமூகத்தில் காணப்படும் சமூக சார்பு மனோபாவத்தின் தொடர்ச்சி.

மேற்குலகம் மற்றும் கீழைத்தேய பிரதேசங்களின் சமூக கலாசார அம்சங்களில் சுதந்திரமும்,  கூட்டிணைவும் (Independent and Interdependent) முக்கிய இடத்தை வகிக்கின்றன. சுதந்திரம் அதிக போட்டி மனோபாவத்தையும்,  குறைந்த சமூக உறவாடல் மனோபாவத்தையும் உட்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கூட்டிணைவு என்பது குறைந்த போட்டியையும், அதிக சமூக உறவாடலையும் உட்கொண்டிருக்கிறது. மேலும்  குறுக்கு கலாசாரத்தின் முக்கிய காரணியாகவும் கூட்டிணைவு இருக்கிறது. இந்நிலையில் மேற்குலகம் சுதந்திரத்திற்கும், கிழக்குலகம் கூட்டிணைவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இரண்டிற்குமான தர்க்க மற்றும் நடைமுறைரீதியான வித்தியாசங்களை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

பிரிவு  
சுதந்திர சமூக நோக்கு நிலை
கூட்டிணைவு சமூக
நோக்கு நிலை


மதிப்பு மற்றும் நம்பிக்கைகள்
தனிமனிதன்
தனித்துவம்
கூட்டுநிலை
சமூக இணக்கம்       
சுயம்

சுதந்திர சுயகட்டுப்பாட்டை கொண்ட சமூக அடையாளம்


சுயம் எல்லைக்குட்பட்டது


கூட்டிணைந்த சுய கட்டுப்பாடு

உறவு முறையிலான சமூக அடையாளம்

சுயம் என்பது மற்றவர்கள் மீது நெருக்கத்துடன் இணைந்திருக்கிறது.

  உணர்ச்சிகள்
சமூக செயற்பாடற்ற உணர்ச்சிகரமான நாட்டம்

மகிழ்ச்சி என்பது செயற்பாடற்ற உணர்ச்சியாக


சமூகசெயற்பாட்டுடன் கூடிய உணர்ச்சிகரமான நாட்டம்


மகிழ்ச்சி என்பது செயற்பாடான உணர்ச்சியாக

நோக்கம்

தனிப்பட்ட சாதனை

சுய வளர்ச்சி

ஈகோ

குழு சாதனை

சுய விமர்சனம்

சுயம் - மற்றவர்களுடன் உறவாடல்



மேற்கண்ட வித்தியாசங்களை நாம் இன்னமும் இரு கோளங்கள் சார்ந்த மக்கட்தொகுதியினரை அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். மேலும் இன அடிப்படையில் மேற்கு மற்றும் கிழக்கிற்கு அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மொழியியல் அடிப்படையும் கூட. ஐரோப்பிய மொழிகள் அனைத்துமே  பெரும்பாலும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை. கிழக்கத்திய மொழிகளில் இருந்து கட்டமைப்பு ரீதியாகவே மாறுபடுகின்றன. மேலும் இரு பூகோள பகுதிகளுக்கும் மிகப்பெரும் கலாசார வித்தியாசங்கள் இருக்கின்றன. கிழக்கு ஆசியா நாடுகளில் கன்பூசியமும், தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் அதிக தாக்கத்தை செலுத்தின. அதே நேரத்தில் மேற்கு நாடுகளில் கிரேக்க தத்துவம் அதன் வழிமுறைகள் அதிக தாக்கத்தை செலுத்தியது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் சமூக வேறுபாடுகள் அதன் கால அளவை பொறுத்து மாறுபடுகின்றன. உதாரணமாக மேற்குலக நாடுகள் கீழைத்தேய நாடுகளை விட முன்னரே தொழில்மயமாகி விட்டன. மேலும் அரசியல் நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவை முந்திக்கொண்டன. மேற்கண்ட இரண்டும் கீழை நாடுகளை வந்தடைய வெகுகாலம் பிடித்தது. மேலும் உடல் மற்றும் முக மொழி கூட இரண்டிற்கும் வேறுபடுகின்றது. கண்ணோடு கண்ணாக பேசுவது என்பது மேற்கத்திய சமூகங்களை பொறுத்தவரை இயல்பானதாக, நேர்பேச்சாக,தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. அதே நேரத்தில் கிழக்காசிய சமூகங்களில் வெட்கம், பயம், இயல்பின்மையின் வெளிப்பாடாக இருக்கிறது. சீனர்களில் பெரும்பாலானோர் கண்களை சற்று தாழ்த்திக்கொண்டு தான்  உரையாடுவார்கள்.

கீழை மற்றும் மேற்கின் சமூக கலாசார வேறுபாட்டில் மிக முக்கியமானது தனிநபர்வாதமும், கூட்டுவாதமும் (Individualism and Collectivism). மேற்கு அதிகமும் தனிநபர் வாதத்தை முன்வைக்கிறது. குடும்பம் என்ற நிறுவனம் அங்கு அதிக வலுவானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. காதல் என்பதும், திருமணம் என்பதும் பெரும்பாலும் தனிநபர் சார்ந்த விஷயமே. மேலும் தனிநபர்வாதம் தனிநபரின் சாதனை, படைப்பாற்றல், கலைத்திறன், வாழ்வியல் வெற்றி போன்றவற்றிற்கு சமூக அந்தஸ்தை அளிக்கிறது. மேற்குலகம் பெரும்பாலும் இதனை சார்ந்திருக்கிறது. கீழை நாடுகளை ஒப்பிடுகையில் மேற்குலகில் அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறை செயல்பாடுகள் அதிகம் நிகழ இந்த தனிநபர் வாதமும் ஒரு காரணம். கூட்டு வாதம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆப்ரிக்காவை நாம் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். அங்கு தனிநபர்கள் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டார்கள். அவர்களின் உணவு பகிர்தல் இனக்குழுக்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டது. கூட்டுத்தண்டனை முறையும் அமலில் இருந்தது. மேலும் சமூக ஒதுக்கல், தகுதி இழப்பு போன்றவையும் அங்கு வழக்கில் இருந்தன. இந்திய சமூகங்களில் சாதிய பஞ்சாயத்து முறைகள் மற்றும் சாதிவிலக்கம் போன்ற தண்டனை முறைகள் இப்போதும் வழக்கில் இருக்கின்றன. இது கீழைத்தேய கூட்டுவாதத்தின் பின் தொடர்ச்சியாகும்.

கலாசார உளவியல் (Cultural Psychology)என்பதில் மேற்கண்ட தனிநபர் மற்றும் கூட்டு வாதத்தின் வித்தியாசங்கள் ஆழமான நிலையில் மிகுந்த தாக்கத்தை செலுத்துகின்றன. அது நடத்தை மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகள் மீது மனித சமூகத்தில் பல வித்தியாசங்களை உருவாக்குகிறது. மேலும் மனிதனின் சுயம் (Self)மீதும் தாக்கம் செலுத்துகிறது. மேற்கு மற்றும் கீழை சமூகங்களிடையே ஒரே மாதிரியான சமூக பொருளாதார தகுதியை கொண்ட மனிதர்களை அல்லது குடும்பங்களை நாம் அவதானிக்கும் போது அவை தங்களுக்குள் தனிநபர் மற்றும் கூட்டுவாதம் சார்ந்த கலாசார வேறுபாடுகளை கொண்டிருப்பதை கண்டறிய முடியும்.

சமூகங்களிடையே பேஷன், மரபு மற்றும் பழக்கவழக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை பற்றி பிரபல சமூக விஞ்ஞானியான மாக்ஸ் வெபர் ஆராய்ந்தார். பயன்பாடு (Usage)தான் இதன் தொடக்கம் என்றார். மனிதனின் அன்றாட செயல்பாடு சார்ந்த பயன்பாடு தொடர்ச்சியாக நிகழும் போது அது ஒழுங்குமுறையாகிறது. உதாரணமாக கடலில் மீன் பிடிக்கும் மீனவர் மீன் அதிகம் இருக்கும் இடங்களில் தன் வலையை விரிக்கிறார். விற்பனையாளர் தன் வாடிக்கையாளரை தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். நாம் அன்றாடம் உடையை இயல்பாக உடுத்திக்கொள்கிறோம். இம்மாதிரியான செயல்பாடுகள் தொடர்ந்து நிகழும் போது அதுவே ஒழுங்குமுறையாகி ஒரு சமூகத்தின் பழக்கவழக்கமாகிறது (Custom). மேலும் ஒழுங்குமுறையானது  அதன் புதுமைக்காக பகுதியாக பின்பற்றப்படும் போது அது பேஷனாக மாறுகிறது என்றார் மாக்ஸ் வெபர். இதன் அடிப்படையில் இந்திய சமூகம் அல்லது சில கீழை சமூகங்களை பொறுத்தவரை உடை என்பது பேஷனாக, நவமயப்பட்டதாக இருக்கிறது. ஆனால் மேற்கத்திய சமூகத்தில் அது தட்ப வெப்பத்தோடு இயைந்த பழக்கவழக்கமாக இருக்கிறது.

குடும்பம் என்ற நிறுவனம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய சமூகங்களில் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமான மாறுதல்களை அடைந்திருக்கிறது. பருண்மையான அறம் என்பதிலிருந்து உருவான பழிவாங்குதல் முறை உலக சமூகங்களிடையே குடும்பம் என்ற நிறுவனத்தின் உள்ளிருந்து பல்வேறு வித மோதல்களையும், போர்களையும் உருவாக்கி இருக்கிறது. குடும்ப கௌரவம் என்பதாக இது அர்த்தப்படுத்தப்பட்டது. அதாவது குடும்பத்தில் உள்ள ஒருவர் தன் பலத்தை நிரூபிக்க மற்றவர்களுடன் மோதுவது அல்லது பழிவாங்குவது என்பது இதன் விரிவாக்கம்.கிரேக்கத்தின் ஒடிசியஸும், இந்தியாவின் மகாபாரதமும் இதற்கான சரியான உதாரணங்கள். காலத்தின் நகர்வில் இது பல நூற்றாண்டுகளை கடந்து பரிணாமம் அடைந்து குடும்பம் என்ற நிறுவனம் மேற்குலகில் கருத்தளவில் சிதையும் நிலைக்கு சென்றிருக்கிறது. தனிநபர்வாதம் மற்றும் சுதந்திரம் முன்வைக்கப்படும் நிலையில் கீழை சமூகங்களில் இது இன்னும் வலுவாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் குடும்பம் என்ற கட்டமைப்பு மேலும் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக சாதிய சமூக அமைப்பின் பின்புலத்தோடு அறுபடாத சங்கிலி போன்று பின்னி பிணைந்திருக்கிறது. அது நேரற்ற வேர்களாக குறுக்கு மடுக்குமாக அமைந்திருக்கிறது. மேலும் இந்திய சமூகத்தில் கலாசாரம் என்பது சில தருணங்களில் தட்பவெப்பத்தோடும், புவியியல் அமைப்போடும் இயைந்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் கழிவறை இல்லாமல் திறந்த வெளியாக இருப்பது இதற்கு உதாரணம். பாரம்பரிய விவசாய நாடான இந்தியாவில் சக மனிதன் தன் விவசாய நிலத்தோடு இணைந்தே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். தண்ணீரும் அதனோடு இணைந்து இருந்த காரணத்தால் அதனோடு அவன் பயணம் செய்தான். அதன் தொடர்ச்சியும் எச்சம் தான் இன்றைய கழிவறை அற்ற நிலை. மேலும் வற்றாத ஜீவநதிகளை, அதன் இயல்பான ஓட்டத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் தண்ணீர் சார்ந்த கலாசாரங்கள் பல வழக்கில் இருப்பதை கவனிக்க முடியும். மேற்குலகில் இதனை நாம் பார்க்க முடியாது.

சமூகமும் கலாசாரமும் ஒரே தடத்தில் பயணம் செய்யும் போது அது தனிமனிதனை அல்லது ஒரு பலவீனமான குழுவை பாதிக்காமல் நகரும் போது இங்கே மோதல்கள் இல்லை. ஆனால் அதுவே ஆதிக்கமாக, அதிகாரமாக மாறும் போது மனித இனத்தை பாதிக்கிறது.  மிதிக்கப்படும் வஸ்துக்கள் போன்று குழுக்கள் விளிம்பு நிலை குழுக்களாக மாறுகின்றன. பொருளாதாரரீதியாக உலகை ஒருமைப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் சமூக கலாசாரங்களையும் அதன் ஓட்டத்தையும் தடை செய்ய முயல்கிறது. இது மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய சமூகங்களை அதிகம் பாதித்திருக்கிறது. இரு கோளங்கள் சார்ந்த கலாசார மோதல்கள் இன்னும் நடந்து வருகின்றன. இலக்கிய பிரதிகள் வேறுபட்ட கலாசாரத்தை தாண்டும் போது வாசகனை பாதிப்பது மாதிரி, மேற்கும், கிழக்கும் இன்று உள்வாங்கலுக்கும், மோதலுக்குமான இடைவெளியில் போராடிக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒருவகையான உலக இயங்கியலே..


Tuesday, January 28, 2014

கிழக்கும் மேற்கும் - முரண்களும் சிக்கல்களும்

பிரபஞ்சமே திசைகளால் உருவாக்கப்பட்டது தான்.  நான்கு திசைகளும் மனிதனை நிலவியல் ரீதியான பிரிப்பதோடு அதிலிருந்து உருவாகும் அடையாளங்களையும், முரண்களையும் உட்கொண்டிருக்கின்றன. இதன் நிலவியல் பிளவு வரலாற்று காலத்திலிருந்தே தொடங்கி விட்டது. வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டால் இது தத்துவார்த்த அடிப்படையும் கூட. புராதன காலத்திலிருந்தே இரு பெரும் கலாசார அரைக்கோளமாக  மேற்கும் கிழக்கும் இருந்து கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட புள்ளியிலிருந்து பிரபஞ்சம் நோக்கியும், மற்றொன்று பிரபஞ்சத்திலிருந்து குறிப்பிட்ட புள்ளியை நோக்கியும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.  இதன் தொடர்ச்சியில் இடைவிடாது மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் இரு பெரும் பூகோள பிளவுகள் ஒன்றை ஒன்று உளவியலாகவும் மோதிக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் மற்றும் மெய்நிகர் (Virtual)போன்ற கருதுகோள்கள் எல்லாம் உலவினாலும் இவை இரண்டும் அவற்றின் சொந்த முரண்களோடு இயங்கிக்கொண்டிருக்கின்றன.

வரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் ஹிரோடோடஸ் கிமு நான்காம் நூற்றாண்டில்  முதன் முறையாக கிழக்கை பாரசீகர்களோடும், மேற்கை கிரேக்கர்களோடும் ஒப்பிட்டு இவ்விரு இனங்களும் நெடுங்காலமாக மோதிக்கொள்ளும் என்று குறிப்பிட்டார். வரலாற்றின் தொடர்ச்சியில் அவ்வாறே நிகழ்ந்தது. கிரேக்கம் சார்ந்த இனக்குழுக்கள் ஒருபக்கமும், ஆரியம் சார்ந்த இனக்குழுக்கள்  மற்றொரு பக்கமும் உருவாயின.  இந்து பள்ளத்தாக்கு பகுதியில் நிலைபெற்றிருந்த திராவிட இனக்குழு மரபை ஆரிய மரபு உள்வாங்கி கொண்டது. பின்னர் தங்களுக்கான அரசை ஏற்படுத்தின. இது கிமு 15 ஆம் நூற்றாண்டில் நடந்தேறியது. அவர்கள் தங்களுக்கான சொந்த கலாசாரத்தை ஏற்படுத்தி மேற்குலகை தங்களுக்கான முரணாக முன்வைத்தனர்.

உலக வரலாற்றின் நகர்வில் இரு பெரும் திசை மரபுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. ஒன்று மேற்கு மையம் அல்லது ஐரோப்பிய மைய மரபு
(Euro Centrism) - கிமு  500 முதல் கி.பி 1950 வரை . மற்றொன்று ஆசிய மைய மரபு (Asia Centrism )கி.பி. 1950  முதல் தற்போது வரை. இவை இரண்டும் லௌகீக சுழற்சியாக அதன் அரசியல், பொருளாதார , புவியியல் நலன்களை நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக பயணம் செய்திருக்கின்றன. ஐரோப்பிய மைய மரபை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தனி அம்சங்களாக பிளவுற்றிருக்கிறது. கிரேக்க மரபு (கிமு 500 முதல்  0 வரை)கிறிஸ்தவ மரபு ( 0 முதல் கி.பி 1500  வரை)வட அட்லாண்டிக் மரபு (கிபி 1500 முதல் 1950 வரை)ஐரோப்பாவை பொறுத்தவரை மேற்கண்ட மூன்று மரபுகளும் தொடர்ச்சியாக அதற்கான வடிவ வேறுபாட்டுடன் இருபதாம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. மேலும் கிழக்கை பொறுத்தவரை மத்தியகிழக்கு மற்றும் தூரகிழக்கு நாடுகள் குறிப்பாக சீனாவின் வளர்ச்சியும், அதன் ராணுவத்தன்மையும் ஆசிய மையமாக இருக்கின்றன. மேலும் சீனாவை பொறுத்தவரை வரலாற்று காலந்தொட்டு பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றது.  காகிதம் (கி.மு 220)துப்பாக்கிக்குண்டு (கி.பி 900),அச்சு இயந்திரம் (கி.பி 1040 )திசைகாட்டி (கி.பி 1100) போன்றவை சீனா உலகிற்கு அளித்த பெருங்கொடைகள். இதன் நீட்சியில் சீனாவின் ஆன்மீக மரபும் மேற்குலகை விட மேம்பட்டதாக இருந்திருக்கின்றது. கன்பூசியமும், தாவோயிசமும் அதன் உள்ளகமான இரு பெரும் ஆன்மீக மரபுகள். இந்த ஆன்மீக மரபுகள் அதன் அண்டை நாடுகளுக்கும் ஊடுபாய்ந்திருக்கின்றன.

மேற்கை பொறுத்தவரை அரசியல் பொருளாதார அம்சங்களில் கிழக்கை ஆதிக்கம் செலுத்தியே வந்திருக்கிறது. கிமு 4 ஆம் நூற்றாண்டில் சைரஸ் மன்னனுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான கிரேக்கர்கள் பாரசீகத்திற்கு புறப்பட்ட நிகழ்வு,  மகா அலெக்சாண்டர் (கிமு 356 -323)ரோம பேரரசு (கிமு 27 - கிபி 395)மாபெரும் சிலுவைப்போர்கள் ( கி.பி 11ஆம் நூற்றாண்டு முதல் 15 வரை)மத்திய தரைக்கடல் போர்கள் (கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல் 16 வரை)கீழை நாடுகளை வேவு பார்த்தல் ( கி.பி 16 ஆம் நூற்றாண்டு முதல் 17 வரை) காலனிய அதிகாரங்கள் (கி.பி 16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை)நாடு பிடிக்கும் செயல்பாடுகள் (கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல் 16 வரை)அறிவியல் கண்டுபிடிப்புகள் (கி.பி 17 ஆம் நூற்றாண்டு)மற்றும் நடப்பு உலகின் உலகமயமாக்கல் என தொடரும் அனைத்துவித உலகின் போக்குகளுக்கும் மேற்கே காரணமாக அமைந்திருக்கிறது. மேற்கு எப்போதுமே கிழக்கை அல்லது மற்றவர்கள் மீது தன் செயல்பாட்டு திணிப்பை நிகழ்த்தியே தன்னை நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. புராதன கிரேக்கத்திலிருந்து தொடங்கி ரோமாபுரி வரை நீண்டு, இரு நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என அதன் அரசியல் பொருளாதார ஆதிக்கம் தொடர்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மாபெரும் இரு போர்கள், மற்றும் காலனிய அதிகாரத்தின் நிலை குலைவு, சோவியத் யூனியனின் தகர்வு போன்றவை கீழை நாடுகளை அதற்கான உயரத்தோடு எழச்செய்தன. குறிப்பாக 1950 க்கு பிறகு சீனா மற்றும் ஜப்பானின் எழுச்சியானது ஆசியாவை மேற்கிற்கு இணையாக உருமாற வைத்தது. அதாவது இந்த காலகட்டத்தை ஆசியமையவாதத்தின் (Asia Centrism)தொடக்கம் எனலாம்.  பல நாகரீகங்களையும், கலாசார கூறுகளையும் உள்ளார்ந்த ஒன்றாக வடிவமைந்திருக்கிற ஆசியா அல்லது கீழைத்தேய நாடுகள் தங்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி அமைந்தது. வரலாற்றில் மேற்கு மற்றும் கிழக்கு ஆகியவை 9 நாகரீகங்களையும், நான்கு கலாசார மரபுகளையும் உட்கொண்டிருந்தன. அரபு - இஸ்லாம் , சீனா- கன்பூசியம், இந்து/பிராமணீயம் மற்றும் மேற்கு/கிறிஸ்தவம் போன்ற நான்கு முக்கிய கலாசார முறைமைகளில் முதல் மூன்றும் கீழைநாடுகளுக்கு உரியவை. கீழைத்தேய கோட்பாடு (Theory of Orientalism )முறைமையை வடிவமைப்பதில் மேற்கண்ட மூன்றும் மிக முக்கிய வரலாற்று பங்களிப்பை செய்திருக்கின்றன. எட்வர்ட் செய்த்தின் கீழைத்தேய கோட்பாட்டு ஆய்வு முறை பெரும்பாலும் இதனடிப்படையில் தான் இருந்தது. எதிரிடையாக  மேற்கின் கிறிஸ்தவம் கி.பி முதலாம் நூற்றாண்டில் ரோம அரசன் காண்ஸ்டான்டைன் அதனை அரச மதமாக அறிவித்ததிலிருந்து தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியில்  மேற்கின் கிறிஸ்தவ மரபிற்கும், கீழை கலாசார மரபிற்கும், குறிப்பாக கிழக்கின் அரபு இஸ்லாமிய மரபிற்கும் முரண்பாடும், மோதல்களும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தன. மத்திய கிழக்கின் வரலாற்றில் நான்கு நூற்றாண்டுகளாக நிகழ்ந்த மாபெரும் சிலுவை போர்கள் (Crusades)இதற்கு சிறந்த உதாரணம். இரு தரப்பிற்கும் வெற்றியும், தோல்வியும் அளித்த இந்த சிலுவைப்போர் நவீன உலகில் கலாசார மோதல்களை குறிக்கும் சொல்லாடலாக பயன்படுத்தப்படுகிறது.  கடந்து போன வரலாற்றின் நாகரீக அரசுகளில் இதன் உக்கிரம் மிகக்கொடூரமாக இருந்ததின் விளைவு தான் நவீன சொல்லாடலாக இது தொடர காரணம்.

மேற்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றை பொறுத்தவரை கோட்பாடுகளில் அனுமானித்தல் அல்லது உய்த்துணர்தல் (Deductive) மற்றும் தொகுத்துணர்தல் அல்லது ஒப்பீட்டு முறைமை  (Inductive)ஆகியவற்றைக்கொண்டிருக்கின்றன. இதை உலகின் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். நாடுகளை தேடிய அதன் பயணம், கடல்வழி கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கோட்பாடுகள் ஆகியவை மேற்கின் உய்த்துணர்தலுக்கு உதாரணங்கள். கிழக்கின் தனித்தன்மையான அதன் பெரும் ஆன்மீக மரபு இதன் தொகுத்துணர்தல் அல்லது ஒப்பீட்டு முறைமைக்கு உதாரணம். உய்த்துணர்தல் கோட்பாட்டை பொறுத்தவரை அரிஸ்டாடில், பிதாகொரஸ் மற்றும் பிற கிரேக்க தத்துவவாதிகள் முன்னகர்த்தினர். அரிஸ்டாடில் அடுத்த தலைமுறை ஆலிவ் காய்கள் எப்படி இருக்கும் என்பதை அனுமானித்தார். இதனடிப்படையில் பகுத்தறிவு பூர்வமான முடிவுகளை கண்டறிய வேண்டும் என்பது அவரின் கருத்து. உதாரணமாக எல்லா ஆப்பிள்களும் பழங்களாகும். எல்லா பழங்களும் மரங்களில் வளர்கின்றன. ஆக எல்லா ஆப்பிள்களும் மரங்களில் வளர்கின்றன. முதலில் அனுமானித்த ஒன்றிலிருந்து இறுதி முடிவை எட்டுவது இதன் நோக்கமாகும். அதாவது பிரபஞ்சத்தின் ஒரு கருதுகோளிலிருந்து அல்லது அனுமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட முடிவை கண்டறிதல். இதனை அடிப்படையாகக்கொண்டு தான் மேற்கின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், சாதனைகள் நிகழ்ந்தேறின. கிழக்கை பொறுத்தவரை தொகுத்துணர்தல் அல்லது ஒப்பீட்டு முறைமை அதன் தத்துவார்த்த அடிப்படையாகும். இது ஒரு குறிப்பிட்ட கருதுகோளிலிருந்து அல்லது அவற்றின் தொகுப்பிலிருந்து ஒரு முடிவை அல்லது உண்மையை கண்டறிதல்.  பனிக்கட்டி குளிர்ச்சியாக இருக்கிறது. ஆக எல்லா பனிக்கட்டிகளும் குளிர்ச்சியே. இங்கு குளிர்ச்சி என்ற கருதுகோள் ஒரு முடிவை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இதன் நீட்சியில் கிழக்கின் பெரும்பாலான ஆன்மீக மரபு இதைத்தான்  சுட்டுகிறது. கன்பூசியம் முதல் செமிடிக் மதங்கள் வரை ஓர் இறுதி உண்மையை (Ultimate Reality)தான் தேடுகின்றன. குறிப்பிட்ட கருதுகோளிலிருந்து பரம்பொருளை அடைவது அதன் நோக்கமாகும். உதாரணமாக மகாயான பௌத்தம் மனித உடலைபற்றி குறிப்பிடுகிறது. உடல் வெவ்வேறு உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அவற்றை பிரிக்க முடியாது. நாம் அவற்றை பிரித்துணர்வதில்லை. அது போன்றே உலகமும் வெவ்வேறு தனிமங்களால் ஆனது. ஆனால் அவற்றை பிரித்துணரமுடியாது. அவை ஒன்றே. அதே நேரத்தில் இந்திய தத்துவமரபில் சாங்கியம், சார்வாகம் மற்றும் உலகாயத மரபுகள் மேற்கின் தத்துவ கோட்பாடுகளுக்கு இணையாக இருந்திருக்கின்றன. ஆனாலும் கிழக்கில் பெரும்பாலும் ஆன்மீக மரபு தான் தாக்கம் செலுத்தி வந்திருக்கின்றது. இந்த இடத்தில் தான் தத்துவார்த்த அடிப்படையில் கிழக்கும், மேற்கும் முரண்படுகின்றன. இதனடிப்படையில் சீனாவின் தாவோயிசம் மனித மனத்தை திறக்கும் போது இயற்கையை அறியலாம் என்றது. இயற்கையை  அறியும் போது சொர்க்கத்தை அறியலாம் என்றது. இதன் தொடர்ச்சியில் தாவோயிச சிந்தனையாளரான நிசிதான் கேய்ஜி மேற்கின் நவீனத்துவத்தை கிழக்கின் மத மனங்கள் வெற்றிக்கொள்ளும் என்றார். மேலும் சீனாவின் ஆன்மீக சிந்தனையாளரான ஜி சியான்லின் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். " நாம் உறுதியாக நம்புகிறோம். எவ்வளவு நாட்கள் என்பது பொருட்டல்ல. நமக்கான நாள் ஒன்று வரும். அப்போது உலகம் அமைதியாகும். மேலும் உலகம் ஒன்றே என்பது உண்மையாகும். இந்நிலையில் மேற்கை பொறுத்தவரை உலகமும், கடவுளும் வேறாகும். ஆனால் கிழக்கை பொறுத்தவரை உலகமும் கடவுளும் ஒன்றே. நாம் கடவுளல்ல. மாறாக கடவுளால் படைக்கப்பட்டோம். இதன் தொடர்ச்சியில் மேற்குலகிற்கும், கீழைநாடுகளுக்கும்  இந்த  பெரும் அம்சங்களில் வேறுபாடு இருக்கின்றன. ஆக மேற்கின் நாகரீகங்கள் பகுப்பாய்வு (Analysis)முறையை அடிப்படையாகக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கீழை நாகரீகங்கள் ஒருங்கிணைந்த (Integrated)முறையை உட்கொண்டிருக்கின்றன.

இடைக்கால மேற்குலகம் கீழை நாடுகளை பல வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு பலவிதமான கோட்பாடுகளையும், கருதுகோள்களையும் உற்பத்தி செய்தது. 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்சு போன்றவற்றின் காலனிய கோட்பாடு அவற்றுள் முக்கியமானது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் இவ்விரண்டும் உலகின் மூன்றில் இருபகுதி நிலப்பரப்பை தங்கள் காலனிகளாக கொண்டிருந்தன. மேலும் 19 ஆம் நூற்றாண்டில் மேற்கில் உருவான டார்வினிய கோட்பாடு, ஹெகலியம், மார்க்சியம், நீட்சேயின் மனிதனின் அதிகார விருப்புறுதி (Will to Power) இவை எல்லாம் மேற்கின் அறிவு பரப்பிலும், அரசியல் பரப்பிலும் அதிக தாக்கம் செலுத்தின. ஹிட்லர் இதனை அடிப்படையாகக்கொண்டு தான் தூய ஜெர்மானிய இனம் என்பதை வடிவமைத்தார். அவரின் யூத படுகொலை கருத்தாக்கமும் இதன் தொடர்ச்சி தான். டார்வினிய கோட்பாட்டின் பெரும் போராட்டம் தேசிய இனங்களுக்கான வாழ்வியல் கூறாக இருந்தன. இவற்றின் அடிப்படையிலிருந்து, அதன் சாராம்சத்தை உள்வாங்கிய ஒன்றாக இன, கலாசார, நாகரீக ரீதியிலான உயர்வு மனப்பான்மை ஐரோப்பியர்கள் மத்தியில் ஏற்பட்டது. மேலும் வியட்நாம் மீதான அமெரிக்க யுத்தம், 1991-2006 வரையிலான மத்திய கிழக்கு நாடுகள் மீதான அமெரிக்க எண்ணெய் போர்கள் இவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் கீழை நாடுகளை பின் காலனிய (Post Colonialism) தன்மைக்கு உட்படுத்தின.  அவற்றை சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக மேற்குலகம் ஆதிக்கம் செய்யும் நிலைக்கு கொண்டு சென்றன. மேலும் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கிய பல்வேறு தேசிய இனப்போராட்டங்களில் மடிந்து போனவர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் கீழைநாடுகளை சார்ந்தவர்கள் தாம். பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்றவை அதற்கான உதாரணங்கள். மேற்கு நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகக்குறைவு.

வரலாறு மற்றும் கலாசார ரீதியாக  கீழை நாடுகள் மீதான பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் தன்மை என்பது தர மற்றும் அளவு (Qualitative and Quantitative)மாறுபாட்டு ரீதியிலானது. இது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாவது வரை நீடித்தது. கீழை நாடுகளின் நறுமணப்பொருட்களின் வர்த்தகம், ஜவுளி மற்றும் தோல்பொருட்கள் இவற்றின் உற்பத்தி இவை எல்லாம்  காலனியத்தின் பொருளாயத நலன்களை உறுதிசெய்தன. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஐரோப்பிய யுகம் தலைகீழாக மாறியது. பிரிட்டனின் வல்லரசு தன்மை இழக்கப்பட்டு அமெரிக்கா வசம் மாறியது. இதன் தொடர்ச்சியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யுகமாக உலகம் மாறிப்போன பிறகு மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதற்கான அரசியல் மதிப்பை இழந்தன. 1945 க்கு பிறகு ஒவ்வொரு ஐரோப்பிய நாடும்  (கம்யூனிசம் அல்லது கம்யூனிசம் அல்லாதது என்ற வித்தியாசம் இல்லாமல்)கடந்த கால அனுபவங்கள் மற்றும் போருக்கு பிந்தைய அரசியல் தொன்மங்கள் அடிப்படையில் தங்களின் தேசிய பிம்பங்களை உருவாக்கிக்கொண்டன. இந்த கருத்தியல் இடைவெளி என்பது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளிடையே அரசியல் தொன்மங்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்காற்றின. இரு தரப்பினரும் தங்களுக்கிடையே இரும்புத்திரையை கடைபிடிக்க , தங்களின் கடந்த கால வரலாற்றை மீள்பரிசோதனை செய்ய உதவிகரமாக இருந்தன.

தற்போதைய உலக அரசுகளின் ஆட்சிமுறையில் மதசார்பின்மை(Secularism)என்ற கருத்தாக்கம் மேற்கின் கண்டுபிடிப்பு தான். இது நவீனத்துவத்தின் பின்விளைவு. அதாவது அரசுகள் எல்லா மதங்களையும் விட்டு விலகி இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த நாட்டு மக்களுக்கு மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் வேண்டும் என்பது தான் அதன் அடிப்படை. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் மதசார்பின்மை என்பது எல்லா மதங்களையும் சமமாக மதிப்பது. அதே நேரத்தில் மேற்கில் மதசார்பின்மை என்பது எல்லா மதங்களையும் சமமாக நிராகரிப்பது.மேலும் மத்திய கிழக்கு நாடுகள் மத சார்புள்ள அரசுகளால் ஆளப்படுகின்றன. நவீன உலகில் பரஸ்பர சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றிற்கு அரசுகள் மதத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். அரசிலிருந்து மதத்தை பிரிக்க வேண்டும் என்ற குரல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஒரு பிராந்தியம் பன்மயப்பட்ட மக்கள் தொகுதியினால் நிரம்பியிருந்தாலோ அல்லது ஒரே விதமான மக்கள் தொகுதியினால்  நிரம்பியிருந்தாலோ அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகள் அவற்றை விட்டு விலகி மதசார்பின்மை கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்த குரலின் நீட்சி.

பிரபஞ்சத்தின் இயக்கத்தில் அரசு என்ற  நிறுவனம் உருவாக்கப்பட்ட பிறகு அது தொடர்ச்சியான போர்களால் தான் ஆளப்பட்டு வந்திருக்கிறது.  குறிப்பாக இடைக்கால உலகம் காலனியமயப்பட்ட பிறகு அதன் உக்கிரமான அழிவுப்போர்களால் கீழைநாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மில்லியன் கணக்கில் மக்கள் செத்து மடிவதற்கு இவை காரணமாகி இருக்கின்றன. இதன் தொடர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டில் தான்  வரலாற்றின் அழிவுபோர்கள் குறித்த நுண்ணுணர்வு சர்வதேச சமூகத்திற்கு ஏற்பட்டது. குறிப்பாக கீழைநாடுகளின் சிந்தனையாளர்கள், கலைஞர்கள், அரசியல் அறிஞர்கள் ஆகியோர் மத்தியில் இது குறித்த மாற்றுச்சிந்தனைகள், கருதுகோள்கள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டை பொறுத்தவரை அது உலக அரசியலின் பெருங்கதையாடல். அதாவது கடந்த காலத்தை கையாளுதல்  (Dealing with the past) குறித்த கருத்தாக்கம். நூற்றாண்டுகளில் கடந்து போன நினைவுகளிலிருந்து தற்காலத்தை நோக்கியதாக அது இருந்தது. கடந்து போன மனிதனின் சுவடுகள், வரலாறுகள், சாதனைகள், செயல்பாடுகள் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்து கொள்வது அதன் நோக்கமாக இருந்தது. மேலும் வரலாற்றின் வெற்றி தோல்விகள், படையெடுப்புகள், அழிவுகள், ஆதிக்கம், ஒடுக்குமுறை போன்றவற்றை ஆராய்தல், அதற்கான தீர்வுகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பது இதன் அடிப்படையில் தான். கடந்த கால அடிப்படையில் அரசியல் அரங்கிலிருந்து இரத்தமும், பணமும் அடுத்த தலைமுறைக்கு மாற்றம் செய்யப்படக்கூடாது என்பது அதன் மற்றொரு நோக்கமாக இருந்தது. இதன் மூலம் தேசியஇனங்கள் மற்றும் பிற இனக்குழுக்களிடையே சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று நம்பியது. மேலும் கிழக்கின் முந்தையை எதிரிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் உலக சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் சிவில் ஒழுங்கை கட்டமைப்பதுடன், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதன் தொடர்ச்சியில் கீழை உலகம் தற்போது ஆசியா ஒரு முறையியல் (Asia as a method)என்ற சிந்தனைப்போக்கை கட்டமைத்து வருகிறது. இது தொடர்பான கருத்தியல் செயல்முறைகள் மற்றும் அவற்றின் நடைமுறை சாத்தியப்பாடுகள் குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அறிவுலகம் பரிசீலித்து வருகிறது.

எண்பதுகளில் உலக வர்த்தக அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட  உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கோட்பாடுகளுக்கு பிறகு சமூக மற்றும் கலாசார அம்சங்களும் இதனோடு கீழை நாடுகள் மீது திணிக்கப்பட்டது பற்றி விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது. இன்றளவும் விவாத பொருளாக இருப்பது இது தான். இதன் நீட்சியில் கீழை நாடுகளுக்கும், மேற்குலகிற்குமான தற்போதைய முரண்பாட்டில் கலாசாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. கலாசாரம் என்ற சொல் முதன் முதலாக ரோமானிய அறிஞரான சீசரால் கையாளப்பட்டது. ஆன்மாவை  பயிரிடுதல் (cultivation of soul)என்பதாக அவர் குறிப்பிட்டார். இது தொடக்கத்தில் நிலம் சார்ந்த விவசாய சொல்லாக தான் இருந்திருக்கிறது. தமிழில் பண்பாடு என்றும் இதனை குறிப்பிடுகிறார்கள். நிலத்தை பண்படுத்துதல் என்பதிலிருந்து இது தொடங்குகிறது.  17 ஆம் நூற்றாண்டு அறிவொளிகால ஐரோப்பாவில் மறு அறிமுகம் செய்யப்பட்டு  விரிந்த அர்த்தத்தில் கையாளப்பட்டது. அதாவது பரிணாமமடைந்த மனித திறன். (Evolved Human Capacity )மேலும் மரபணு சாராத சமூக மனிதர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், மொழி சார்ந்த உறவாடல்கள் போன்ற அனைத்துமே இந்த கலாசார விளக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மானுடவியல் (Anthropology)ஆய்வுகளில்  கலாசாரம் (Culture)என்ற சொல் முக்கிய ஆய்வுகூறாக மாறியது. அமெரிக்க மானுடவியலாளர்கள் இதனை இரு அர்த்தங்களில் விளக்குகின்றனர்.

1.  பரிணாமமடைந்த மனித திறனானது அதன் அனுபவங்களை வகைப்படுத்துவது மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துவது. மேலும் கற்பனா மற்றும் படைப்பாக்க ரீதியாக செயல்படுத்துவது

2. வித்தியாசமாக வாழும் வேறுபட்ட மக்களின்  அனுபவங்களை வகைப்படுத்துவது அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவது. அதனை கற்பனா மற்றும் படைப்பாக்க ரீதியாக செயல்படுத்துவது.

மேற்கண்ட இரு அர்த்தங்களும் குறிப்பிட்ட காலகட்டம் வரை மேற்குலகில் கலாசாரம் குறித்த விளக்கமாக இருந்தன. இருபதாம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் உருவான குறியியல் (Semiotics) ஆய்வுகள் மற்றும் அமைப்பியல் முறைகள் கலாசாரம் குறித்த குறியீட்டு ரீதியான விளக்கத்தை அளித்தன. பிரதேசங்கள் கலாசார ரீதியாக வேறுபடுவது குறித்த விளக்கத்தை அவை அளித்தன. குறிப்பாக ஒரே மொழி கொண்ட பிரதேசங்களில் மொழியானது  வட்டார வழக்காறுகளாக கிளைவுற்று  அது சார்ந்த பல கலாசாரமாக வித்தியாசப்படுகிறது. இது மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தும்.  கலாசாரம் என்பது பிரதேச ரீதியாக வித்தியாசப்படும் சூழலில் ஒவ்வொரு பிரதேசங்களும் அவர்களுக்கான கலாசார விழுமியங்களை, கூறுகளை, நடைமுறைகளை தொடர்வது உசிதமானது தான். அந்த கலாசார கூறுகள் குறிப்பிட்ட கலாசார சமூகத்தின் சகமனிதர்களை ஒடுக்கும் கருவியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை தக்கவைப்பதே சிறந்தது. மேற்கு நாடுகளில் கருப்பர்களுக்கு எதிரான நிறவெறியும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் சாதிய ஒடுக்குமுறையும், சமூக கலாசார நடைமுறைகள் எப்படி ஒடுக்குமுறை கருவியாக மாறுகின்றன என்பதற்கான உதாரணங்கள். இந்நிலையில் மேற்கின் பரிணாமமடைந்த கலாசார கூறுகள் கீழை நாடுகளில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உணவு மற்றும் உடை சார்ந்த கலாசார அம்சங்கள் முக்கியமானவை. மேற்கின் குளிர்ந்த, கோடைகால தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ற உடைகள், உணவு உட்கொள்ளலில் தட்ப வெப்பத்தின் அடிப்படையிலான நுண்கிருமிகள் சார்ந்த அறிவியல் முறையோடு இணைந்த அவர்களின் கரண்டி  கலாசாரம் (Spoon Culture) இவையெல்லாம் மேற்கின் தனித்துவமான கலாசார நடைமுறைகள். கீழை நாடுகள் தட்பவெப்ப அடிப்படையில் இவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்றன. இந்த சூழலில் உலகமயமாக்கல் என்ற பெயரில் உணவு, உடை சார்ந்த மனித நடைமுறைகளை நாம் உலகமயப்படுத்த முடியாது. ஆனால் இதை முதலாளித்துவ நடைமுறையாகவே  பார்க்க வேண்டியதிருக்கிறது. காரணம் தற்போதைய உலகமயமாக்கல் என்பது வெறும் பொருளாதாரம் என்பதை தாண்டி சமூக கலாசாரம் என்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதையே மிகச்சரியான ஒன்றாக, புரட்சிகரமானதாக திணிக்க முயலுகிறது.  மேலும் மேற்கை பொறுத்தவரை உடை என்பது பெரும்பாலும் தட்பவெப்ப காரணிகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. மாறாக கீழைநாடுகளில் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் உடை என்பது தட்பவெப்ப காரணிகள் என்பதை தாண்டி வாழ்க்கைபாங்கு மற்றும் வெளிப்படுத்தல் என்ற காரணிகளின் அடிப்படையில் தான் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றது. உச்சி பிளக்கும் வெயில் காலங்களில் ஜீன்ஸ் பேண்ட் அணிவதும், ஜவுளி கடைகளில் ஆடையை தேர்ந்தெடுக்க அதிக நேரம் செலவழிக்கப்படுவதையும் அவதானிக்கும் போது இந்த தேர்ந்தெடுப்பு காரணிகளை நாம் கண்டறிய முடியும்.

குடும்பம் என்ற சமூக நிறுவனம் மேற்கு நாடுகளை விட கீழை நாடுகளில் தான் அதுவும் இந்தியாவில் தான் மிக வலுவாக இருக்கிறது. இவை  வரலாற்று அடிப்படையிலான  நாகரீக காலகட்டத்தின் தொடர்ச்சி என்றாலும் மேற்குலகத்துடன் முழுமையாக இயைந்து விட முடியாது என்றே தோன்றுகிறது. அதற்கான சொந்த முரண்களை இது உள்ளடக்கி உள்ளது. புவிகலாசாரம் (Geo Culture)அதற்கான மற்றொரு முரணாக இருக்கிறது. குறிப்பாக ஆண்- பெண் திருமண உறவுகள், குடும்ப அமைப்பு முறை,  ஓரின திருமணங்கள் போன்ற குடும்பம் சார்ந்த சமூக கட்டமைப்புகளில் மேற்குலகிற்கும், கிழக்கிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. இவை தற்போது இரு பிராந்தியங்களிலும் விவாதப்பொருளாக இருக்கின்றன. இது தொடர்பான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கிழக்கின் குடும்ப அமைப்பு முறையை பொறுத்தவரை பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரண்டும் நிரம்பிய ஒன்றாக இருக்கிறது. சில கீழை நாடுகளில் அது பெரும் அதிகார நிறுவனமாக செயல்படுகிறது.

குடும்ப நிறுவனம் என்பதன் தொடர்ச்சியில் மதிப்புகள் (Values)என்ற கருதுகோள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்னும் நிலைகொண்டிருக்கிறது.  ஒரு வகையில் இந்த சமூகங்களின் பெரும் பலமாகவும் அவை இருக்கின்றன. மதிப்பு என்பது வெறுமனே சமூகங்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் அல்ல.  மேலும் அவை நம்பிக்கைகளோ அல்லது தீர்ப்புகளோ அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைக்கு இடையில் ஊடாடும், நகரும் செயல்பாடுகள் தான். இம்மானுவேல் காண்ட் இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அறிவற்ற மதிப்பு என்பது குருட்டுத்தனமானது. உணர்ச்சியற்ற மதிப்பு என்பது வலுவற்றது. செயலற்ற மதிப்பு என்பது வெற்றிடமானது. இந்தியாவின் கிராமங்களில் இந்த மதிப்புகளின் எதார்த்த தன்மையை இன்றும் பார்க்க முடியும். இந்த மதிப்புகளின் அடிப்படையில் கிழக்கிற்கும், மேற்கிற்கும் முரண்பாடுகள் இருக்கின்றன. நிலங்களில் இருந்து தொடங்கி குடும்ப செயல்பாடுகள் வரை இது நீள்கிறது. கிழக்கின் விவசாயம் சார்ந்த மதிப்புகளில் கூட மேற்கிற்கு நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் விவசாய விளை பொருட்களை சில மேற்கு நாடுகள் வெறுப்பதன் பின்னணியை நாம் இதனோடு சேர்த்து புரிந்து கொள்ள முடியும்.

மேற்கு என்ற குடையில் கீழ் ஐரோப்பா, அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்கள் வருகின்றன. கிழக்கு என்பதில் ஆசியா மற்றும் ஆப்ரிக்க பிராந்தியங்கள் உள்ளடங்குகின்றன. இவற்றின் பிராந்திய தன்மையின் முரண்களும், சிக்கல்களும் வரலாற்று காலம் தொட்டு தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓருலகம், மெய்நிகர் உலகம் (Virtual World), உலக கிராமம் (Global Village)போன்ற கருத்தாக்கங்கள் உலவி வரும் இந்த சூழலில் இரண்டிற்குமான இயல்பான முரண்கள் மற்றும் அதன் பரஸ்பர உறவாடல்கள் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் மேற்கும், கிழக்கும் அதற்கான இயல்பான முரண்களோடும், அதே நேரத்தில் நீதியோடும், மனித மாண்புகளோடும் தங்களுக்கான பாதையில் நகர்வதே உலக இயக்கத்திற்கு அவசியமான ஒன்று.



Tuesday, May 5, 2009

கிழக்கு திரும்பும் மேற்கின் கதை- மாக்சிம் ரேடின்சன் ஓர் அறிமுகம்




பௌதீக உலகின் வட்டப்பாதையிலான சுழற்சியில் திசைகள் இருப்பை குறிக்கின்றன. அந்த இருப்பின் வடிவமானது நிலப்பகுதி ஒன்றின் வரைவெல்லையாக மாறுகிறது. மேற்கு-கிழக்கு என்ற பிரிவினை இந்த நிலப்பகுதியை சார்ந்தது. அதன் புறச்சூழல், காலநிலை, மக்கட்தொகுதி, குறிப்பிட்ட கலாசாரம் இவற்றை சார்ந்து துருவ இனங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நாகரீகங்களின் பிறப்பிடமாகவும், கலாசார பரிணாமங்களின் புகலிடமாகவும் வரலாற்றில் கிழக்கத்திய சமூகம் முன்னுக்கு வருகிறது. தனித்த விதி ஒன்றின் இயங்கிடமாக கிழக்கத்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த பார்வைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவே செமிட்டிக் நாகரீகம் மற்றும் அதன் கலாசாரம் குறித்த பார்வை மேற்கத்திய தத்துவ மற்றும் சமூகவியலாளர்களால் ஆய்வுபூர்வமாக பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு நிலையில் இதன் தொடர்ச்சியில் செமிட்டிக் மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் குறித்த வரலாற்று, சமூகவியல் ரீதியான அணுகுமுறை இவர்களால் முன்வைக்கப்பட்டது. மதங்கள் கற்பிக்கும் புனிதங்களின் எல்லையை தாண்டியும், அதனால் தொட்டுணர முடியாத பல்வேறு உணர்வோட்டங்களின் துடிப்பை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த வரிசையில் மாக்சின் ரேடின்சன் முக்கியமானவர். பிரான்சுக்கு புலம் பெயர்ந்த போலந்து வம்சாவளிசிந்தனையாளரான இவர் அறுபது மற்றும் எழுபதுகளில் பிரான்சின் அறிவுத்துறை வட்டாரங்களில் பேசப்பட்ட ஓர் அறிவு ஜீவி. வரலாறு மற்றும் சமூகவியல் துறையின் நுட்பணர். 1915 ஆம் ஆண்டு பிரெஞ்சு கட்டுப்பாட்டு பகுதியான மார்சிலி என்ற புராதன நகரத்தில் மாக்சிம் ரேடின்சன் பிறந்தார். இவரின் பெற்றோர் யூத பின்னணியை கொண்டவர்கள். இவரின் தந்தை மார்க்சிய பின்னணியை கொண்டவர். போலந்தின் நகரமொன்றில் பிரபல ஜவுளி வியபாரியாக இருந்தார். டிராஸ்கி மற்றும் லெனினுடன் தொடர்பு கொண்டவராகவும் அவர்களுடன் உரையாடல் நடத்தியவராகவும் இருந்தார். பின்னர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்த இவரின் தந்தை அங்கு வணிகத்தில் கவனம் செலுத்தினார். நாற்பதுகளில் ஹிட்லரின் யூத இன அழிப்பிற்கு இவருடைய குடும்பம் பலியானது. ஆஷ்விச் முகாமிற்கு கடத்தப்பட்ட இவருடனான குடும்பம் இவர் மட்டும் தப்பித்தலுடன் மரணத்தை தழுவியது. மாக்சிம் ரேடின்சனுக்கு இளமைகாலத்தில் தன் தந்தையை போன்றே அறிவுதுறை விஷயங்கள் மீதான நாட்டம் ஏற்பட்டது. மார்க்சிய கோட்பாடுகளை ஆர்வத்துடன் ஆழமாக படிக்க தொடங்கினார். ஒரு விதத்தில் அவரின் அப்போதைய நாட்டமும் அதுவாக தான் இருந்தது. 1937 ல் பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். பின்னர் ஸ்டாலினிய காலகட்டத்தில் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக அதிலிருந்து விலகி தனிமனிதராக செயல்பட்டார்.இந்த விலகலை பற்றி குறிப்பிட்ட ரேடின்சன் கட்சி அமைப்பு என்பது மத நிறுவனம் மாதிரி இருக்கிறது என்றார். 1958 ல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முழுமையாக விலகினார். இதன் பிற்பாடு பிரான்சு பல்கலைகழகத்தின் மொழியியல் பிரிவில் இணைந்து யத்திஷ், ஹிப்ரு, அரபி மொழிகளை படித்தார். பிற்காலத்தில் அங்கு ஓரியண்டல் துறையில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரான்சில் யூதர்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட சிரியாவிற்கு சென்றார். டமாஸ்கஸ் பிரெஞ்சு நிறுவனத்தில் இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு தான் ரேடின்சன் இஸ்லாம், அரபுலகம் அதன் வரலாற்று, சமூக ரீதியான பின்னோக்க பார்வையை விரிவுபடுத்திக் கொண்டார். பிரான்சு பல்கலைகழகத்தில் ஓரியண்டல் துறையில் வேலைக்கு சேர்ந்த காலத்தில் அவரின் புகழ்பெற்ற முதல் நூலான "முஹம்மது" வெளிவந்தது. இஸ்லாமிய மத ஸ்தாபகரான முஹம்மது நபியை பற்றிய விரிவான அறிமுகமும், இஸ்லாத்தின் தோற்றத்தை வரலாற்று, சமூக ரீதியில் தத்துவ மற்றும் சமூகவியலின் துணைகொண்டு இந்நூல் ஆராய்ந்தது. வெளிவந்த காலத்தில் மேற்கிலும், மத்திய கிழக்கு பகுதியிலும் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அரபு பிரதேசத்தின் சில பகுதிகளில் இஸ்லாமிய மதத்திற்கு விரோதமானது என்ற பெயரில் இந்நூல் தடை செய்யப்பட்டது.மாக்சிம் ரேடின்சனின் நபி பற்றிய இந்த நூல் மான்கெமரி வாட்டின் முஹம்மது நபி பற்றிய நூலை ஒட்டி இருந்தது. அதன் பார்வை விசாலமானதாக, ஆழ்ந்த வரலாற்று செறிவை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பிறகு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் ரேடின்சனின் அடுத்த நூலாக "Islam and Capitalism" வெளிவந்தது. அதுவரை ஐரோப்பிய சமூகம் இஸ்லாமிய மதத்தின் பொருளாதார பார்வை குறித்து கொண்டிருந்த கற்பிதங்களை தகர்த்தது. குறிப்பாக மார்க்ஸ் வெபரின் இஸ்லாமிய கலாசாரம் குறித்த கருத்துகளுக்கு விரிவான விளக்கம் அளித்தது. இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு, உள்முரண்பாடுகள், முதலாளித்துவம் ஐரோப்பாவில் வேர்கொண்ட முறை சோசலிசம், மார்க்சின் அந்நியமாதல், நிலப்பிரபுத்துவம் குறித்த பார்வை , ஆசிய உற்பத்தி முறை இவற்றை குறித்து விரிவாக இந்நூல் ஆராய்ந்தது. மார்க்சிய அடிப்படையில் நின்று கொண்டு இஸ்லாத்தை அணுகிய ரேடின்சன் முதலாளித்துவத்தை பொறுத்தவரை இஸ்லாம் எவ்விதமான எதிர்நிலைபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவிற்கு வந்தடைந்தார்.


மாக்சிம் ரேடின்சனை மற்ற பிரஞ்சு சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திய ஒன்று அவரின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாடாகும் தான் அடிப்ப்டையில் யூத மரபை சார்ந்தவராக இருந்த போதிலும், இஸ்ரேலுக்கு எதிராக நின்றார்.பாலஸ்தீன் உரிமை போராட்டம் குறித்து ரேடின்சன் 1967 ல் சார்த்தரின் ஆய்விதழான les tempes moderne ல் Israel a colonial fact என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அதே நேரத்தில் அவரின் போராட்ட ஆதரவு நிலைபாடும் கூட அடிப்படைவாத குழுக்களின் நிலைபாட்டிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அவரின் பாலஸ்தீன் நிலைபாடு இரு பார்வைகளை கொண்டிருந்தது.1. பாலஸ்தீனியர்களின் போராட்டம் அவர்களின் யூத வெறுப்பின் அடையாளமே. 2. பாலஸ்தீனியர்கள் தங்கள் போராட்டத்தை மதத்திற்கு அப்பாற்பட்ட வடிவத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும். இந்த நிலைபாட்டின் மூலம் ரேடின்சன் எட்வர்ட் செய்த் கருத்துடன் ஓரளவு உடன்படுகிறார். இன்னொரு வகையில் அவரின் சியோனிச எதிர்ப்பு கருத்தாக்கம் இரு பார்வைகளை கொண்டிருந்தது. 1. உலகம் முழுவதும் உள்ள யூதர்களையும், யூத சந்ததியினரையும் அவர்களின் அடையாளங்களை துறந்து ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவருதல் என்பது ஆபத்தானது. 2.பாலஸ்தீன் பகுதிகளை யூத மயப்படுத்தி பாலஸ்தீனியர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவர்களை அங்கிருந்து விரட்டுதல். மேற்கண்ட விஷயங்களுக்காக ரேடின்சன் இஸ்ரேலிய எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டிருந்தார். மேலும் பாலஸ்தீனியர்கள் பிரான்சில் பிரஞ்சு மக்களை போன்றும், இங்கிலாந்தில் ஆங்கில மக்களை போன்றும் மீறப்படாத சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றார். அவர்களின் உரிமை போராட்டம் பிளவுபடாத மனநிலையிலிருந்து வெளிப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குற்றங்களை சமரசமற்ற நோக்கோடு எதிர்த்தார். மேலும் அரபு சமூகத்தோடு, அரபு பார்வையாளர்களோடு அவரின் கருத்து தோற்றப்பாடு விமர்சன பூர்வமாக இருந்தது. பாலஸ்தீன் முரண்பாடு பற்றிய அவரின் நிலைபாடு அறிவார்த்தமாக இருந்தது. இஸ்ரேலிய யூதர்களும் பாலஸ்தீனிய அரபுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முடியும். மேலும் இஸ்ரேல் என்பது ரேடின்சனை பொறுத்தவரை வெறுமனே காலனிய குடியேற்ற அமைப்பு அல்ல. மாறாக அது ஒரு தேசிய உண்மை கூட. யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சுயமரியாதை மீது மிகுந்த கூட்டுரிமைகளை கொண்டுள்ளார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவை மற்றொன்றை ஆதிக்கம் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத நிலையில் அரசியல் மட்டத்தில் அந்த குழுக்கள் வேறுபட்ட சமூகங்களாக இருக்கும் நிலையில், அவர்களின் நலன்களும், உள்ளாசைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான அறிவுஜீவி நிலைபாட்டை மேற்கொண்ட ரேடின்சன் அவ்வப்போது யூத அடிப்படைவாதிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். அவர்கள் இவரை யூத விரோதியாக பார்த்தனர். 1967 அரபு-இஸ்ரேல் போரை கடுமையாக எதிர்த்த ரேடின்சன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வரலாற்று ரீதியாக தொகுத்து Israel and the Arabs என்ற நூலை எழுதினார். இஸ்ரேல் விவகாரத்தின் நதிமூலத்திலிருந்து அதன் பரிணாம கட்டம் வரையான விமர்சன பார்வையும், ஆழ்ந்து அகன்ற அறிவு தேடலும் இந்நூல் முழுவதும் நிரம்பி இருந்தது. அதன் பிறகு Marxism and the Muslim world வெளிவந்தது. இஸ்லாமிய நாடுகளுக்கும் , சோவியத் யூனியனுக்குமான உறவு முறை, முதலாளித்துவத்தை இஸ்லாம் அணுகும் முறை, இஸ்லாமிய நாடுகளின் நிலவியல் அமைப்பு, சோசலிச அமைப்பு முறை ஆகியவற்றை குறித்த பன்முக விமர்சன நோக்காக இது இருந்தது. இதன் நீட்சியில் ரேடின்சன் இஸ்லாம் குறித்த சமூக, பொருளாதார கோட்பாட்டு தரவுகளை முன்வைத்தார். அது மேற்கில் அதிகம் கவனிக்கப்பட்டது.

மாக்சிம் ரேடின்சனை பொறுத்தவரை ஐரோப்பா புரிந்து கொள்ளாத உலகம் பற்றிய இரகசிய கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார். சாத்வீகமான நெகிழ்வு முறையோடு அதன் நகரல் இருந்தது. ஐரோப்பியனாக இருந்து கொண்டு ஓரியண்டல் சிந்தனை தளத்தை நோக்கி அவரின் இளமை கால செயல்பாடுகள் திரும்பின. குறிப்பாக அரபுலகம், இஸ்லாம் பற்றிய அவரின் தேடலானது அவரை நட்சத்திர தகுதி பெற்ற அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்த்தியது.பின் நவீனத்துவ சிந்தனையாளர் என்ற கட்டத்துக்கு வந்த ழாக் தெரிதாவின் நண்பராக ரேடின்சன் இருந்தார். அவருடன் பல உரையாடல்கள் நடத்தி இருக்கிறார். பிரபல சோவியத் வரலாற்றாசிரியரான ஐசக் டொயிஸ்டர் இவர்கள் இருவரையும் "யூதமற்ற யூதர்கள்" என்றார். யூதர்களாக இருந்து கொண்டு யூத தேசியத்துவத்தின் அபாயத்தை எதிர்த்தவர்கள் என்ற அர்த்தம் படியாக அந்த வெளிப்பாடு இருந்தது.மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய வரலாற்றில் மார்க்சிய அடிப்படைகளில் இருந்து கொண்டு இஸ்லாம் மற்றும் பிற மதங்களை அணுகிய அவரின் பார்வை தத்துவ வரலாற்றில் புதிய தரிசனமாக இருந்தது. மேலும் மாக்சிம் ரேடின்சனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை இருந்தது. குறிப்பாக செமிட்டிக் மொழிகள் அனைத்தும் அவரின் மொழிக்கிடங்கில் நிறைந்து இருந்தன. இஸ்லாம் மற்றும் அரபுலகம் குறித்து அறிவதற்கு அவருக்கு இது உதவிகரமாக இருந்தது. தத்துவ வாதிகள் தங்களுக்கான கோட்பாட்டை தானே வடிவமைக்கிறார்கள் என்பதற்கு மாக்சிம் ரேடின்சன் உதாரணமாக இருந்தார். 2004 ஜனவரியில் அவரின் மரணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அதற்குரிய சிந்தனை வெறுமையை விட்டு சென்றிருக்கிறது. மேற்கத்திய யூதராக இருந்து கொண்டு மத்திய கிழக்கை ஆராய்ந்த மாக்சிம் ரேடின்சன் அந்த வரலாற்றின் எல்லையை அதிக தூரம் கடந்த தவிர்க்க முடியாத நிழலாக இருக்கிறார்.


- உயிரோசை